under review

மைசூர் எஸ்.ஸி. பேலூரய்யா

From Tamil Wiki

மைசூர் எஸ்.ஸி. பேலூரய்யா (ஆகஸ்ட் 27, 1900 - மார்ச் 7, 1971) ஒரு புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞர். நாதஸ்வரம் தவிர கிளாரினெட், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், வீணை, கோட்டு வாத்தியம், மிருதங்கம், தபலா மற்றும் ஓபோ என்னும் மேலைநாட்டு இசைக்கருவி அனைத்திலும் திறமை மிக்கவர். நாடக நடிகர், பல இசைப்பள்ளிகளை உருவாக்கியவர். கர்நாடக மாநிலத்தின் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவர்.

இளமை, கல்வி

எஸ்.ஸி. பேலூரய்யா கர்நாடகத்தின் கிருஷ்ணராஜநகர் தாலுகாவில் சாலிக்கிராமம் என்ற கிராமத்தில் சன்னப்பா - புட்டம்மா இணையருக்கு ஆகஸ்ட் 27, 1900 அன்று பிறந்தார். இவரது முன்னோர் மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான இசைக்கலைஞர்களாக இருந்தவர்கள்.

இளமையிலேயே பெற்றோரை இழந்த பேலூரய்யா பணவசதியின்மையால் பள்ளிக்கல்வியை விட வேண்டிய நிலை உருவானது. தன் மூத்த சகோதரர் கேசவய்யாவிடம் இசைப்பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் மைசூர் தொட்ட சீனப்பா என்பவரிடம் நாதஸ்வரப் பயிற்சி பெற்றார். கிளாரினெட் வாசிப்பதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

1918-ம் ஆண்டு ராமம்மா என்பவரை பேலூரய்யா மணந்தார். இவர்களுக்கு கேசவமூர்த்தி (வானொலி வாய்ப்பாட்டுக் கலைஞர்), சென்னகேசவதாஸ் என்ற இரு மகன்களும், சாரதாம்பா, காயத்ரம்மா என்ற இரு மகள்களும் பிறந்தனர்.

இசைப்பணி

பேலூரய்யா குப்பி நாடகக் குழுவில் கிளாரினெட் கலைஞராக சேர்ந்தார். அதே நாடகக் குழுவில் புட்டஸ்வாமய்யா (கன்னட நடிகர் ராஜ்குமாரின் தந்தை) என்பவரோடு சேர்ந்து நடிகராகவும் இருந்தார். மைசூர் அரசவைக் கலைஞராக இருந்த ஸ்ரீனிவாஸய்யா என்பவரிடம் இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார். நாதஸ்வரம் தவிர கிளாரினெட், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், வீணை, கோட்டு வாத்தியம், மிருதங்கம், தபலா மற்றும் ஓபோ என பல இசைக் கருவிகளில் சிறந்த தேர்ச்சி பெற்றார். நாதஸ்வரத்தில் தனித்திறமை பெற்றிருந்த பேலூரய்யா ராக ஆலாபனையில் சிறந்து விளங்கினார்.

சிருங்கேரி பீடத்தில் தங்கச்சங்கிலியும் காசி சால்வையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மைசூர் மன்னரிடம் பல விருதுகளும் சன்மானங்களும் பெற்றிருக்கிறார்.

இசைப்பள்ளிகள்

குருகுல முறையிலேயே நாதஸ்வரம், தவில் இசையைக் கற்க முடியும் என்ற நிலை இருந்த போது, அதற்கென பயிற்சிப் பள்ளிகளை வெவ்வேறு ஊர்களில் ஏற்படுத்த வேண்டுமென தென்னகத்திலேயே முதல் முயற்சி எடுத்தவர் மைசூர் எஸ்.ஸி. பேலூரய்யா.

  • 1928-ம் ஆண்டில் ஹாசன் மாவட்டம் ஹோலே நரசிப்பூரில் ஸ்ரீ சாரதா விலாச சங்கீத பாடசாலையை நிறுவினார்.
  • 1939-ல் ஹாசனில் தியாகராஜ சங்கீத சபை என்ற இசைப்பள்ளியைத் தொடங்கினார்.
  • 1941-ம் ஆண்டு சன்னராயப்பட்டணத்தில் ஒரு இசைப் பள்ளியை ஆரம்பித்து அதன் நிதிக்காக நாடகங்கள் பல நடத்தினார்.
மாணவர்கள்

பேலூரய்யா நிறுவிய இசைப்பள்ளிகளில் பயின்றோர் பலர். ஆனால் அவரிடம் குருகுல முறையில் நேரடியாகப் பயின்றவர் அவருடைய சகோதரியின் மகனும் புகழ் பெற்ற இசைக்கலைஞருமாகிய மைசூர் ஏ.வி. நாராயணப்பா.

சமூகப் பணி

பேலூரய்யா 1934-ம் ஆண்டு மைசூர் மக்களவை பிரதிநிதிப் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1938-ல் கௌரவ மேஜிஸ்ட்ரேட் பதவி, நீதிமன்ற ஜூரி பதவி, போன்றவை வழங்கப்பட்டன. ஆலயங்களின் அறங்காவலர், கூட்டுறவு சங்கத்தின் தலைவர், மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகக் குழுவின் உறுப்பினர் போன்ற பல பதவிகளை வகித்தார். 1920-ம் ஆண்டு அரசியலிலும் நுழைந்து மண்டலக் காங்கிரஸ் குழுவில் இணந்தார்.

1943-ம் ஆண்டு சிறந்த சேவைக்காக மன்னர் ஜயசாமராஜ உடையார் பேலூரய்யாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கினார். மைசூர் நகரசபை உறுப்பினராகவும், மைசூர் அரண்மனை இசைக்குழுவின் ஆலோசகர் குழுவிலும் இருந்தார். மைசூர் அரசினால் தொடங்கப்பட்ட ஆகாசவாணி வானொலி நிலையக் கலைஞராகவும் பணிபுரிந்தார்.

மறைவு

மைசூர் எஸ்.ஸி. பேலூரய்யா மார்ச் 7, 1971 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page