பிள்ளையாட்டு
பிள்ளையாட்டு கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று.மேல் வரும் விளைவுக்கு அஞ்சாத பிள்ளைத் தன்மையை உடைய ஒரு கரந்தை மறவன் ஆடிய கூத்தைப் பற்றிக் கூறுவதால் பிள்ளையாட்டு எனப்பட்டது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெட்சி மறவராகிய பகைவரின் குடலை மாலையாகத் தனது வேலில் சூட்டி, அவ்வேலினைக் கீழ்மேலாகத் திருப்பி விருப்பமுடன் போர்க்களத்தே கரந்தை மறவன் ஆடியதை அறிவிப்பது பிள்ளையாட்டு என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கூடலர் குடர்மாலை சூட்டி
வேல் திரிந்து விரும்பி ஆடின்று
(கொளு 2.10)
வெண்பா
மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து
கூட்டிய எ.கம் குடர் மாலை - சூட்டிய பின்
மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல் திரிய விம்மும் துடி (30)
பொருள்: பகைவரை வீழ்த்தும் பிள்ளைத் தன்மையினை உடைய கரந்தை மறவன் வெட்சி மறவரது மார்பினைப் பிளந்து, மீளப் பறித்த தன் வேலினை அவரது குடல் மாலையினாலே சுற்றிக் கொண்ட பின்னர், பகைவீரர் அஞ்சி ஒடும்படியாகச் சீற்றங்கொண்டு ஆடுவானாகத் தன் கையினிற் கொண்ட வேல் திரும்புமாறு அதனைச் சுழற்றி நிற்க, அதனைக் கண்டதும் கரந்தையாரது துடிப்பறை முழக்கமும் மிக்கெழுந்தது. வேல் திரியத் துடி விம்மும் என்றது, மீண்டும் மீண்டும் அவன் பகைவரது குடலைப் பிடுங்கி மாலையாகச் சூட்டித் தன் வாளினைத் திருப்பித் திருப்பிக் குடலைக் கிழிப்பவனாக இருந்தனன்.
உசாத்துணை
கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:17:40 IST