under review

விஷ்ணுவின் இருபத்தி நான்கு வடிவங்கள்

From Tamil Wiki
சென்னகேசவா - பேளூர்

விஷ்ணு சகஸ்ர (ஆயிரம்) நாமங்களில் பாடப்படுகிறார். மகாபாரதத்தின் அனுஷாசனப்பருவத்தில் அவரது ஆயிரம் நாமங்களும் குறிப்பிடப்படுகின்றன. விஷ்ணுவின் இந்த ஆயிரம் நாமங்களில் கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன், சங்கர்ஷனன், வசுதேவன், ப்ரத்யுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், அதோக்ஷஜன், நரசிம்மன், அச்சுதன், ஜனார்த்தனன், உபேந்திரன், ஹரி, ஸ்ரீகிருஷ்ணன் என இருபத்தி நான்கு பெயர்கள் முதன்மையாகக் கருதப்படுகின்றன. அவையே நம் சிற்ப வழிபாடுகளில் அதிகம் உபயோகிக்கப்படுகின்றன.

விஷ்ணு வடிவங்கள்

விஷ்ணு நின்றிருக்கும் நிலையில் ஏக பங்கத்துடன் (உடலில் எவ்வித வளைவும் இல்லாமல் நேராக நிற்கும் நிலை) தலையில் கிரீடமும் பிற ஆபரணங்களும் அணிந்து நான்கு கைகளிலும் ஆயுதத்துடன் நிற்கும் நிலை அவரது அனைத்து வடிவங்களிலும் பொதுவானதே. ஆனால் அவர் நான்கு கைகளில் தாங்கி நிற்கும் சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகிய ஆயுதங்கள் அமையும் கையின் இடம் பொருத்து விஷ்ணுவின் இருபத்தி நான்கு வடிவங்களும் மாறுபடும்.

ரூபமந்தனம் அட்டவணை

கீழுள்ள அட்டவனை விஷ்ணுவின் இருபத்தி நான்கு மூர்த்தி வடிவின் நான்கு கைகளில் தாங்கி நிற்கும் ஆயுதம் பற்றி ரூபமந்தனம் அடிப்படையில் வரிசைப்படுத்தியவை.

விஷ்ணுவின் இருபத்தி நான்கு வடிவங்கள் - ரூபமந்தனம்
மூர்த்தி பின் வலது கை பின் இடது கை முன் வலது கை முன் இடது கை
1 கேசவன் சங்கு சக்கரம் கதை பத்மம்
2 நாராயணன் பத்மம் கதை சக்கரம் சங்கு
3 மாதவன் சக்கரம் சங்கு பத்மம் கதை
4 கோவிந்தன் கதை பத்மம் சங்கு சக்கரம்
5 விஷ்ணு பத்மம் சக்கரம் சங்கு கதை
6 மதுசூதனன் சங்கு பத்மம் கதை சக்கரம்
7 திரிவிக்ரமன் கதை சக்கரம் சங்கு பத்மம்
8 வாமனன் சக்கரம் கதை பத்மம் சங்கு
9 ஸ்ரீதரன் சக்கரம் கதை சங்கு பத்மம்
10 ரிஷிகேசன் சக்கரம் பத்மம் சங்கு கதை
11 பத்மனாபன் பத்மம் சக்கரம் கதை சங்கு
12 தாமோதரன் சங்கு கதை சக்கரம் பத்மம்
13 சங்கர்ஷணன் சங்கு பத்மம் சக்கரம் கதை
14 வாசுதேவன் சங்கு சக்கரம் பத்மம் கதை
15 ப்ரத்யூமனன் சங்கு கதை பத்மம் சக்கரம்
16 அனிருத்தன் கதை சங்கு பத்மம் சக்கரம்
17 புருஷோத்தமன் பத்மம் சங்கு கதை சக்கரம்
18 அதோக்ஷஜன் கதை சங்கு சக்கரம் பத்மம்
19 நரசிம்மன் பத்மம் கதை சங்கு சக்கரம்
20 அச்சுதன் பத்மம் சக்கரம் சங்கு கதை
21 ஜனார்த்தனன் சக்கரம் சங்கு கதை பத்மம்
22 உபேந்திரன் கதை சக்கரம் பத்மம் சங்கு
23 ஹரி சக்கரம் பத்மம் கதை சங்கு
24 ஸ்ரீ கிருஷ்ணன் கதை பத்மம் சக்கரம் சங்கு
பத்மபுராணம் அட்டவணை
நரசிம்மர் - ஹலபேடு

பத்ம புராணத்திலுள்ள பாதாளக் கண்டத்தில் மேலே சொன்னதற்கு இணையான ஒரு அட்டவணை குறிப்பிடப்படுக்கிறது. ஆனால் அவற்றில் சில தவறுகள் இருப்பதாக ஆதாரபூர்வமாகத் தெரிகிறது. உதாரணத்திற்கு கேசவனும், ப்ரத்யுமனனும் ஒரே போல் வடிவம் கொண்டிருக்கின்றனர், பத்மநாபனும், புருஷோத்தமனும் நிகர் வடிவம். எனவே பத்ம புராணத்தின் அடிப்படையில் நாம் கேசவனையும், ப்ரத்யுமனையும் வேறுபடுத்த முடியாமல் போகிறது. பத்மநாபனையும், புருஷோத்தமனையும் கூட. மேலும் இவ்வட்டவணையில் ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், சங்கர்ஷனன், வசுதேவன், ஜனார்த்தனன், உபேந்திரன், ஹரி இவர்களின் வடிவமும் ரூபமந்தனத்திலிருந்து மாறுபடுகிறது. ஒப்பு நோக்க ரூபமந்தனமே சரியாக விஷ்ணுவின் இருபத்தி நான்கு மூர்த்திகளை வரிசையமைத்திருக்கிறது.

விஷ்ணுவின் இருபத்தி நான்கு வடிவங்கள் - பத்மபுராணம்
மூர்த்தி பின் வலது கை பின் இடது கை முன் வலது கை முன் இடது கை
1 கேசவன் சங்கு சக்கரம் கதை பத்மம்
2 நாராயணன் பத்மம் கதை சக்கரம் சங்கு
3 மாதவன் சக்கரம் சங்கு பத்மம் கதை
4 கோவிந்தன் கதை பத்மம் சங்கு சக்கரம்
5 விஷ்ணு பத்மம் சக்கரம் சங்கு கதை
6 மதுசூதனன் சங்கு பத்மம் கதை சக்கரம்
7 திரிவிக்ரமன் கதை சக்கரம் சங்கு பத்மம்
8 வாமனன் சக்கரம் கதை பத்மம் சங்கு
9 ஸ்ரீதரன் சக்கரம் பத்மம் சங்கு கதை
10 ரிஷிகேசன் சக்கரம் கதை சங்கு பத்மம்
11 பத்மனாபன் பத்மம் சங்கு கதை சக்கரம்
12 தாமோதரன் சங்கு கதை சக்கரம் பத்மம்
13 சம்ஹர்ஷனன் சங்கு பத்மம் சக்கரம் கதை
14 வசுதேவன் சக்கரம் சங்கு கதை பத்மம்
15 ப்ரத்யூமனன் சங்கு சக்கரம் கதை பத்மம்
16 அனிருத்தன் கதை சங்கு பத்மம் சக்கரம்
17 புருஷ்சோத்தமன் பத்மம் சங்கு கதை சக்கரம்
18 அதோக்ஷஜன் கதை சங்கு சக்கரம் பத்மம்
19 நரசிம்மன் பத்மம் கதை சங்கு சக்கரம்
20 அச்சுதன் பத்மம் சக்கரம் சங்கு கதை
21 ஜனார்த்தனன் பத்மம் சக்கரம் சங்கு கதை
22 உபேந்திரன் சங்கு கதை சக்கரம் பத்மம்
23 ஹரி சங்கு சக்கரம் பத்மம் கதை
24 ஸ்ரீ கிருஷ்ணன் கதை பத்மம் சக்கரம் சங்கு

மூர்த்திகளின் சக்திகள்

இந்த மூர்த்திகளுக்கு இணையான சக்தியையும் நாரத பஞ்சராத்ரகத்தில் உள்ள மூன்றாவது ராத்ரியின் முதல் பகுதியில் குறிப்பிடப்படுகிறது.

விஷ்ணு வடிவங்களின் இணையான சக்தி - நாரத பாஞ்சராத்ரம்
விஷ்ணுவின் வடிவம் இணையான சக்தியின் பெயர்
1 கேசவன் கீர்த்தி
2 நாராயணன் கந்தி
3 மாதவன் துஷ்டி
4 திரிவிக்ரமன் சாந்தி
5 வாமனன் க்ரியா
6 அச்சுதன் தயா
7 ஸ்ரீதரன் மேதா
8 ரிஷிகேசன் ஹர்ஷா
9 பத்மநாபன் ஷ்ரத்தா
10 தாமோதரன் லஜ்ஜா
11 வாசுதேவன் லட்சுமி
12 சங்கர்ஷணன் சரஸ்வதி
13 ப்ரத்யும்னன் ப்ரீதி
14 அனிருத்தன் ரதி

மீதமுள்ள பத்து மூர்த்திகளுக்கான சக்திகள் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதை அறியமுடியவில்லை.

விஷ்ணு வடிவமும் குலங்களும்

ஸ்ரீ கிருஷ்ணன் - ஹலபேடு

இந்த இருபத்தி நான்கு மூர்த்திகளில் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு குலத்திற்கு/ தொழிலைச் செய்பவர்களுக்கு வழிபடும் தெய்வமாகிறது. ரூபமந்தனம் இதனை விளக்கிச் சொல்கிறது. பிராமணர்கள் கேசவன், நாராயணன், மாதவன், மதுசூதனன் ஆகிய நான்கு வடிவங்களை வழிபட்டு மகிழ்ச்சியை அடைகின்றனர். ஷத்ரியர்களுக்கு அனைத்து நன்மைகளையும் மதுசூதனன் மற்றும் விஷ்ணுவால் தரப்படுகிறது. வைசியர்களுக்கு திரிவிக்ரமன், வாமனனை வழிபடுவதால் நன்மை ஏற்படுகிறது. ஸ்ரீதரனை வழிபடுவதால் சூத்ரர்களுக்கு சகல நன்மையும் ஏற்படுகிறது. செருப்பு தைப்பவர்களுக்கு, சலவைத் தொழிலாளிகளுக்கு, கூத்துக் காரர்களுக்கு, வேடருக்கு வரதனும், மற்ற அனைவருக்கும் ரிஷிகேஷனின் அருள் வழங்கப்படுகிறது. குயவர்கள், சிறு வணிகன், வேசி மற்றும் எண்ணெய் வியாபாரி, மது விற்பனையாளர்களுக்கான கடவுள் பத்மநாபன். யாசகரும், ப்ரம்மசரியம் கொண்டவரும் தாமோதரனைப் பிராத்திக்க வேண்டும். மும்மூர்த்தியான ஹரி-ஹர-பிதாமகராகிய தத்தாத்ரேயர், நரசிம்மன், வாமனன், வராகன் ஆகிய நால்வரையும் அனைவரும் துதிக்கலாம். அவர்கள் எந்நிலையிலும் தங்கள் அருளைத் தருபவர்கள் என ரூபமந்தனம் சொல்கிறது.

உசாத்துணை

  • Elements of Hindu Iconography - T.A. Gopinatha Rao


✅Finalised Page