under review

வழிகாட்டுவோன் (இதழ்)

From Tamil Wiki
வழிகாட்டுவோன் இதழ்

வழிகாட்டுவோன் (1918) ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக வெளி வந்த இதழ். எஸ்.ஏ.எஸ். தங்கமுத்து, நாகப்பட்டினத்தில் இவ்விதழைத் தொடங்கினார். பதிப்பாளரும் வெளியீட்டாளருமாகத் தங்கமுத்து செயல்பட்டார். ஆசிரியராக டேவிட் பென் பணியாற்றினார். இவ்விதழ் தென் இந்திய ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கியச் சங்கத்தின் (The South Indian Oppressed Classes Union) சார்பில் வெளிவந்தது

பிரசுரம், வெளியீடு

ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகத் தொடங்கப்பட்ட இதழ் வழிகாட்டுவோன். நாகப்பட்டினத்தில் வாழ்ந்த எஸ்.ஏ.எஸ். தங்கமுத்து, ஜனவரி 1918-ல், இவ்விதழைத் தொடங்கினார். டேவின் பென் ஆசிரியராகச் செயல்பட்டார். பி.எல். வெங்கடராம சாஸ்திரிகளின் ஜிசி அண்ட் கோ ஸ்காட்டிஷ் கிளை அச்சகத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது. தனி இதழின் விலை 4 அணா. இவ்விதழ் தென் இந்திய ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கியச் சங்கத்தின் (The South Indian Oppressed Classes Union) சார்பில் வெளிவந்தது. இச்சங்கம் மே 21,1915-ல் விருதுபட்டியில் (விருதுநகர்) தொடங்கப்பட்டது.

நோக்கம்

வழிகாட்டுவோனின் முதல் இதழில், தென் இந்திய ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கியச் சங்கத்தின் நோக்கமாக கீழ்காணும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

”ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு பல்வேறு அமைப்புகளில் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது உண்மை. சென்னையில் சங்கரன் நாயர் நடத்தி வரும் Depressed Class Mission, பம்பாயில் கோபாலகிருஷ்ண கோகலே தலைமையிலான Servants of India போன்றவைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான செயல்பாட்டில் மேம்போக்கானதாகவே இருக்கின்றன. இதற்கு காரணம் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களில்லை என்பதேயாகும். ஆகவே இக்குறைகளைப் போக்கும் விதமாக இந்தச் சங்கம் தொடங்கப்பட்டது. இதற்காக கிராமங்களில் உள்ள இச்சமூகத்தின் பெரியோர்களைச் சந்தித்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஒடுக்கப்பட்டவர்களின் கைகளில்தான் உள்ளது என்ற தாரக மந்திரத்தை அவர்களின் மனத்திலே இருத்தினோம்.”

உள்ளடக்கம்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை, வாழ்வியல் பிரச்சனைகளை, அவர்களது தேவைகளை வலியுறுத்தும் பல கட்டுரைகளைத் தாங்கி வழிகாட்டுவோன் இதழ் வெளிவந்தது. தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வெளியாகின. தலித் தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சனையைப் பற்றி வழிகாட்டுவோன் பேசியது. அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பதை வலியுறுத்தியது. மதம் பற்றிய செய்திகளும், சாதிப் பிரிவினைகள், ஏற்றத்தாழ்வுகள் அற்ற மதத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் சேர்வது பற்றிய குறிப்புகளும் இவ்விதழில் இடம் பெற்றன.

வழிகாட்டுவோன் இதழ், ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் பிரிட்டிஷ் அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை அனுப்பி கவனம் ஈர்த்தது. தென் இந்திய ஒடுக்கப்பட்டவர் ஐக்கிய சங்கத்திற்கும் இலங்கையிலிருந்து செயல்பட்டு வந்த இலங்கை தென்னிந்திய ஐக்கியச் சங்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வழிகாட்டுவோன் இதழின் ஆசிரியர் தங்கமுத்துவின் பேச்சு, இலங்கை ஆதிதிராவிடன் இதழில் வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடன் இதழில் வெளியான சில செய்திக் குறிப்புகள் வழிகாட்டுவோன் இதழில் இடம் பெற்றன.

தஞ்சைப் பகுதிகளில் அடிமைப் பத்திரங்கள் இருந்த செய்தியும், அதில் குடும்பத்தையே அடிமைகளாக எழுதி வாங்கும் வழக்கமிருந்தது பற்றியும் வழிகாட்டுவோன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

இதழ் நிறுத்தம்

வழிகாட்டுவோன் இதழ், சில ஆண்டுகளுக்குப் பின் நின்று போனது.

வரலாற்று இடம்

தலித்களின் வாழ்க்கைச் சிக்கல்களை அவர்களின் சார்பில் நின்று பேசிய இதழ் வழிகாட்டுவோன். பிரிட்டிஷ் அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை அனுப்பி இவ்விதழ் கவனம் ஈர்த்தது. பிற்காலத்தில் அவற்றில் சில நடைமுறைக்கு வந்தன. வழிகாட்டுவோன் இதழுக்குக் கிடைத்த வரவேற்பு, மேலும் பல தலித் ஆதரவு இதழ்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. தமிழில் வெளியான முன்னோடி தலித் இதழ்களுள் ஒன்றாக வழிகாட்டுவோன் இதழ் மதிப்பிடப்படுகிறது. ‘

உசாத்துணை


✅Finalised Page