under review

மதுரஞ்சுந்தரபாண்டியனார்

From Tamil Wiki

மதுரஞ்சுந்தரபாண்டியனார் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். முருகன் மீது பக்திப்பாடல்கள் பாடியவர். திருக்குளந்தை முருகக்கடவுள் திருவருண்மாலை முக்கியமான படைப்பு. பழைய தமிழ் நூல்களை பதிப்பித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரஞ்சுந்தரபாண்டியனார் மதுரையில் 20-ம் நூற்றாண்டில் பிறந்தார். தேவாரம் ஓதும் பணி செய்தார். பலவகை நூல்களை ஓதிக் கற்றார். முருகனின் மீது பக்தி கொண்டு பல தலங்களுக்குச் சென்று பாடல்கள் பாடினார்.

இலக்கிய வாழ்க்கை

திருக்குளந்தை என்று அழைக்கப்பட்ட பெரியகுளத்தில் எழுந்தருளிய முருகன் மீது 'திருக்குளந்தை முருகக்கடவுள் திருவருண்மாலை' நூலை இயற்றினார். வெளிவராத பழைய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தலைச்சங்க நூலான செங்கோன் தரைச்செலவு நூலை அச்சிட்டு வெளியிட்டார். அரசன் சண்முகனாரின் திருக்குறள் விருத்தியை அச்சிட்டார். இடைக்காடனார் பாடிய 'மூவடி முப்பது' நூலைப் பதிப்பித்தார். திருப்பரங்குன்றத்திலிருந்து பழமுதிர்சோலை வரையுள்ள முருகத்தலங்களைப் பாடிய 'முருகக் கடவுள் வாழ்த்து திருவகவல்' நூலை இயற்றினார். திருப்பரங்குன்றம் முருகனின் மீது 'முருக மணிமாலை 'நூலை இயற்றினார். க.நா.சு இவரின் பாடல்களை பாராட்டியுள்ளார்.

பாடல் நடை

திருக்குளந்தை முருகக்கடவுள் திருவருண்மாலை

சாதியெனும் பேய்பிடித்தார் எல்லாருங் கூடித்
தாழ் வுயர்வொன் றறியாமல் சாந்துணையும் வீணே
வீதியிலே வாசலிலே கோயில்குளந்த் தனிலே
மேல்கீழென் றொருவரைமற் றொருவர்வெறுத் தலைவர்

நூல் பட்டியல்

  • திருக்குளந்தை முருகக்கடவுள் திருவருண்மாலை
  • முருகக் கடவுள் வாழ்த்து திருவகவல்
  • முருக மணிமாலை

உசாத்துணை


✅Finalised Page