மு. முருகேஷ்
மு. முருகேஷ் (பிறப்பு: 1969) சிறார் இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஹைக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் என சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் இயங்கிவருகிறார்.
பிறப்பு மற்றும் தனிவாழ்க்கை
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணத்தில் அக்டோபர் 6,1969 அன்று மு. முருகேஷ் பிறந்தார். இயற்பெயர் மு.முருகேசன். இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்ற இவர், பின்னர் தமிழில் இள முனைவராகப் பட்டம் பெற்றார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி அ. வெண்ணிலா குறிப்பிடத்தக்க தமிழ் கவிஞர், நாவலாசிரியர் மற்றும் வரலாற்று ஆய்வாளர். இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கவின்மொழி. அடுத்து இரட்டையர்கள் நிலாபாரதி மற்றும் அன்புபாரதி. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருக்கும் அம்மையப்பட்டு கிராமத்தில் வாழ்கிறார். "இந்து தமிழ் திசை" நாளிதழில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார்
படைப்புலகம்
1993-ல் இவரது முதல் ஹைக்கூ கவிதை நூல் "விரல் நுனியில் வானம்" வெளிவந்தது. தொடர்ந்து ஹைக்கூ கவிதை நூல்களையும் சிறார் கதைகளையும் எழுதிவருகிறார்.
அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகளைச் சொற்சிக்கனத்தோடு படைப்புகளாக்கி வருவது இவரது இயல்பாகும். முருகேஷின் படைப்புகளில் இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர்.
முருகேஷ் எழுதிய நூல்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஹைக்கூவிற்கு ஒரு தனியிடம் உருவாக்குவதற்காக முயன்றவர்களில் முருகேஷும் ஒருவர். தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கத்திலும் முருகேஷ் பங்களித்துள்ளார்.
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைத் தமிழக வாசகர் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லும் முயற்சியாக இளைய தமிழ்க் கவிஞர்கள் பலரை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் ஹைக்கூ திருவிழாக்களை நடத்தினார். 'இனிய ஹைக்கூ’ என்ற கவிதைச் சிற்றிதழ் ஒன்றைத் தொடங்கி எண்ணற்ற ஹைக்கூ கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பெங்களூரு நகரில் நடைபெற்ற உலக ஹைக்கூ மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். மாநாட்டில் நடைபெற்ற உலகம் தழுவிய பன்மொழிக் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசும் பெற்றார்.
மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதமி ஆதரவு பெற்று மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்குச் சென்று தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
சமூகச் செயல்பாடுகள்
- புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தில் கலைக்குழு பயிற்சியாளர், மாவட்டத் தகவல் தொகுப்பாளர்.
- சென்னை லயோலா கல்லூரி பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஊடகக் கல்விப் பயிற்றுநர்.
- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மக்கள் பள்ளி இயக்க மாநிலக் கருத்தாளர்
- ஆர்.எம்.ஏ. கலைக்கோட்டத்தின் உலக வங்கித் திட்டமான புதுவாழ்வுத் திட்ட'த்தின் மாநிலக் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்.
- சுனாமி பாதித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் யுனிசெஃப் நடத்திய 'பள்ளிக்குப் பின்னர்' திட்டத்தின் மாநிலப் பயிற்சியாளர்.
- 1993-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளையும் சிறார் நூல்களையும் எழுதிவருவதுடன், மாணவர்களிடமும் இளையோர்களிடமும் அவற்றை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் நிகழ்வுகளில் பங்கேற்று வாசிப்பை ஊக்கப்படுத்துகிறார்.
இலக்கிய இடம்
2010-ம் ஆண்டு மு. முருகேஷ் எழுதி வெளியிட்ட 'குழந்தைகள் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து எனும் திட்டத்தில் தேர்வாகி, தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது
விருதுகளும் பரிசுகளும்
- "அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை" என்ற சிறார்கதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேஷிற்கு, 2021-ம் ஆண்டுக்கான பால சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
- பாரத ஸ்டேட் வங்கியின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசுகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செல்வன் கார்க்கி கவிதை விருது
- திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசு
- கலை, இலக்கியச் சிந்தனையாளர் மன்றம் சார்பில் சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு
- கம்பம் பாரதி இலக்கியப் பேரவை பரிசு
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி சிறுவர் இலக்கிய நூலுக்கான பரிசு.
- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கப் பரிசு.
- தவத்திரு குன்றக்குடி அடிகளார்’ நினைவு விருது
நூல்கள்
புதுக்கவிதை நூல்கள்
- பூவின் நிழல்
- கொஞ்சும் ஹைக்கூ, கொஞ்சம் புதுக்கவிதை
- 36 கவிதைகளும், 18 ஓவியங்களும்
- நீ முதல், நான் வரை
- குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன
- கடவுளோடு விளையாடும் குழந்தைகள்
- மனசைக் கீறி முளைத்தாய்
- கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள்
ஹைக்கூ நூல்கள்
- விரல் நுனியில் வானம்
- என் இனிய ஹைக்கூ
- தோழமையுடன்
- ஹைக்கூ டைரி
- தரை தொடாத காற்று
- நிலா முத்தம்
- என் இனிய ஹைக்கூ
- உயிர்க் கவிதைகள்
- வரும்போலிருக்கிறது மழை
- தலைகீழாகப் பார்க்கிறது வானம்
- குக்கூவென…
சிறுகதை நூல்
- இருளில் மறையும் நிழல்
சிறார்களுக்கான நூல்கள்
- பெரிய வயிறு குருவி
- உயிர்க் குரல்
- ஹைக்கூ குழந்தைகள்
- மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்
- கொஞ்சம் வேலை நிறைய சம்பளம்
- காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி
- குழந்தைகள் – சிறுகதைகள்
- எடுத்தேன் படித்தேன் தேன் கதைகள்
- படித்துப் பழகு
- பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
- ஒல்லி மல்லி குண்டு கில்லி
- அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
- தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்
- தினுசு தினுசா விளையாடலாமா..?
- நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை
- குழந்தைகள் உலகம் – உள்ளே வெளியே
- குழந்தைகளல்ல குழந்தைகள்
- சின்னச் சிறகுகளால் வானம் அளப்போம்
பிற நூல்கள்
- மின்னல் பூக்கும் இரவு
- ஹைக்கூ கற்க
- ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை
- பெண்ணியம் பேசும் தமிழ் ஹைக்கூ
- தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்...
- இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
- ஆயிரம் பூக்கள் மலரட்டும்
- குழந்தைகளால் அழகாகும் பூமி
- வெற்றியின் எல்லை வெகுதூரமில்லை
- பூமியெங்கும் புத்தக வாசம்
- தெருவோர தேசம்
- மழைத்துளிப் பொழுதுகள்
- என் மனசை உன் தூரிகைத் தொட்டு
- கிண்ணம் நிறைய ஹைக்கூ
- வேரில் பூத்த ஹைக்கூ
- நீங்கள் கேட்ட ஹைக்கூ
- திசையெங்கும் ஹைக்கூ
- இனியெல்லாம் ஹைக்கூ
- ஹைக்கூ நந்தவனம்
- மலையிலிருந்து கதை அருவி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:58 IST