under review

மிஃராஜ் மாலை

From Tamil Wiki
மிகுறாசு மாலை

மிஃராஜ் மாலை (மிகுறாசு மாலை) (பொ.யு. 1590) ஆலிப் புலவர் எழுதிய இஸ்லாமியக் காவியம். நபிகள் நாயகத்தின் விண்ணேற்றம் பற்றிய பாடல்கள் கொண்டது

எழுத்து

ஆலிப் புலவர் நபிகள் நாயகம் செய்த வான்பயணத்தைக் காவியமாக இயற்ற விரும்பி காயல்பட்டினம் சென்று நபி அவர்களின் வான் பயணம் பற்றிய அரபி நூல் ஒன்றைப் பெற்று அவ்வூர் 'காஜி’யாக இருந்த ஸையிது முஹம்மது அலாவுத்தீனிடம் அதனைக் கொடுத்து தமிழ் உரை பெற்றார். இது ஹிஜ்ரி ஆண்டு 998-ல் (பொது யுகம்: 1590) நிகழ்ந்தது. இவர் தாம் இயற்றிய நூலுக்கு மிஃராஜ் மாலை (மிகுறாசு மாலை) என்று பெயரிட்டார்.

அரங்கேற்றம்

மிஃராஜ் மாலை 12 படலங்களும் 743 செய்யுட்களும் கொண்டது. காவியத்தை அரங்கேற்றுவதற்காக கோட்டாறு சென்றார் . அங்குத் தம் மாணவர் சிவலிங்கம் செட்டியார் வீட்டில் தங்கிக்கொண்டு முஸ்லீம்களிடம் சென்று தாம் வந்த நோக்கத்தை கூறினார். அங்கிருந்த முஸ்லீம்கள் அதற்கு ஆதரவு அளிக்கவில்லை. அதனை அறிந்த சிவலிங்கம் செட்டியார் தமக்குத் தெரிந்த பாவாடைச் செட்டியார் என்னும் செல்வந்தர் உதவியுடன் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். ரஜப் பிறை 1, (1590) வெள்ளிக்கிழமை இரவு நூல் அரங்கேற்றப்பட்டது

வழிபாடு

ஆலிப் புலவர் மிஃராஜ் மாலையைத் தம் கைப்பட எழுதிய பிரதியைத் தம் நெஞ்சோடு வைத்து அடக்குமாறு கூறியதற்கு ஏற்ப அடக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. மிஃராஜ் மாலை பாடப்பட்ட பள்ளிவாயில் இப்பொழுது வேம்படிப் பள்ளிவாயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

வடிவம், நடை

இந்நூல் கடவுள் வணக்கம்,நாட்டுச் சிறப்பு, பாயிரச் சிறப்பு, புறாக்குச் சிறப்பு, பைத்துல் முகத்திசு சிறப்பு, ஏணிச் சிறப்பு, எழுவான் சிறப்பு, நரகத்தியல்பு, சொர்க்கச் சிறப்பு,அறுசுச் சிறப்பு, நபியுல்லா பனியீசுறாயீல்களைக் கண்ட சிறப்பு, நபியுல்லா மக்கத்துக்கு வந்த சிறப்பு ஆகிய பகுதிகள் கொண்டது.

உருவிலியா உணவிலியா உள்ளொளிக்கு மேலொளியா
தருவிலியா அயர்விலியா அண்டபகிரண்டமெனும் அடிக்கிலில்லா
வெருவிலியா எற்குமொரு மெய்ப்பொருளாய் விளங்கிய வல்கம்மதாய் நின்ற
ஒருபொருளை பெரும்பொருளென்றே எவரும் உட்கருத்தினில் வைத்து உணருவீரே

என்று இதன் கடவுள் வாழ்த்து அமைந்துள்ளது

உசாத்துணை


✅Finalised Page