under review

வரதுங்கராம பாண்டியர்

From Tamil Wiki
பாண்டியன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாண்டியன் (பெயர் பட்டியல்)

வரதுங்கராம பாண்டியர் (அபிராம சுந்தரேசன்,வீரபாண்டியன்) (ஆட்சிக்காலம் பொ.யு. 1587 -பொ.யு. 1612) திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னர். சிவ பக்தரான வரதுங்கராம பாண்டியர் பிரமோத்தர காண்டம் போன்ற நூல்களை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வரதுங்கராம பாண்டியர் திருக்கருவை என்னும் கரிவலம்வந்த நல்லூரைத் தலைநகராகக் கொண்டு தென்பாண்டி நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர். இவரது தந்தை திருநெல்வேலிப்பெருமாள். குலசேகரர் என்றும் அறியப்பட்டவர்; நைடதம் இயற்றிய அதிவீரராம பாண்டியரின் பெரிய தந்தையார்.

வரதுங்கராமரின் முடிசூட்டுவிழாவின்போது காசிக்கலியன் கவிராயர் என்பார் நாண்மங்கலம், குடைமங்கலம் ஆகியவற்றைப் பாடி வாழ்த்தினார். மற்றொருவர் ஐயம்பெருமாள் சிவந்த கவி என்பவர் புரூரவச் சக்கரவர்த்தி கதையை 920 பாடல்களில் பாடினார்.

வரதுங்கராம பாண்டியர் மரணப்படுக்கையில் இருந்தபோது அவர் மனைவி 'காலனை அஞ்சுகிறீர்களா?' என்று கேட்டதற்கு அவர்

அஞ்சலென்ற கரதலமுங் கணபண கங்கணமும்
அரைகிசைந்த புலியுடையு மம்புவிச் செஞ்சடையும்
கஞ்சமலர்ச் சேவடியுங் கனைகழலுஞ் சிலம்பும்
கருணைபொழி திருமுகமுங் கண்களொரு மூன்றும்
நஞ்சையுண்ட மணிமிடரு முந்நூலு மார்பும்
நலந்திகழ்வெண் ணீற்றொளியு மறியானு மழுவும்
பஞ்சடிச்சிற் றிடையுமையா ளொப்பனைபா கமுமாய்ப்
பால்வண்ண ருளத்திருக்கப் பயமுண்டோ யெனக்கே!

என்ற பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

இவருக்கு சந்ததிகள் இல்லாததால் சிவபெருமானே அந்தண வாலிபன் உருவில் வந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ததாக தொன்மம் கூறுகிறது.

வரதுங்கராம பாண்டியன் வேம்பற்றூர் ஈசான முனிவரைத் தன் குருநாதராகக் கொண்டிருந்தார். சிறந்த சிவபக்தர். தென்காசி கோவிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

வரதுங்கராம பாண்டியன் தமிழில் புலமை பெற்றிருந்தார். பிரமோத்தர காண்டம், கருவை கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி, சிவகவசம் ஆகிய நூல்களை இயற்றியவர்.

பிரமோத்தர காண்டம் பஞ்சாக்ஷரம்(ஐந்தெழுத்து) , விபூதி, சோமவாரம், பிரதோஷம் இவற்றின் பெருமைகளைக் கூறுவது. வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பெற்றது. பாயிரம் உள்பட 22 அத்தியாயங்களையும் 1310 விருத்தங்களையும் உடையது.

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி கரிவலம் வந்தநல்லூரில் கோவில் கொண்ட சிவபிரான் மீது பாடப் பெற்றது. குட்டித் திருவாசகம் எனப் பாராட்டப்பெறுவது. இதை அதிவீரராம பாண்டியர் இயற்றினார் என்றும் கூறப்படுகிறது.

நூல்கள்

  • பிரமோத்தர காண்டம்,
  • கருவை கலித்துறை அந்தாதி
  • கருவை பதிற்றுப்பத்தந்தாதி
  • கருவை வெண்பா அந்தாதி
  • சிவகவசம்

பாடல் நடை

சிவ கவசம்

அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,
துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்
தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த
மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க.

பிரமோத்தர காண்டம்

கண்ணு தலா லயகோச்குக் சண்களே கண்கள்;
கறைக்கண்டன் சோயில்புகும் கால்களே கால்கள்;
பெண்ணொருபா கனைப்பணியுக் தலைகளே தலைகள்;
பிஞ்ஞசனைப் பூசிச்குள் கைகளே சைகள்;
பண்ணவன்றன் ஏீர்பாடு மன்னாவே ஈன்னா;
... பரன்சரிசை யேகேட்சப் படுஞ்செவியே செவிகள்;
௮ண்ணல்பொல் கழனினைச்கு கெஞ்சமே கெஞ்சம்;
அவனடிக் ழடிமைபுகு மடிமையே யடி.மை,

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2024, 19:18:29 IST