under review

லோரோங் ஜாவா தேசிய வகை தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Lorong jawa.jpg

லோரோங் ஜாவா தேசிய வகை தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள சிரம்பான் நகரில் அமைந்துள்ளது. முழு அரசாங்கப்பள்ளியான இதன் பதிவு எண் NBD 4070.

வரலாறு

லோரோங் ஜாவா தேசிய வகை தமிழ்ப்பள்ளி பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1897-ல் முனாவீர் சாலையில் (லெமன் ஸ்திரிட்) ஒரு கட்டடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இந்தக் கட்டடத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் 1940-ல் பிரிட்டிஷார் லோரோங் ஜாவாவில் (ஜாவா லேன்) உள்ள ஒரு கட்டடத்திற்கு இப்பள்ளியை இடமாற்றம் செய்தனர். அரசாங்க மானியம் பெற்ற தமிழ் போதானா மொழியைக் கொண்ட பள்ளியாக இது உருவானது. 1945 மற்றும் 1949-ம் ஆண்டுகளில் ஏறக்குறைய 150 மாணவர்கள் கல்வி பயின்றதால், இடவசதியில்லாத நிலையில் இத்தமிழ் பள்ளிக்காகப் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்தன.

பள்ளி இணைப்பு

மாணவர்களின் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் இக்கட்டிடம் ஏற்புடையது அல்ல என்ற காரணத்தினால், லோரோங் ஜாவா தேசிய வகை தமிழ்ப்பள்ளி விவேகானந்தா தமிழ்ப்பள்ளியோடு ஒன்றிணைக்கப்பட்டு தலைமையாசிரியர் கெ. இராசையா பொறுப்பேற்க, 96 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் உட்பட விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தனர்.

புதிய கட்டிடம்

பள்ளி சின்னம்

1960-ம் ஆண்டு லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட ஆரம்பித்தது. வி.கந்தையா புதிய தலைமையாசிரியராக வி.சின்னதம்பியிடமிருந்து பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். கி. தோமஸ் 1973-ல் தலைமையாசிரியராக இப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இவருடைய 5 ஆண்டுகால சேவையில் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி பெரிய மாறுதல்களை அடைந்தது. மாணவர்களின் அதிகரிப்பினால் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ஒன்று இவருடைய காலத்தில் கட்டப்பட்டது.

பள்ளிக்கட்டட மேம்பாடு

1978-ல் கி.தோமஸ் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, வி.ஶ்ரீராமன் என்பவர் அவர்கள் லோரோங் ஜாவா தேசிய வகை தமிழ்ப்பள்ளியின் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். இவருடைய காலத்தின்போது, இப்பள்ளியின் வகுப்பறைகள் பதினொன்றைத் தாண்டின. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 15-ஆக உயர்ந்தது. 1986-ம் ஆண்டு வி.ஶ்ரீராமன் ஓய்வு பெற்ற பிறகு, போ.முனியாண்டி அவர்கள் இப்பள்ளியின் தலைமையாசிரியர் பதவிக்கு அமர்த்தப்பட்டார். இரண்டு ஆண்டுகளில் 3 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டிடம் பெற்றோர்களின் ஆதரவுடன் கல்வி அமைச்சின் மானியத்தைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது. போ.முனியாண்டி அவர்கள் பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார்.

பி.அரிகிருஷ்ணசாமி இப்பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பதவி ஏற்றார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் கட்டட வசதி ஆகியவற்றில் அதிக முன்னேற்றம் அடைந்தது. ரி.ம. 370,000 செலவில் 3 மாடிக் கட்டிடம் புதுப்பொலிவோடு காட்சியளித்தது. 10.4.1992ல் இப்புதிய கட்டிடம் அதிகாரப்பூர்வமாக மாண்புமிகு டத்தோ ஶ்ரீ ச.சாமிவேலு அவர்களால் திறப்பு விழா கண்டது.

உருமாற்றம்

போ. முனியாண்டி 1999-ம் ஆண்டில் தலைமையாசிரியராக மீண்டும் பதவியேற்றார். புதிய கணினி வகுப்புகள் உருவாகின. 2003-ம் ஆண்டு .பெ.இராமலிங்கம் அவர்கள் இப்பள்ளிக்குத் தலைமையாசிரியரானார். இவரவது பணிக்காலத்தில் கணினிக்கல்வி கால அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் பட்டியல்
திரு.மெனுவல் 1957
திரு. கனகராஜ் 1958
திரு. அறிவபப்தன் 1959
திரு. கருப்பையா 1960
திரு. கண்டியா 1960 - 1972
திரு. தோமஸ் 1973 - 1978
திரு. வி.ஶ்ரீராமன் PPN 1979 - 1986
திரு. போ.முனியாண்டி 1986 - 1987
திரு. அரிகிருஷ்ணசாமி PPN, PJK 1987 - 1995
திரு. வ.கதிர்வேலு PMC, PJK 1995 - 1998
திரு. முத்தையா PJK 1998
திரு. போ.முனியாண்டி PPN 1999 - 2003
திரு. பெ.இராமலிங்கம் PJK 2003 - 2006
திரு. இரா. பாலாகிருஷ்ணன்PMC 2006 - 2007
திரு. ரோஸ்லான்குமரன்அப்துல்லா PMC 2008


✅Finalised Page