வேல் விருத்தம்
வேல் விருத்தம் (பொ.யு.பதினைந்தாம் நூற்றாண்டு) அருணகிரிநாதரால் பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். முருகப்பெருமானின் வேல் இந்நூலில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.
நூல் அமைப்பு
தெய்வங்களைத் தோத்திரம் செய்வது போலத் தெய்வங்களின் ஆயுதங்கள், வாகனங்கள், கொடிகள் போன்றவற்றையும் போற்றித் துதித்தல் மரபு. திருமாலின் ஐவகைப் படைக் கருவிகளையும் துதித்துப் பாடப்பட்ட நூல், 'பஞ்சாயுத ஸ்தோத்ரம்'. திருமாலின் வாகனமும் கொடியுமான கருடன் மீது பாடப்பட்ட நூல் கருட ஸ்தோத்ரம். இவ்வகையில் முருகனின் ஆயுதமான வேல் மீது அருணகிரிநாதரால் பாடப்பட்ட துதிப் பாடல் வேல் விருத்தம்.
உள்ளடக்கம்
வேல் விருத்தத்தில் 'மகரமளறு' என்ற பாடல் தொடங்கி, 'வலாரியல லாகுலமி' வரை பத்துப் பாடல்கள் இடம்பெற்றன. இந்நூலின் முருகன் கைவேலின் சிறப்பு, பெருமை, அசுரரை வதைத்த விதம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேலின் பெருமை
அறிவை அறியச் செய்யும் அறிவின் உருவாக அமைந்தது வேல். அறிவு ஆழமாக இருக்கும்; பரந்து விரிந்து விளங்கும்; கூர்மையாகத் திகழும். அவ்வாறே வேலும், அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் அமைந்துள்ளது. அறியாமை இருள் அகற்றி அறிவொளி அருள்வது வேல். வேல் கொன்டு சூரனை வதம் செய்தார் முருகப் பெருமான். பராசக்தியின் ஆற்றல் வடிவமே வேல்.
பாடல் நடை
வேலின் சிறப்பு
மகரமள றிடைபுரள உரககண பணமவுலி
மதியுமிர வியுமலைய வே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்
சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளமிடவே
செகசிரப கிரதிமுத னதிகள்கதி பெறவுததி
திடரடைய நுகரும் வடிவேல்
தகரமிரு கமதமென மணமருவு கடகலு<ழி
தருகவுளு முறுவளெயிறுந்
தழைசெவியு நுதல்விழியு முடையவொரு கடவுள்மகிழ்
தருதுணைவ னமரர் குயிலுங்
குகரமலை யெயினர் குல மடமயிலு மெனவிருவர்
குயமொடமர் புரியுமுருகன்
குமரனறு முகனெதிரும் விருதுநிசி சரரணிகள்
குலையவிடு கொடிய வேலே.
உசாத்துணை
- சேவல் விருத்தம்: தினமலர் இதழ்
- சேவல் விருத்தம்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- வேல், மயில், சேவல், விருத்தம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jul-2024, 09:15:05 IST