வடமோதங்கிழார்
வடமோதங்கிழார் சங்க காலப் புலவர். இவரது பாடிய பாடல்கள் அகநானூற்றில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
தொண்டை நாட்டில் சித்தூர் மாவட்டத்தில் சீகாளத்தி திருத்தணிகை வட்டங்களில் மாதம்(மோதம் என மறுவியது) என்ற ஊரில் வடமோதங்கிழார் பிறந்தார். கிழார் என்பது சிறப்புப் பெயர்.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடிய இரண்டு பாடல்கள் அகநானூற்றிலும்(317), புறநானூற்றிலும்(260) உள்ளன. தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியதாக அகநானூற்றின் பாலைத்திணைப்பாடல் உள்ளது. பாணர் பலருக்கு நிலக்கொடை தந்து பாதுகாத்த குறுநில மன்னன் ஒருவன் ஆனிரை மீட்டுத் தந்து, விழுப்புண் பட்டு இறந்து நடுகல்லாகி நிற்கும் நிலைமையை ஒரு பாணன் மற்றொரு பாணனுக்குக் கூறுவதாக புறநானூற்றுப்பாடல் அமைந்துள்ளது.
பாடல் நடை
- அகநானூறு: 317
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
வந்து நின்றனரே காதலர்;
- புறநானூறு(260)
பாண ! கேண்மதி, யாணரது நிலையே;
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து,
எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,
கையுள போலும் கடிதுஅண் மையவே;
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- வைரத்தமிழ்-அகநானூறு 317-
- தமிழ்ச்சுரங்கம்-புறநானூறு-260
✅Finalised Page