under review

64 சிவவடிவங்கள்: 3–முகலிங்க மூர்த்தி

From Tamil Wiki

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று முகலிங்க மூர்த்தி.

முகலிங்க மூர்த்தி

முகலிங்க மூர்த்தி – விளக்கம்

64 சிவ வடிவங்களில் மூன்றாவது மூர்த்தம் முகலிங்க மூர்த்தி. லிங்கத்தில் முகம் அமைந்திருந்தால் அது முகலிங்க மூர்த்தி. முகலிங்க வடிவங்களில் நான்கு வகைகள் உள்ளன. அவை,

  • ஆட்யம்
  • அநாட்யம்
  • சுரேட்டியம்
  • சர்வசமம்
ஆட்யம்

1001 லிங்கங்களைக் கொண்ட வடிவம் ஆட்யம்.

அநாட்யம்

அநாட்ய லிங்கத்தில் திருமுகங்கள் இருக்காது. தனி லிங்கமாகவே காட்சி தரும்.

சுரேட்டியம்

108 லிங்கங்களைக் கொண்டது சுரேட்டியம்.

சர்வசமம்

சர்வசமம் என்பது ஐந்து திருமுகங்களைக் கொண்டிருக்கும். அவை, ஈசானம், தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம். பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவ ரூபங்களைக் குறிப்பதே முகலிங்கம். இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றனர்.

ஐந்தொழில்கள்

பிரம்மா படைக்கும் தொழிலையும் விஷ்ணு காக்கும் தொழிலையும் ருத்ரன் அழிக்கும் தொழிலையும் மகேஸ்வரன் மறைக்கும் தொழிலையும் சதாசிவன் அருளும் தொழிலையும் செய்கின்றனர். இந்த ஐவருக்கும் ஆதார சக்தியாக உள்ளவரே பரசிவம் என்னும் பரமசிவம்.

முகலிங்கம்

முகலிங்க வகைகள்

முக லிங்கங்களில் ஐந்து வகைமைகள் உள்ளன. அவை,

  • ஏகமுக லிங்கம்
  • துவிமுக லிங்கம்
  • திரிமுக லிங்கம்
  • சதுர்முக லிங்கம்
  • பஞ்சமுக லிங்கம்
ஏகமுக லிங்கம்

லிங்க வடிவங்களில் ஒரு முகம் கொண்டது ஏகமுக லிங்கம். இது கிழக்கு நோக்கி, தத்புருஷமாக அமைந்திருக்கும். இந்த லிங்கம் சிவாலயங்களின் நிருதி மூலையில் அமைவதால் ‘நிருதி லிங்கம்’ என்றும் அழைக்கப்படும்.

துவிமுக லிங்கம்

லிங்க வடிவங்களில் இரண்டு முகங்களைக் கொண்டிருப்பது துவிமுக லிங்கம் அல்லது இரு முக லிங்கம். சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கில் தத்புருஷமாகவும், மேற்கில் சத்யோஜாதமாகவும் முகங்கள் அமைவதே துவிமுக லிங்கம்.

திரிமுக லிங்கம்

லிங்க வடிவங்களில் மூன்று முகங்களைக் கொண்டிருந்தால் அது திரிமுக லிங்கம் என அழைக்கப்படுகிறது. பாணப் பகுதியில் கிழக்கில் தத்புருஷம் வடக்கில் வாமதேவம் தெற்கில் அகோரம் அமைந்திருக்கும் லிங்கம், திரிமுக லிங்கமாகும்.

சதுர்முக லிங்கம்
சதுர்முக லிங்கம்

லிங்க வடிவங்களில் நான்கு முகங்களைக் கொண்டிருப்பது சதுர்முக லிங்கம். சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கில் தத்புருஷம் மேற்கில் சத்யோஜாதம் வடக்கில் வாமதேவம் தெற்கில் அகோரம் என நான்கு முகங்கள் அமைந்திருக்கும்.

பஞ்சமுக லிங்கம்

லிங்க வடிவங்களில் ஐந்து முகங்கள் இருப்பின் அது பஞ்சமுக லிங்கம். கிழக்கில் தத்புருஷமாகவும், மேற்கில் சத்யோஜாதமாகவும் வடக்கில் வாமதேவமாகவும் தெற்கில் அகோரமாகவும் அமைந்திருக்கும். நான்கு திசைகளில் நான்கு முகங்களுடன், கிழக்குத் திசையில் கூடுதலாக ஒரு முகத்துடன் கூடி ஐந்து முகங்களுடன் அமைவதே பஞ்சமுக லிங்கம்.

ஷண்முக லிங்கம் என்னும் ஆறுமுக லிங்கம்

லிங்க வகைகளில் ஆறுமுகங்கள் கொண்ட ஆறுமுக லிங்கம் என்னும் ஷண்முக லிங்கம் அரிதானது. ஆறுமுகங்கள் கொண்ட ஆறுமுக லிங்கத்தில் நான்கு முகங்கள் நான்கு திசைகளை நோக்கியும் ஐந்தாவது முகமான ஈசான முகம் உச்சியில் வானத்தை நோக்கி ஊர்த்துவ முகமாகவும், ஆறாவது முகம் கீழ் நோக்கி அதோ முகமாகவும் அமைந்திருக்கும்.

சிவபெருமான், இந்த ஆறு முகங்களின் நெற்றிக் கண்களில் விளைந்த நெருப்புப் பொறிகளால் முருகனைப் படைத்தார் என்பது புராணக் கருத்து. இந்த வகை லிங்கம் தற்காலத்தில் வழிபாட்டில் இல்லை.

வழிபாடும், பலன்களும்

முகலிங்க மூர்த்தியைப் பல தலங்களில் தரிசிக்கலாம் என்றாலும் குறிப்பிட்ட சில தலங்களில் உள்ள முகலிங்க மூர்த்தம் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவற்றுள் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள முகலிங்க மூர்த்தமும் ஒன்று. இங்கு சிவபெருமான், மூன்று முகங்களோடு திரி லிங்க வடிவில் காட்சி தருகிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சிக்க, விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர் என்று தொன்மம் கூறுகிறது.

காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முகலிங்க மூர்த்தமும் சிறப்பானது. அதுபோல கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூரில் அமைந்துள்ள முகலிங்க மூர்த்தியும் மிகுந்த சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் ஆலயம், திருவானைக்காவல் தலம், வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயம் எனப் பல இடங்களில் பல்வேறு வகை முகலிங்கங்களைத் தரிசிக்கலாம்.

முக லிங்கங்களை வழிபடுவதால், இம்மையில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் மறுமையில் சிவ சாயுஜ்யமும் கிடைக்கும் என்பது புராண நம்பிக்கை.

உசாத்துணை


✅Finalised Page