under review

ப. சிவகாமி

From Tamil Wiki
ப. சிவகாமி

ப. சிவகாமி (பிறப்பு: ஜுன் 17,1957) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். இதழாளர், ஆட்சிப்பணியாளர், அரசியல்வாதி. தமிழகத்தின் தலித் அரசியலியக்க முன்னோடிகளில் ஒருவராகவும், தலித் பண்பாட்டியக்கத்தை முன்னெடுப்பவராகவும் சிவகாமி கருதப்படுகிறார். தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ அலைக்குப்பின் உருவான அரசியல்சார்ந்த யதார்த்தவாத எழுத்துக்களை முன்வைத்தவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

சிவகாமி அமைப்பு

ப. சிவகாமி திருச்சி பெரம்பலூரில் பழனிமுத்து, தாண்டாயி இணையருக்கு ஜுன் 17, 1957-ல் பிறந்தார். தந்தை பழனிமுத்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவருக்கு இரு மனைவிகள், பதின்மூன்று குழந்தைகள். சிவகாமியின் அம்மா குஜராத்-மகாராஷ்டிரப் பின்னணி கொண்டவர்.

பெரம்பலூரில் உள்ள புனித டொமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்காவில் 'பெண்களின் அரசியல் பங்களிப்பு' குறித்து ஒரு வருட ஆய்வுப்படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

ப. சிவகாமி

சிவகாமி 1980-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் (ஐ.ஏ.எஸ்) தேர்ச்சி பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகள் பணியில் இருந்தார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் ஆட்சியாளராகப் பணியாற்றினார். தொழிலாளர் துறை கூடுதல் செயலாளராகவும் சுற்றுலாத்துறை இயக்குநராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். ஜப்பானில் இந்திய சுற்றுலாத்துறை இயக்குநராக பணியாற்றினார். The Business Standard இதழில் February 2016-ல் வெளியான பேட்டியில் சிவகாமி 'அரசு நிர்வாகத்தில் தான் தீண்டப்படாதவராகவே நடத்தப்பட்டேன் 'என்று சொல்லியிருக்கிறார்.

சிவகாமி ஏப்ரல் 24, 1985-ல் சந்திரபோஸ்-ஐ மணந்தார். இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் சுனந்த் ஆனந்த் அமெரிக்காவில் பொறியியல் மேற்படிப்பு படிக்கச் சென்றபோது 2015-ல் கார்விபத்தில் மறைந்தார். மூத்தமகன் பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.

அரசியல் வாழ்க்கை

2009 முதல் ப.சிவகாமி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கன்னியாகுமாரியில் போட்டியிட்டார். 2016-ல் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் போட்டியிட்டுள்ளார்.

அமைப்புப்பணிகள்

  • ப.சிவகாமி 2009-ல் "சமூக சமத்துவ படை" என்ற கட்சியை நிறுவினார்.
  • பஞ்சமி நில மீட்புக்காக 'தலித் நில உரிமை இயக்க'த்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி, நில உரிமைக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தினார்.
  • 'பெண்கள் முன்னணி' என்ற அமைப்பின் மூலம், 2007-ம் ஆண்டு மதுரையில் ஒரு லட்சம் பெண்களைத் திரட்டி, பெண்கள் கலை இரவு' நிகழ்ச்சியை நடத்தினார்.
  • 2008-ம் ஆண்டு, இரண்டரை லட்சம் பெண்களைத் திரட்டி, 'பெண்களும் அரசியலும்' மாநாட்டை நடத்தினார்.

இதழியல்

சிவகாமி 1995 முதல் தமிழ் இலக்கிய இதழான 'புதிய கோடாங்கி'யில் கட்டுரை, சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார். புதிய கோடங்கி என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

ப. சிவகாமி

இலக்கிய வாழ்க்கை

சிவகாமி தலித் அரசியல் பண்பாட்டியக்கத்தின் சார்பில் இலக்கியப் பணிகளில் ஈடுபட்டவர். நவீனத்துவ அலைக்குப் பின் அரசியல் சார்ந்த யதார்த்தவாத எழுத்தை முன்வைத்த எழுத்தாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

சிறுகதைகள்

ப. சிவகாமியின் முதல் சிறுகதை 1975-ல் 'தினமணிக்கதிரில்' வெளியானது. நித்யா என்ற புனைபெயரில் 'இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை 1986-ல் வெளியிட்டார்.'கடைசிமாந்தர்' என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதி 1997-லும், "கதைகள்" என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுதி 2003-லும் வெளிவந்தன.

நாவல்கள்

ப.சிவகாமியின் முதல் நாவல் 'பழையன கழிதலும்' 1988-ல் வெளியானது. 'ஆனந்தாயி', 'குறுக்குவெட்டு', 'உண்மைக்கு முன்னும் பின்னும்' ஆகியவை பிற நாவல்கள். 'The Cross section' என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட குறுக்குவெட்டு என்ற நாவல் சாகித்ய அகாதெமி தேர்ந்தெடுத்த 100 சிறந்த நாவல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

தான் எழுதிய பழையன கழிதலும் நாவலைத் தானே திறனாய்வு செய்து அதன் துணைப்பனுவலை உருவாக்கினார். இவ்வாறு மறுவாசிப்புக்கு உட்படுத்தி தினகரம் இதழில் 'நானும் நானும்' என்ற பெயரில் மீட்டெழுதினார். நூலாக வெளிவந்த அது பழையன கழிதலும் ஆசிரியர் குறித்து எனும் பொருளில் சுருக்கமாக 'பகஆகு' என்ற பெயரில் 1997-ல் வெளியானது.

குறும்படம்

ஓவியர் சந்ரு எழுதிய சிறுகதையை 'ஊடாக' என்ற பெயரில் குறும்படமாக ப. சிவகாமி இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். 1995-ல் இப்படம் குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றது.

பார்க்க: ஊடாக குறும்படம்

ஆவணப்படம்

நீலம் பண்பாட்டு மையம் வழங்கும் வேர்ச்சொல் இலக்கிய விருதஒயொட்டி "அறத்தீ" என்ற ஆவணப்படம் சாமுவேல் அற்புதராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்டது.

பார்க்க: அறத்தீ ஆவணப்படம்

விருதுகள்

  • நீலம் பண்பாட்டு மையம் வழங்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது - 2025

இலக்கிய இடம்

தமிழக தலித் இலக்கிய அலை உருவான காலகட்டத்தில் சிவகாமி பழையன கழிதலும் என்னும் நாவல் வழியாக முக்கியமான ஒரு தொடக்கத்தை நிகழ்த்தினார். தலித் வாழ்க்கையின் பண்பாட்டுச்சித்திரத்தை விமர்சனமும் அங்கதமும் கொண்ட மொழியில் முன்வைப்பவை அவருடைய நாவல்கள். இந்தியப்பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல்களில் ஒன்று என்று ஆனந்தாயி நாவலை ஞானி மதிப்பிட்டார். தமிழில் தலித் அழகியலை பின்நவீனத்துவக் கதைசொல்லும் முறையில் பல இடைவெட்டுகளுடன் வரலாற்றுக்குறிப்புகளுடன் எழுதிய படைப்பாளிகளில் ஒருவர் சிவகாமி. அதிகார அமைப்பின் இயக்கத்தையும் உண்மைக்கு முன்னும் பின்னும் போன்ற நாவல்கள் வழியாக சித்தரித்துள்ளார். தமிழ் அரசியல் சார்ந்த புனைவெழுத்தாளர்களில் முக்கியமானவர். நவீனத்துவ அலைக்குப்பின் உருவான 'அரசியல் யதார்த்தவாதம்' சார்ந்த எழுத்துக்களை உருவாக்கியவர்களில் ஒருவர்.

நூல் பட்டியல்

நாவல்கள்
  • பழையன கழிதலும் (1989) (பகஆகு என 1997-ல் மீள எழுதப்பட்டது)
  • ஆனந்தாயி (1992)
  • குறுக்கு வெட்டு
  • நாளும் தொடரும்
  • உண்மைக்கு முன்னும் பின்னும் (2012, உயிர்மை பதிப்பகம்)
  • உயிர் (எதிர் வெளியீடு) (2016)
சிறுகதைத்தொகுப்பு
  • இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள
  • கடைசி மாந்தர்
  • சிவகாமியின் கதைகள் (2014, அடையாளம் பதிப்பகம்)
கவிதைத் தொகுப்பு
  • கதவடைப்பு
  • பயனற்ற கண்ணீர்
கட்டுரைத் தொகுப்பு
  • இடது கால் நுழைவு
  • உடல் அரசியல்
மொழிபெயர்க்கப்பட்டவை
  • The Grip of Change (P.Sivagami) (பழையன கழிதலும்)
  • The Taming of Women (Pritham K Chakravarthy) (ஆனந்தாயி)
  • Cross Section (சாகித்ய அகாடமி) (குறுக்கு வெட்டு)
தொகுப்பாசிரியர்
  • தலித் சிறுகதைத் தொகுப்பு (சாகித்ய அகாதமி)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Apr-2023, 16:37:48 IST