under review

மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி.jpg

தேசிய வகை மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ளது. இப்பள்ளி கோல சிலாங்கூர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளியாகும்.

வரலாறு

1936--ம் ஆண்டு தேசிய வகை மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி 35 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. தொடக்கக்காலத்தில் மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி லாடாங் மின்ஞாக் தமிழ்ப்பள்ளி என்று அழைக்கப்பட்டது. 1946-ல், இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகத் திரு. நடேசன் ரெட்டியார் பணியாற்றினார். அவருக்குத் துணையாக இரண்டு ஆசிரியர்கள் போதித்தனர்.

1948-ல் தலைமை ஆசிரியர் திரு. நடேசன் ரெட்டியாருக்குப் பிறகு, இப்பள்ளியின் தலைமைப் பொறுப்பைத் திரு. முகமது காசிம் என்பவர் ஏற்றுக் கொண்டார். திரு. முகமது காசிம் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், பள்ளியின் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து முன்னேற்றம் கண்டது.

பள்ளிக் கட்டிடம்

அத்தாப்புக் கொட்டகையில் தொடங்கப்பட்ட மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடன் தோட்ட நிர்வாகம் பலகையிலான இணைக்கட்டிடம் ஒன்றைக் கட்டியது. இருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கை உயர்வினால், பள்ளியில் இடப்பற்றாக்குறை சிக்கல் ஏற்பட்டது.

பழைய கட்டிடம்

1960--ம் ஆண்டில் மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 60 வரை உயர்ந்தது. ஐந்தாம், ஆறாம் ஆண்டு வகுப்பு மாணவர்கள் இடப்பற்றாக்குறை காரணத்தினால், மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி அருகில் உள்ள சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

பழைய பள்ளிக் கட்டிடம் பாதுகாப்பற்றதாகவும் இடவசதி குறைவானதாகவும் இருப்பதால், புதிய கட்டிடம் ஒன்றினைக் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1984--ம் ஆண்டு மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட ஒரு கட்டடத்தைக் கட்டியது. இதன் விளைவாக 1987--ம் ஆண்டு சுங்கை திங்கி தமிழ்ப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஐந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்கள் மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியிலே பயின்றனர்.

பழைய கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் 1989 ஆண்டு தோட்ட நிர்வாகம் ஒரு பள்ளிக் கட்டடத்தை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு 18,000 சதுர அடி நிலத்தைப் பள்ளிக்காக ஒதுக்கியது. சுங்கை திங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு துவான் ஹாஜி பூசோப் ஹாசான் அவர்களின் முயற்சியில் கல்வி அமைச்சின் மூலம் 45,000 ரிங்கிட் மானியத்தைப் பெற்றுப் புதியக் கட்டடத்தை எழுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் வழி, நான்கு வகுப்பறைகள், ஓர் அலுவலகம், ஆசிரியர் அறை, தலைமையாசிரியர் அறை, பொருள் கிடங்கு, கழிவறை போன்ற வசதிகளைக் கொண்ட ஒரு புதிய பள்ளிக் கட்டிடம் எழுப்பப்பட்டது.

மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி 2.jpg

1989-ம் ஆண்டு புதிய பள்ளிக் கட்டடத்தில் 105 மாணவர்கள் கல்வி கற்றனர். எட்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். மின்சார வசதி இல்லாத நிலையில் இருந்த மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, 1990-ல் மாண்புமிகு டத்தோ ஹாஜி அபு ஹாசான் அவர்களின் மானிய உதவியால் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது.

டிசம்பர் 17, 1991-ல் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. மா. சுப்பையா புதிய கட்டடத் திறப்பு விழாவை விமரிசையாக நடத்தினார். உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகார அமைச்சர் மாண்புமிகு டத்தோ டாக்டர் ஹாஜி ஹாசான் பின் ஹாஜி ஓமார் அவர்களின் தலைமையில் புதிய பள்ளிக்கட்டிடம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய நிலை

நகர வளர்ச்சியினால் அதிகமான மேரி தோட்ட மக்கள் பட்டணத்திற்குக் குடிபெயர்ந்ததால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளி எனும் பிரிவில் இன்று மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகின்றது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✅Finalised Page