வெற்றிவேலன்
வெற்றிவேலன் (பிறப்பு: ஜூன் 5, 1946) கவிஞர். தமிழக அரசுத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். தனது கவிதைகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றார். உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டக் கிளையின் தலைவர்.
பிறப்பு, கல்வி
வெற்றிவேலன், புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி கிராமத்தில், ஜூன் 5, 1946 அன்று, சுப்பையாச் சேப்ளார்- உலோகம்பாள் தம்பதிக்குப் பிறந்தார். தொடக்கக்கல்வியை வன்னியன் விடுதியிலும், மேல்நிலைக் கல்வியை ஆலங்குடி அரசுப் பள்ளியிலும் படித்தார்.
தனி வாழ்க்கை
வெற்றிவேலன், தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றினார். 36 ஆண்டுகள் பணியாற்றி, 2004-ல், உதவி வருவாய் அதிகாரியாக ஓய்வு பெற்றார். மனைவி, மல்லிகா. மகன்கள் அருண், ஆனந்த்.
இலக்கிய வாழ்க்கை
வெற்றிவேலன், இலக்கிய ஆர்வத்தால் பள்ளிப் பருவத்தில் பல கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார். மரபிலக்கியப் பாக்கள் பாடுவதில் தேர்ச்சி பெற்றார். இவரது கவிதைகளைப் பாராட்டிய கவிஞர் வைரமுத்து அவற்றை நூல்களாக வெளியிடுமாறு ஊக்குவித்தார். ’கவிதைக் கதிர்கள்’ எனும் முதல் மரபுக் கவிதை நூல் 1999-ல் வெளியானது. அப்போதைய கல்வி அமைச்சர் க. அன்பழகன் அந்நூலை வெளியிட்டார். தொடர்ந்து பல கவிதை நூல்களை வெளியிட்டார் வெற்றிவேலன்.
அமைப்புச் செயல்பாடுகள்
- தமிழ்நாட்டில் உள்ள பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். தலைமையேற்று நடத்தினார்.
- பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
- பட்டிமன்ற நடுவராகச் செயல்பட்டார்.
- இலங்கை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பன்னாட்டு கருத்தரங்கில் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார்.
- மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்றார்.
- மலேசியாவில் நடந்த உலகக்கவிஞர்கள் மாநாட்டு மலர்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றன.
- உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைவராக உள்ளார்.
இதழியல்
‘ஆதியுலகம்’ என்ற இணைய இதழின் ஆசிரியர்களுள் ஒருவர் வெற்றிவேலன்.
விருதுகள்
- 2016-ல், மலேசியாவில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டில் கவிதைக்கு முதல் பரிசு.
- 2018-ல், மலேசியாவில் நடந்த இரண்டாம் மாநாட்டில் கவிதை நூலுக்கு முதல் பரிசு.
- சென்னை கம்பன் கழகம் வழங்கிய இலக்கிய விருது
- கவியரசர் முடியரசனார் விருது
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய இலக்கிய விருது
- இலக்கியத் தென்றல்
- கவித்தென்றல்
- தமிழ்மாமணி
- கவியரசர்
- சந்தக் கவியரசர்
- காவியக் கவிஞர்
இலக்கிய இடம்
வெற்றிவேலன், தமிழகத்தின் மூத்த மரபுக் கவிஞர்களில் ஒருவர். இலக்கிய நயத்தோடு பல கவிதைகளைத் தந்தார்.
நூல்கள்
- கவிதைக் கதிர்கள்
- நெஞ்சில் பூத்த மலர்கள்
- கனவில் ஒரு கவியரங்கம்
- இனியவை எண்பது
- மங்கலப்பூக்கள்
- அருள் மணக்கும் கவிமலர்கள்
- கண்ணதாசனின் கவிதைவாசம்
- சொல்லத் துடிக்குதே நெஞ்சம்
- தேவர் காவியம்
- கண்ணகி காவியம்
- கண்ணகி காவியம் விரிவு
- இனியதும் இன்னாததும்
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- திருமணப் பரிசு
- உலகப் பொதுமறை உணர்த்தும் நெறிகள்
- வாழ்வியல் ஓவியம் (திருக்குறள்)
உசாத்துணை
✅Finalised Page