ப. சிவகாமி
ப. சிவகாமி (பிறப்பு:1957) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். இதழாளர், ஆட்சிப்பணியாளர், அரசியல்வாதி. தமிழகத்தின் தலித் அரசியலியக்க முன்னோடிகளில் ஒருவராகவும், தலித் பண்பாட்டியக்கத்தை முன்னெடுப்பவராகவும் சிவகாமி கருதப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
ப. சிவகாமி திருச்சி பெரம்பலூரில் பழனிமுத்து, தாண்டாயி இணையருக்கு 1957-ல் பிறந்தார். தந்தை பழனிமுத்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவருக்கு இரு மனைவிகள், பதின்மூன்று குழந்தைகள். சிவகாமியின் அம்மா குஜராத்-மகாராஷ்டிரப் பின்னணி கொண்டவர்.
சிவகாமி பட்டப்படிப்பையும் பட்டமேற்படிப்பையும் வரலாற்று துறையில் முடித்தார். தமிழ், ஆங்கிலம், ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்காவில் 'பெண்களின் அரசியல் பங்களிப்பு’ குறித்து ஒரு வருட ஆய்வுப்படிப்பை முடித்தார்.
தனிவாழ்க்கை
சிவகாமி 1980-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் (ஐ.ஏ.எஸ்) தேர்ச்சி பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகள் பணியில் இருந்தார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் ஆட்சியாளராகப் பணியாற்றினார். தொழிலாளர் துறை கூடுதல் செயலாளராகவும் சுற்றுலாத்துறை இயக்குநராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். ஜப்பானில் இந்திய சுற்றுலாத்துறை இயக்குநராக பணியாற்றினார். The Business Standard இதழில் February 2016-ல் வெளியான பேட்டியில் சிவகாமி ‘அரசு நிர்வாகத்தில் தான் தீண்டப்படாதவராகவே நடத்தப்பட்டேன் ’என்று சொல்லியிருக்கிறார்.
சிவகாமி மணமானவர். இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் சுனந்த் ஆனந்த் அமெரிக்காவில் பொறியியல் மேற்படிப்பு படிக்கச் சென்றபோது 2015-ல் கார்விபத்தில் மறைந்தார். மூத்தமகன் பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
அரசியல் வாழ்க்கை
2009 முதல் ப.சிவகாமி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கன்னியாகுமாரியில் போட்டியிட்டார். 2016-ல் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் போட்டியிட்டுள்ளார்.
அமைப்புப்பணிகள்
- ப.சிவகாமி 2009-ல் "சமூக சமத்துவ படை" என்ற கட்சியை நிறுவினார்.
- பஞ்சமி நில மீட்புக்காக `தலித் நில உரிமை இயக்க'த்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி, நில உரிமைக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தினார்.
- `பெண்கள் முன்னணி' என்ற அமைப்பின் மூலம், 2007-ம் ஆண்டு மதுரையில் ஒரு லட்சம் பெண்களைத் திரட்டி, பெண்கள் கலை இரவு' நிகழ்ச்சியை நடத்தினார்.
- 2008-ம் ஆண்டு, இரண்டரை லட்சம் பெண்களைத் திரட்டி, `பெண்களும் அரசியலும்' மாநாட்டை நடத்தினார்.
இதழியல்
சிவகாமி 1995 முதல் தமிழ் இலக்கிய இதழான 'புதிய கோடாங்கி'யில் கட்டுரை, சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார். புதிய கோடங்கி என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
சிவகாமி தலித் அரசியல் பண்பாட்டியக்கத்தின் சார்பில் இலக்கியப் பணிகளில் ஈடுபட்டவர்.
சிறுகதைகள்
ப. சிவகாமியின் முதல் சிறுகதை 1975-ல் 'தினமணிக்கதிரில்’ வெளியானது. நித்யா என்ற புனைபெயரில் 'இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை 1986-ல் வெளியிட்டார்.'கடைசிமாந்தர்' என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதி 1997-லும், "கதைகள்" என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுதி 2003-லும் வெளிவந்தன.
நாவல்கள்
ப.சிவகாமியின் முதல் நாவல் 'பழையன கழிதலும்' 1988-ல் வெளியானது.'ஆனந்தாயி'; (1992),'குறுக்குவெட்டு' (1999) ஆகிய நாவல்கள் வெளிவந்தன.
சாகித்ய அகாதெமி தேர்ந்தெடுத்த 100 சிறந்த நாவல்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகாமியின் 'The Cross section’ என்கிற நாவல்தான் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. 1995-ம் ஆண்டு 'குறுக்குவெட்டு’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்த நாவல் இது.
ஆவணப்படம்
ஓவியர் சந்ரு எழுதிய 'ஊடாக' என்ற சிறுகதையை அதே பெயரில் குறும்படமாக ப. சிவகாமி இயக்கினார். 1995-ல் இப்படம் குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றது.
இலக்கிய இடம்
தமிழக தலித் இலக்கிய அலை உருவான காலகட்டத்தில் சிவகாமி பழையன கழிதலும் என்னும் நாவல் வழியாக முக்கியமான ஒரு தொடக்கத்தை நிகழ்த்தினார். தலித் வாழ்க்கையின் பண்பாட்டுச்சித்திரத்தை விமர்சனமும் அங்கதமும் கொண்ட மொழியில் முன்வைப்பவை அவருடைய நாவல்கள். இந்தியப்பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல்களில் ஒன்று என்று ஆனந்தாயி நாவலை ஞானி மதிப்பிட்டார். தமிழில் தலித் அழகியலை பின்நவீனத்துவக் கதைசொல்லும் முறையில் பல இடைவெட்டுகளுடன் வரலாற்றுக்குறிப்புகளுடன் எழுதிய படைப்பாளிகளில் ஒருவர் சிவகாமி. அதிகார அமைப்பின் இயக்கத்தையும் உண்மைக்கு முன்னும் பின்னும் போன்ற நாவல்கள் வழியாக சித்தரித்துள்ளார்.
நூல் பட்டியல்
நாவல்கள்
- பழையன கழிதலும்
- ஆனந்தாயி
- குறுக்கு வெட்டு
- நாளும் தொடரும்
- உண்மைக்கு முன்னும் பின்னும்
சிறுகதைத்தொகுப்பு
- இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள
- கடைசி மாந்தர்
- கதைகள்
கவிதைத் தொகுப்பு
- கதவடைப்பு
- பயனற்ற கண்ணீர்
கட்டுரைத் தொகுப்பு
- இடது கால் நுழைவு
- உடல் அரசியல்
English
- The Grip of Change (P.Sivagami) (பழையன கழிதலும்)
- The Taming of Women (Pritham K Chakravarthy) (ஆனந்தாயி)
இணைப்புகள்
உசாத்துணை
- ப. சிவகாமி: தென்றல்
- உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் பற்றி ஜெயமோகன்
- ப. சிவகாமி: tamilvu
- ப. சிவகாமி: நேர்கணல்: விகடன்
- ப. சிவகாமி: நேர்கணல்: குங்குமம்]
- Ceaseless Sadism against Women in P. Sivakami’s: The Taming of Women
- https://gulfnews.com/world/asia/india/watch-priyanka-gandhi-detained-in-congress-protest-march-to-pms-residence-1.89734834
- Japan Times Sivagami
- ப.சிவகாமி நேர்காணல்
- சிவகாமி இடதுகால் நுழைவு பிரேம்
- Scripting change sivagami
- Sivagami interview
- BUREAUCRACY TREATED ME LIKE AN UNTOUCHABLE, SAYS EX-IAS OFFICER SIVAKAMI
- சிவகாமி பேட்டி காணொளி
- 5 கேள்விகள், 5 பதில்கள்: விரும்பியதை நடைமுறைப்படுத்தும் களம் அரசியல்தான்! - சிவகாமி ஐ.ஏ.எஸ்.
- சிவகாமி ஐ.ஏ.எஸ். மகன் சுனந்த் ஆனந்த் மறைவு, செய்தி
- சமூக சமத்துவப் படை முகநூல் பக்கம்
- Sivakami, first Dalit woman to become a novelist
- Lit Fest Bangkok News
- பி.சிவகாமி ஓர் ஆய்வுக்கட்டுரை கிரண் கேசவமூர்த்தி
- Social realism in the selected novels of palanimuthu Sivakami
- Dalits getting a raw deal: Sivagami
- RAISING THE VOICE AGAINST THE ATROCITIES: A CRITICAL STUDY OF P SIVAKAMI’S TAMING OF WOMEN
- Does a girl in the house mean fire in the belly? Book Review of 'The Taming of Women'
- Double Marginalization of Dalit Women in Sivakami’s The Grip of Change and The Taming of Women
- Ceaseless Sadism against Women in P. Sivakami’s The Taming of Women
- SIVAKAMI’S THE GRIP OF CHANGE: REVISITED
- Book Review: The Taming of Women
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Apr-2023, 16:37:48 IST