under review

வாசாப்பு நாடகம்

From Tamil Wiki
Vasappu naadagam.jpg

வாசாப்பு நாடகம் கூத்து வடிவில் நடைபெறும் கலை வடிவங்களுள் ஒன்று. 'வாசகப்பா' என்ற சொல்லின் திரிபு வாசாப்பு. வாசகமும் பாடலும் கலந்த நாடக வகை (வாசகம் + பா = வாசகப்பா). திருமறை வசனங்களைப் பாக்களில் அமைத்து இசைப் பாடல் வழியாக நிகழ்த்துவதால் வாசகப்பா ஆயிற்று. இது ஒரு தனி நாடக வகை.

வாசாப்பு நாடகம் போர்ச்சுக்கீசியக் கத்தோலிக் கிறிஸ்துவர்கள் அறிமுகப்படுத்திய நாடகங்களின் அடிப்படையில் உருவாகி, தமிழகத்தில் உள்ள தெருக்கூத்து, பள்ளு, குறவஞ்சி போன்ற நாடக வடிவங்களை உள்ளடக்கிக் கொண்டு வளர்ந்தது. கேரளத்து சவிட்டுக்களி(உதைத்து ஆடுவது) நாடகத்தை ஒத்தது. ஏறக்குறைய 500 ஆண்டுகளாக தமிழகத்தில் இக்கலை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

நடைபெறும் முறை

வாசாப்பு நாடகம் வேளாண்மைத் தொழில் நடைபெறாத கோடைக் காலத்தில் நடக்கிறது. ஈஸ்டர் திருவிழா அன்று இரவிலோ அதற்கு மறுநாளோ தொடங்கி பத்து நாட்கள் வரை நடைபெறுகிறது.

இந்நாடகம் நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தால் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்படும். ஞாயிறுக்கிழமை கத்தோலிக்கர்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் சனிக்கிழமை இக்கலை நிகழ்த்தப்படுவதில்லை. மற்ற நாட்டுப்புற கூத்துகளைப் போல் இந்நிகழ்த்துகலை இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி காலை ஐந்து மணி வரை நடக்கும். சில வாசாப்பு நாடகங்கள் நான்கு இரவுகளில் முடியவில்லை என்றால் ஐந்தாம் நாள் இரவும் நடக்கும். குறிப்பிட்ட சில புனிதர்களின் திருநாளில் நடக்கும் வாசாப்புகளை அந்தந்த நாட்களின் தன்மைகேற்ப கூட்டியும் குறைத்தும் நடத்துவர்.

வாசாப்பு நாடகம் திறந்த வெளியில் அமைந்த மேடைகளில் நிகழ்கிறது. இந்த மேடையை வாசாப்பு மேடை என்றழைக்கின்றனர். எனவே பிற நிகழ்ச்சிகளுக்கு இம்மேடையைப் பயன்படுத்துவதில்லை. இந்நிகழ்ச்சியின் போது மேடையில் பந்தலிட்டு இரண்டடுக்குடன் கூடிய அரண்மனை அமைப்பர். மேல் அடுக்கிலிருந்து இறைத் தூதர்கள் இறங்கி வருவதற்கு ஏற்றவாறு மேடைக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மேடையின் பின்புறம் அரண்மனை ஓவியத் திரைச்சீலை தொங்க விடப்பட்டிருக்கும். மேடையின் பிற மூன்று பகுதிகளிலும் அமர்ந்து பார்வையாளர்கள் நாடகத்தைக் காண்பர்.

வாசகப்பா நாடகம் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்பே கால் நாட்டும் சடங்கு நடைபெறும். காலைத் திருப்பலி முடிந்ததும் நாட்டாண்மையார், அண்ணாவியார், ஊர் மக்களில் சிலர் என எல்லோரும் சேர்ந்து பங்கு தந்தையைக் கால் நாட்டும் சடங்கிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பர். பங்குத் தந்தை ஜெபம் செய்து முடித்த பின்பு பச்சை மூங்கிலை வாசகப்பா மேடையின் மூலையில் நடுவார். கூடியுள்ளவர்களுக்கு வெற்றிலை பாக்கு வழங்குவார். இந்த சடங்கு 'மூன்றாங்கால்' என்றும் 'உடன் கால்' என்றும் அழைக்கப்படுகிறது.

கால் நடும் சடங்கு முடிந்த பின்னர் வாசகப்பா மேடையை அமைப்பர். நாடகம் தொடங்கி நாள் அன்று இரவில் அண்ணாவி, கலைஞர்கள், நாட்டாண்மைக்காரர், ஊர் மக்களில் சிலர் ஆகியோர் கூடி ஜெபம் செய்வர். பின்னர் வாசாப்பு நிகழ்ச்சிக்கு உரிய புனிதரின் உருவத்தை ஊர்வலமாகக் கொண்டு செல்வர். இந்த ஊர்வலத்தில் மேள தாளங்கள் முழங்க மெழுகுத்திரி ஏந்திச் செல்வார்கள். ஊர்வலம் முடிந்ததும் புனிதரின் உருவத்தை வாசகப்பா மேடையின் வலதுபுறம் வைத்து அனைவரும் வணங்குவர்.

அதன் பின் மேடையில் அண்ணாவி அமருவார். அவருக்கு ஆடை அணிவித்து மரியாதை செய்வார்கள். பின்னர் பாட்டுக்காரர்களும், அண்ணாவியும் சேர்ந்து கடவுள் வாழ்த்துப் பாடுவர். பின் அறிவாள், பிரிவாளி என இருவர் தோன்றி அன்று நடக்கப் போகும் காட்சிகள் பற்றிக் கூறுவர்.

வாசாப்பு நாடகத்தின் மையம் மேலை நாட்டைச் சார்ந்ததாக இருப்பினும் அதன் அமைப்பு தமிழ்த்தளம் சார்ந்தது. நாடகப் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் போன்ற இலக்கிய வடிவங்களும் நொண்டிச் சிந்து, தாலாட்டு, ஆனந்தக் களிப்பு போன்ற நாட்டார் பா வடிவங்களும் இடம்பெறுகின்றன.

வாசாப்பு நாடகம் கிறிஸ்துவச் சமயம் சார்ந்தது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் 'இரணியன் வாசகப்பா' என்ற இந்து சமயப் புராண நாடகமும் இருக்கிறது. வாசாப்பு நாடகம் இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு குறித்த வரலாற்றுடன் தொடர்பு கொண்ட சடங்குகள் இணைந்த கலை நிகழ்வாக உள்ளது. இக்கலை நம்பிக்கை அடிப்படையில் நிகழும் ஒன்று. ஒவ்வொரு வாசகப்பாவிற்கும் ஒரு நம்பிக்கை உண்டு. ஆக்னஸ் அம்மா வாசகப்பா நடத்தினால் பெரியம்மை வராது. மருகரிது அம்மாள் வாசகப்பா சுகமான பிரசவத்திற்காக நடத்தப்படும். அந்தோணியார் வாசகப்பா ஊரைப் பேய்த் தொல்லையில் இருந்து காப்பாற்ற நடத்தப்படும். இந்த நாடகத்தின் போது பேய் பிடித்தவர்கள் ஆடுகின்றனர். அந்தோணி கதாபாத்திரம் ஏற்றவர் பேய் பிடித்தவரின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்வார். அதன் பின் சிலுவைக் குறியிட்டுப் பேயை அடக்குவார். அந்தோணியார் வாசகப்பா நடைபெறும் அன்று மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர்களும், பார்வையாளர்களும் கோவிலுக்குச் சென்று திருப்பலியில் பங்கு கொள்வர். கலைஞர்களுக்கு உறவினர்கள் மாலை அணிவித்தும், பணம் கொடுத்தும் மரியாதை செய்வர். கலைஞர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தனியாக கூலி எதுவும் பெறுவதில்லை. அவர்களுக்கு அன்பளிப்பாகக் கிடைக்கும் பணத்தை ஒப்பனை சாதனம் செய்யப் பயன்படுத்திக் கொள்வர்.

வாசாப்பு நாடகமும் நம்பிக்கையும்

வாசகப்பா தொடர்ந்து நடைபெறாவிட்டால் ஊருக்குத் தீமை விளையும் என்றும், இக்கலையைக் கிண்டல் செய்தால் அவரின் குடும்பம் துன்பப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது. இக்கலையை வியாபாரப் பொருளாக்கக் கூடாது என்ற நம்பிக்கையும் உள்ளது. இந்த ஊர் மக்கள் புனிதர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். புனிதர்களுக்கு தண்டனை வழங்கிய மன்னர்களாக நடித்தவர்கள் நாடகம் முடிந்ததும் கோவிலில் பரிகாரம் செய்கின்றனர். வாசாப்பு கலைஞர்கள் இறக்கும் போது அவர்களின் வீட்டில் வாசாப்பு பாடல்கள் பாடப்படும். அவரது உடலுக்கு அவர் ஏற்ற நாடக உடை அணிந்து அடக்கம் செய்கின்றனர்.

வாசாப்பு பயிற்சி

வாசாப்பு நாடகத்திற்கான பயிற்சி 'அடுக்கு' என்றழைக்கப்படுகிறது. இயேசுநாதர் தனித்திருந்து தவம் செய்த நாற்பது நாட்களைத் தவக்காலம் என்பர். இக்காலத்திலேயே பயிற்சி (அடுக்கு) நடைபெறும். மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை பயிற்சி நடக்கும். அண்ணாவியே இதற்கான பயிற்சியும் அளிப்பார். இவர் வாசகப்பாக்களை மனனம் செய்து வைத்திருப்பார். அண்ணாவிக்குப் பயிற்சி பெறுவர்கள் கட்டுப்பட்டு நடப்பர். கோவில் வளாகத்திலேயே பயிற்சி நிகழும். பயிற்சிக் காலத்தில் விரதம் இருக்க வேண்டுமென்ற விதியும் உள்ளது. இந்த அண்ணாவி முறை மரபு வழியாக வருவது.

அலங்காரம்

வாசாப்பு நாடகத்தின் ஒப்பனை பாத்திரங்களுக்கு ஏற்ப அமையும். புனிதர்களின் ஓவியத்தைப் போன்று ஒப்பனைச் சாதனங்களைத் தயாரிக்கின்றனர். இவை மேலை நாட்டுப் பாணியிலும், தமிழக தெருக்கூத்துப் பாணியிலும் அமையும். ஒப்பனையில் மேலை நாட்டுச் செல்வாக்கும், தமிழ்நாட்டுச் செல்வாக்கும் இருக்கும். கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களே ஒப்பனைச் சாதனங்களைத் தங்கள் செலவில் தயாரித்துக் கொள்கின்றனர்.

பங்கேற்பாளர்கள்

வாசகப்பா நாடகத்தை எல்லாச் சாதியினரும் நடிக்கின்றனர். நாடகம் நடக்கும் ஊரில் உள்ள பங்குத் தந்தை, நாட்டாண்மை, ஊர் மக்கள் ஆகிய அனைவரும் பங்கேற்கின்றனர். இக்கலை ஆண்கள் மட்டுமே நடிக்கும் ஒன்று.

பார்வையாளர்கள்

ஊர் பொதுமக்களே வாசாப்பு நாடகத்தின் பார்வையாளர்கள். சுற்றியுள்ள ஊர்களில் இருந்து நாடகம் பார்க்க வருவர். பார்வையாளர்களில் கத்தோலிக்கர்கள் வெறும் பொழுதுபோக்காக அன்றி தங்களின் சமயக் கூறாகவும் வாசாப்பு நாடகத்தைப் பார்க்கின்றனர்.

நிகழும் ஊர்கள்

வாசாப்பு நாடகம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலாக நிகழும் ஒன்று. திருச்சி, வேலூர், வடஆற்காடு, தென்ஆற்காடு, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கிறிஸ்துவ சமய நிகழ்ச்சியாக இக்கலை நிகழ்கிறது. கேரளத்தில் பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியில் இக்கலை வழக்கில் உள்ளது. இக்கலை இடத்துக்கு இடம் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்


✅Finalised Page