under review

மைக்கல் ஜெயகுமார்

From Tamil Wiki
Jeta.jpg

மைக்கல் ஜெயகுமார் (பிறப்பு:மார்ச் 28, 1955) மலேசியாவின் சமூகச் செயல்பாட்டாளர். மலேசியாவில் அரசியல், சமூகம் எனப் பல்வேறு துறைகளில் செயலாற்றியவர். எளிமையான வாழ்க்கை மூலம் அரசியல் சூழலில் கவனத்தைப்பெற்றவர் டாக்டர் ஜெயகுமார். மலேசியாவில் ஆண்டுதோறும் சொத்துடமை பிரகடனம் செய்யும் அரசியல் தலைவர் என அறியப்படுபவர்.

பிறப்பு, கல்வி

மைக்கல் ஜெயகுமார் மார்ச் 28, 1955-ல் ஜொகூர் பாருவில் தம்பூ தேவராஜ் - எலிசபெத் சரோஜினி ஊர்ஜிதம் இணையருக்குப் பிறந்தார். இவரது தந்தை மருத்துவர். தாயார் ஆசிரியை. 4 சகோதரர்களில் மைக்கல் ஜெயகுமார் நான்காவது பிள்ளை ஆவார். மைக்கல் ஜெயகுமார் தமது தொடக்கக் கல்வியைப் பினாங்கு ஃப்ரீ ஸ்கூல் பள்ளியிலும் மேற்கல்வியை அமெரிக்காவிலும் பெற்றார். இவர் மலேசியாவில் மலாயா பல்கலைகழகத்தில் மருத்துவத் துறையில் கல்வியைப் பெற்றார்.

தனி வாழ்க்கை

மைக்கல் ஜெயகுமார் 1983--ம் ஆண்டு பினாங்கு அரசு மருத்துவமனையில் பயிற்று காலம் முடிந்தவுடன், சரவாக்கில் பணியமர்த்தப்பட்டார். ஏழு மாதங்கள் சரவாக் தலைநகரான கூச்சிங் மருத்துவமனையில் பணியாற்றினார். பின்னர், 1984-ல் சரவாக்கின் உட்புறப்பகுதியான காப்பிட்டில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றினார். 1986--ம் ஆண்டு ஈப்போ அரசு பொது மருத்துவமனையில் வேலை செய்தார். 1991--ம் ஆண்டு தெலுக் இந்தான் மருத்துவமனையில் பணியாற்றினார். தற்போது கிந்தா மெடிகல் சென்டர் எனும் தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார்.

1986-ல் மைக்கல் ஜெயகுமார் மோகனரானி என்பவரை திருமணம் செய்தார். மைக்கல் ஜெயகுமார் - மோகனரானி இணையருக்கு ஒரு மகன்.

ஆன்மிகம்

குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கே சொர்க்கம் கிடைக்கும் எனும் கூற்றில் மானுட பேதம் இருப்பதால் பதின்மூன்று வயதிலேயே தேவாலயத்தில் உறுப்பினர் ஆவதை மைக்கல் ஜெயகுமார் விரும்பாமல் நிராகரித்தார். தன்னை மதமில்லாதவராக அறிவித்தார்.

மருத்துவர் வாழ்க்கை

Jeyakumar.jpg

மைக்கல் ஜெயகுமார் அரசு மருத்துவராக இருக்கவே விருப்பம் கொண்டார். தன் முதல் பணியிடமாக சரவாக் மாநிலத்தில் பழங்குடிகள் வாழும் உட்புறப்பகுதியையே விரும்பிக்கேட்டுப் பெற்றார். பழங்குடிகளின் சுகாராத வாழ்வுக்கு உதவினார்.1992-ல் தெலுக் இந்தானில் எச்.ஐ.வி மறுவாழ்வு பிரிவு தொடங்கப்பட்டபோது அதில் சிறப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டார். எச்.ஐ.வி பரவாமல் இருக்க ஊசியைப் பகிர்ந்து கொள்வதன் ஆபத்து குறித்து அந்த கவுன்சிலிங்கில் பேசி புரிய வைத்தார். ஊசி குத்துவதைத் தவிர்க்க வைத்தார்.

அரசு வேலை துறப்பு

தொடர்ந்து மக்களின் சிக்கல்களுக்குக் குரல் கொடுத்ததாலும் போராட்டங்களில் ஈடுபட்டதாலும் மைக்கல் ஜெயகுமார் வேலை மாற்றத்திற்கு உள்ளானார். அரசாங்கம் அவர் நாட்டில் இருக்கக் கூடாது என வெளிநாட்டில் சிறப்பு மருத்துவக் கல்வி பெற உதவித்தொகையை ஏற்பாடு செய்தது. ஜெயகுமார் அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்து அரசு வேலையைத் துறந்தார். அரசியலில் ஈடுபட்டார். பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார்.

விவாதம்

சரவாக்கில் பணியாற்றுகையில் மைக்கேல் ஜெயக்குமார் சுயமாக ஒரு மருத்துவ முறையைக் கையாண்டார். போதைக்கு அடிமையானவர்களுக்கு அதற்கு மாற்றாக ‘codeine’ எனும் மருந்தை கொடுக்கத் தொடங்கினார். பின்னர் அதன் அளவைக் குறைத்து முழுமையாக நிறுத்தினார். தொடர்ந்து மாத்திரைகளைப் பெற வேண்டும் என்றால் போதைப்பித்தர்கள் முதலில் கவுன்சலிங் வர வேண்டும் எனக் கட்டளையிட்டார். ஒரு போதைப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு இன்னொரு போதையைக் கொடுப்பது குறித்து அப்போது சர்ச்சையும் எழுந்தது. மாநில அளவில் பயன்படுத்தும் ‘codeine’ மாத்திரைகளைவிட ஒரு சிறுவட்டாரத்தில் அதன் பயன்பாடு அதிகம் இருந்ததால் சுகாதார அமைச்சிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன.

பொதுவாழ்க்கை

இலவச கல்வி
Jeyakumar3.jpg

மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் மக்கள் சேவையில் நேரடி அனுபவங்கள் மைக்கல் ஜெயகுமாருக்கு ஏற்பட்டது. இந்திய மாணவர்களை இணைக்கும் சங்கத்தின் ஆண்டுத்திட்டம் வழியாக மூன்று தோட்டங்களைத் தேர்ந்தெடுத்து, ஒரு மாத காலம் பிற மாணவர்களுடன் அங்குத் தங்கினார். ஒரு மாதம் தன்னால் முடிந்ததைச் செய்தார். ஆறுமாதத்திற்குப் பிறகும் தொடர்ந்து அதுபோல நண்பர்களுடன் சென்றுவர ஆரம்பித்தார். அங்குப் பாலர் பள்ளிகளைத் தொடங்கினார். டியூசன் வகுப்புகளை ஆரம்பித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் கல்விக்குழுவை உருவாக்கி, தொடர்ந்து தோட்ட மக்களுக்குச் சேவையாற்றினார். 1986 முதல் 1992 வரை அக்கல்வி குழு சுங்கை சிப்புட்டில் உள்ள மக்களுக்கு இலவச மாலை வகுப்பை நடத்தியது. பிறகு ‘அலைகள்’ எனும் இயக்கமாக அந்தக் கல்விக் குழு மாற்றப்பட்டது.

அலைகள்

இலவச கல்வி வழங்கப்பட்டாலும் அதை முழுமையாகப் பெறும் சூழலை தோட்டங்கள் கொண்டிருக்கவில்லை என மைக்கல் ஜெயகுமார் உணர்ந்தார். மைக்கல் ஜெயகுமார் ‘அலைகள்’ இயக்கத்தின் மூலம் தோட்ட மக்களின் மாத சம்பளம், வீடமைப்புத் திட்டங்கள் குறித்து பேச ஆரம்பித்தார். தோட்ட தொழிலாளிகளிடம் கையொப்பம் வாங்கி அரசாங்கத்திடம் சில புதியத் திட்டங்களைக் கொண்டு சேர்த்தார். ஆனால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

அரசியல்

மைக்கல் ஜெயகுமார் 1986-ல் அரசியலில் இணைந்தார். 1998-ல் மலேசிய சோசியலிஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட போது, மைக்கல் ஜெயகுமார் அந்தக் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார். மலேசிய சோசியலிஸ் கட்சியில் உறுப்பினராகச் செயலாற்றிய காலக்கட்டத்தில், மைக்கல் ஜெயகுமார் ஐந்து முறை பொது தேர்ந்தலில் போட்டியிட்டார். 1999--ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற மைக்கல் ஜெயகுமார், பிறகு 2004--ம் ஆண்டு, 2008-ம் ஆண்டு, 2013-ம் ஆண்டு தொடர்ந்து போட்டியிட்டு சுங்கை சிப்புட் தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதியாக, 2018--ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் தோல்வியுற்றார். சுங்கை சிப்புட்டில் சாமிவேலுவை எதிர்த்து இரண்டு முறை தேர்தலில் தோல்வியுற்ற மைக்கல் ஜெயகுமார், முன்றாவது முறை சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் சாமிவேலுவை வென்றது வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. அரசியல் பலத்திற்கு முன்பாக உண்மையான மக்கள் சேவையில் பலம் நிரூபிக்கப்பட்டதாக அரசியல் விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்டது.

விருது

  • மலேசிய மருத்துவச் சங்கத்தின் சமூகச் சேவை விருது. (1999)

உசாத்துணை

நூல்கள்

  • Sucked Oranges (Insan Press)
  • Logging Against the Natives of Sarawak(Insan Press 1989, 1992)
  • Othukkapadum Samuthayam (Tamil . Alaigal 1993)
  • Speaking Truth to Power (Alaigal 2002)
  • Malaysia at the Crossroads (Parsosma Enterprise 2009)
  • Maaf Tuan Speaker, Saya tidak Dapat Menyokong (bahasa Malaysia. Parsosma Enterprise 2011)
  • EO6 : People Power vs The State (Editor) (Parsosma Enterprise 2012)
  • An Alternative Vision for Malaysia (SIRD 2015; 2018)
  • Visi Alternative untuk Malaysia (Bahasa Malaysia SIRD 2016)
  • Buiding Back Better (SIRD 2021)


✅Finalised Page