முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் (1853-1936) ஈழத்து தமிழ்ப்புலவர். பழந்தமிழ் இலக்கியங்களை மெய்ப்பு நோக்கி சீர்ப்படுத்தியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் புலோலியூரில் மகாதேவ ஐயருக்கு 1853-ல் மகனாகப் பிறந்தார். தந்தையார் ஏடு தொடக்கி தமிழும் சமஸ்கிருதமும் கற்பித்தார். வண்ணார் பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதம், காவிய வியாகரணங்களைக் கற்றார். பிராமணர்களுக்குரிய வைதிகக் கிரியைகளையும் கற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களை உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடம் கற்றார். வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளையிடம் தமிழ் நூல்களைப் பயின்றார். ஜோதிட கணித சாத்திரத்திலும் புலமை பெற்றார்.
பதினெட்டாவது வயதில் ஆசாரியாபிஷேகம் செய்யப்பட்டார். ஆசிரியராக இருந்து ஆலயக்கிரியைகள் செய்வதற்கான வழிமுறைகளைக் கற்றார். சைவ சித்தாந்த நூல்களைக் கற்றார். புராணங்களில் பயிற்சி பெற்றார். புலோலிப் பசுபதீசுரன் கோயிலுக்கு அர்ச்சகராயிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
திருநெல்வேலி ஞானப்பிரகாச சுவாமிகள் சமஸ்கிருதத்தில் எழுதிய 'பிரமாண தீபிகாவிருத்', 'சிவஞானபோத விருத்தி', 'சித்தாந்த சிகாமணி' ஆகிய சைவ சித்தாந்த நூல்களை நல்லூர் த. கைலாச பிள்ளையவர்கள் அச்சிடுவதற்காக முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் மெய்ப்பு நோக்கி பரிசோதித்துக் கொடுத்தார்.
மாணவர்கள்
- ச. சுப்பிரமணிய சாத்திரிகள்
- க. கணபதிப் பிள்ளை
மறைவு
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் 1936-ல் காலமானார்.
நூல் பட்டியல்
மெய்ப்பு நோக்கியவை
- சிவபெருமான் அலங்காரம்
- பசுபதீசுரர் அந்தாதி
உசாத்துணை
✅Finalised Page