மயிலாசல சதகம்
- சதகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சதகம் (பெயர் பட்டியல்)
மயிலாசல சதகம் (1911) சதக இலக்கிய நூல்களுள் ஒன்று. மயிலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது. இதன் ஆசிரியர் நமசிவாய நாவலர்.
வெளியீடு
மயிலாசல சதகம் நூல் பொம்மபுரம் சிவஞானபாலய தேசிகர் ஆதினத்தின் மகா வித்துவான் நமசிவாய நாவலரால் இயற்றப்பட்டது. 1911-ல், பண்ருட்டி மணி அப்பாவையரின் கட்டளைப்படி, நமசிவாய நாவலரின் மகன் சுப்பிரமணிய ஐயரால், சென்னை மஹாலட்சுமி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
மயிலாசல சதக நூல், மயிலத்தில், பொம்மபுரம் 75-ம் பட்டத்துச் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் அரங்கேற்றப் பெற்றது.
ஆசிரியர் குறிப்பு
மயிலாசல சதகம் நூலை இயற்றியவர், பொம்மபுரம் சிவஞானபாலய தேசிகர் ஆதீனத்தின் மகா வித்துவான் நமசிவாய நாவலர். இவர், பண்ருட்டியில் வீரசைவ சமயம் சார்ந்த குடும்பத்தில் சுப்பிரமணிய ஐயர் என்பவருக்குப் பிறந்தார். சுப்பிரமணிய ஐயர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயரின் மாணவர். தன் மகனுக்கும் அவர் இலக்கிய, இலக்கணங்களைப் போதித்தார். நமசிவாய நாவலர், இராமலிங்கத் தம்பிரானிடம் கல்வி கற்றார். மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நண்பராகத் திகழ்ந்தார். நமசிவாய நாவலரின் காலம் பொ.யு. 1845 முதல் 1897 வரை என்று அறியப்படுகிறது.
நூல் அமைப்பு
மயிலாசலம் என்பது மயிலம் + அசலம் = மயிலத்தில் உள்ள மலை என்று பொருள்படும். மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊர். அங்குள்ள மலை மீது எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் மீது பாடப்பட்ட சதகம் என்னும் சிற்றிலக்கிய நூல் மயிலாசல சதகம். நூலின் தொடக்கத்தில் வெண்பா யாப்பில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் உள்ளது. அதனைத் தொடர்ந்து முருகக் கடவுள் வணக்கமாக இரு செய்யுள்கள் உள்ளன. கழி நெடிலடி ஆசிரிய விருத்தமாக நூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும்,
மயிலைகண் படுகமல வயலைகண்
டுறைநாரை மயிலைசண் முகதேவனே”
- என்ற வரிகளை ஈற்றடியாகக் கொண்டுள்ளன.
உள்ளடக்கம்
மயிலாசல சதகம் நூலில் கீழ்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம்பெற்றன.
- வேதியர் சிறப்பு
- அரசர் சிறப்பு
- இராஜ சமூகம்
- வைசியர் பெருமை
- வேளாளர் சிறப்பு
- சங்குகர்ணன் வரலாறு
- சங்குகர்ணன் பூமியில் அவதரித்தது
- மயிலத்துக்கு வந்து வணங்குதல்
- தவம் செய்து வள்ளி, தெய்வயானை, முருகன் அருள் பெற்றது
- திருநீறு
- உருத்திராக்கம்
- பஞ்சகெளவியம்
- அபிடேகப் பொருள்கள்
- அர்ச்சனைக்குரிய மலர்கள்
- என, சமய வழிபாடு தொடர்பான பல செய்திகள் இடம்பெற்றன.
மேலும் விரதங்கள் பற்றியும், சிவனடியார்க்குச் செய்ய வேண்டிய உபசாரங்கள், இல்லறத்தார்க்குரிய கடமைகள், கற்புடைய மடவாரின் ஒழுக்கங்கள் எனப் பல செய்திகளைக் கூறும் தலைப்பிலான பாடல்கள் பல இடம்பெற்றன.
மதிப்பீடு
மயிலாசல சதகம் முருகனின் புகழ் கூறும் துதி நூல்.அதே சமயம் பாலசித்தர், சிவஞான பாலய சுவாமிகள் போன்றோர் பற்றிய வரலாறுகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. மக்களுக்கான நீதிகள் பலவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. பக்திச் சதக நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மயிலாசல சதகம் நூல் அறியப்படுகிறது.
பாடல் நடை
விநாயக வணக்கம்
பூவெண் கயத்தூரும் புரந்தரனே முதலாய
காவெண் புலத்தாரைக் காத்தளித்தக் - கோவண்
மயிலா சலவேண்மேல் மாசதகம் செப்புதற்குப்
பயிலார்கோட் டைங்கரகண் பார்
திருநீற்றின் வகை
உலகத்துயிர்க்கெலாமிகபரத்தின் பங்களுதவுவெண்டிரு நீறதுவோ
தரியகற்பமனுகற்பமுபக ற்பமேல்வுரியவகை மூன்றனுள்ளே - யிலகு
நற்கோமயந்தரையில் விழுமுன்னரே வெள்ளிபொற்றகடீதலா லெழின்
முளரியிலையிலு மேந்திசொல் வில்வங்க வர்ந்தினிதின் விளைவித்ததே
நிலவுநற்கற்பமாம் வில்வங்கணீக்கியதி லேந்திவிளைவித்த ததுவு நிகழு
மனுகற்பமாந்தரை விழுந்திட்ட பினியமித்த துபகற்பமாம் - மலினமறு
நீற்றினைச் சிந்தையுற்ற ணிவோர் கண்மாத் துயர்க்கடற்கடப்பார் -
மயிலைகண்படு கமலவயலை கண்டுறைநாரை மயிலைசண்முகதேவனே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2024, 18:33:14 IST