under review

பின்தொடரும் நிழலின் குரல் (நாவல்)

From Tamil Wiki
பின்தொடரும் நிழலின் குரல் (நாவல்)

பின்தொடரும் நிழலின் குரல் (1999) ஜெயமோகன் எழுதிய அரசியல் நாவல். சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் தமிழகத்தின் தொழிற்சங்கச் சூழலில் இலட்சியவாதத்துக்கும் கருத்தியலுக்கும் இடையேயான முரண்பாட்டை விவாதிக்கும் நாவல். ஒரு கொள்கை அதன் அரசியல் செயல்திட்டத்தின் விளைவாக தோல்வியடையுமென்றால் அதன்பொருட்டு உயிர்கொடுத்தவர்களும் கொல்லப்பட்டவர்களும் எவ்வகையில் பொருள்படுகிறார்கள் என வினவுகிறது.

பதிப்பு

அச்சுப் பதிப்பு

தமிழினி பதிப்பகம் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை நவம்பர் 1999-ல் அச்சுப்பதிப்பாக வெளியிட்டது. தொடர்ந்து மறுபதிப்புகள் வெளிவந்தன. விஷ்ணுபுரம் பதிப்பகம் இந்த நாவலை 2022-ல் மீண்டும் பதிப்பித்தது.

இணையப் பதிப்பு

பின்தொடரும் நிழலின் குரல் நாவல் ஆகஸ்ட் 8, 2021-ல் இணையப் பதிப்பாக வெளிவந்தது.

பின்புலம்

பின்தொடரும் நிழலின் குரல் நாவல் சோவித் யூனியனின் சிதைவை களமாக கொண்டு அங்கே நடந்த போல்ஷெவிக் புரட்சியையும் அதையொட்டி உருவான அடக்குமுறைகளையும், 1935-ல் ஸ்டாலின் காலகட்டத்தில் நிகழ்ந்த மாஸ்கோ விசாரணைகளையும் ,போல்ஷெவிக் தலைவர் நிகலாய் புகாரின் கொல்லப்பட்டதையும் சித்தரிக்கிறது. இணையாகவே கன்யாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சங்கத்தில் நிகழும் அதிகார மாற்றங்களையும், அதில் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி உருவாக்கிய விளைவுகளையும், அத்தொழிற்சங்கத்தில் செயலாற்றும் அருணாச்சலம் என்பவரின் குடும்பச்சூழலையும் விவரிக்கிறது

அமைப்பு

இந்நாவல் 12 அத்யாயங்களையும் அவற்றுக்குள் 56 உட்பிரிவு அத்தியாயங்களையும் கொண்டு மொத்தம் 723 பக்கங்களை உடையது. இந்த நாவலின் கட்டமைப்பு உரையாடல்களின் தொகுப்பாகவும் கட்டுரைகள், கதைகள், கடிதங்கள், நாடகங்கள், குறிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளது. மீபுனைவு வடிவில் அமைந்த நாவல்.

கதைச்சுருக்கம்

அருணாச்சலம் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவர். கே.கே. மாதவன் நாயர் அந்தச் சங்கத்தின் தலைவர். கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பலவகை அரசியல் சமரசங்களுக்குச் செல்லும்போது பெரிய தியாகவரலாறு கொண்டவரும், தொழிற்சங்கத்தின் நிறுவனருமான கே.கே.மாதவன் நாயரின் இலட்சியவாத பிடிவாதம் அதற்கு தடையாக ஆகிறது. ஆகவே கட்சி அவரை நீக்கி அருணாச்சலத்தை தலைவராக ஆக்குகிறது. கே.கே.மாதவன்நாயரின் மாணவரான அருணாச்சலம் குற்றவுணர்ச்சி கொள்கிறான். அச்சூழலில் அருணாச்சலத்துக்கு வீரபத்ரபிள்ளை எழுதிய கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறிப்புகள், கவிதைகள் போன்றன கிடைக்கின்றன. வீரபத்ரபிள்ளை கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது மட்டுமின்றி அவர் கட்சி வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்டவர் என்பது அருணாச்சலத்துக்குத் தெரியவருகிறது.

ஏன் கட்சி அவரை நீக்கியது எனக் காரணம் தேடும் அருணாச்சலம் வீரபத்ரபிள்ளை முன்னர் சோவியத் ருஷ்யாவின் வரலாற்றில் இருந்து அதேபோல அழிக்கப்பட்ட நிகலாய் புகாரினின் வரலாற்றை எழுத முற்பட்டதனால்தான் என கண்டறிகிறான். அருணாச்சலம் வீரபத்ரபிள்ளையைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதிய அவரை மீண்டும் கட்சி வரலாற்றிற்குக் கொண்டுவர நினைக்கிறான். அதனால் அவரை நீக்கி அந்த இடத்தில் நாராயணனை கொண்டுவருகிறது. அருணாச்சலம் தன்னை வீரபத்ரபிள்ளையுடன் அடையாளம் கண்டுகொள்கிறான், வீரபத்ரபிள்ளை அதேபோல புகாரினாக தன்னை நினைத்துக்கொண்டவர் என்பதனால் அவர்கள் மூவரும் ஒன்றுக்கொன்று கலந்துவிடுகிறார்கள். அருணாச்சலம் மனநிலைப் பிறழ்வின் எல்லைவரைச் சென்று தன் மனைவியால் மீள்கிறான். தான் பாதுகாத்துவந்த வீரபத்ரபிள்ளையின் கையெழுத்துப் பிரதிகளையும் புத்தகங்களையும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் ஒப்படைத்து பின்தொடரும் நிழலின் குரல் என்ற தலைப்பில் நாவலாக எழுதுமாறு கூறுகிறார். புகாரின், வீரபத்ரபிள்ளை வரிசையில் அருணாச்சலமும் இணைந்துகொள்கிறார்.

இந்நாவலின் கட்டமைப்பில் அருணாச்சலம் வாசிக்கும் கதைகள் வழியாக ரஷ்யாவில் நடந்த புரட்சியும், அங்கு நடந்த ஒடுக்குமுறைகளும் பேசப்படுகின்றன. அருணாச்சலம் கதிர், எஸ்.எம்.ராமசாமி ஆகியோருடன் நடத்தும் உரையாடல்கள் வழியாக கருத்தியல் என்பது அதிகாரம் நோக்கிச் செல்லும்போது எப்படி இலட்சியவாதத்தை இழந்து அடக்குமுறைக்கருவியாக ஆகிவிடுகிறது என்றும், கருத்தியலுக்கும் அறத்துக்குமான உறவென்ன என்றும் பேசப்படுகிறது.

புகாரினின் நிழல் வீரபத்ரபிள்ளையும் வீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தையும் அருணாச்சலத்தின் நிழல் ஜெயமோகனையும் தொடர்கின்றன. மூன்றும் வெவ்வேறு காலகட்டங்கள். ஆனால், நிழலின் தொடர்ச்சி அறுபடவேயில்லை. அடிப்படையான அறக்கேள்விகள் தலைமுறை தலைமுறையாக சிலரால் முன்னெடுக்கப்படுகின்றன என்று இந்நாவல் பேசுகிறது. அருணாச்சலம் சோவியத் ருஷ்யாவில் கொல்லப்பட்டவர்களுக்கு அளிக்கும் நீர்க்கடனும், நாவலுக்குள் வரும் சிறுகதையொன்றுக்குள் ஏசு உயிர்த்தெழுந்து வந்து அறத்தின் முடிவின்மை பற்றி பேசுவதும் இந்நாவலின் மையம் வெளிப்படும் தருணங்கள்.

கதைமாந்தர்கள்

முதன்மைக் கதைமாந்தர்கள்
  • அருணாச்சலம் - ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர்.
  • வீரபத்ரபிள்ளை - சிந்தனையாளர், பாஸ்கரனின் தந்தை.
துணைக் கதைமாந்தர்கள்
  • நாகம்மை - அருணாச்சலத்தின் மனைவி
  • கௌரி - அருணாச்சலத்தின் மகள்
  • கெ.கெ. மாதவன் நாயர் - ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்.
  • நாராயணன் - அருணாச்சலத்துக்கு வலதுகரமாக இருந்தவர்
  • கோலப்பன் - சங்க உறுப்பினர்
  • பாஸ்கரன் - வீரபத்ரபிள்ளையின் மகன்
  • இசக்கியம்மை - வீரபத்ரபிள்ளையின் மனைவி
  • மாசிலாமணி - காலத்துக்கு ஏற்ப கட்சியின் நிலைப்பாட்டை மாற்றிய கட்சியின் முக்கியமான தலைவர்
  • தீர்த்தமலை - கட்சியின் மூத்த உறுப்பினர்
  • கதிர் - ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் புதிய தலைவர்.
  • ரவீந்திரன் - தேர்ந்த அறிவாளி
  • அய்யப்பன் பிள்ளை - சமையற்காரர், கெ.கெ. மாதவன் நாயரோடு இருந்தவர்.
  • ஆறுமுகப்பிள்ளை
  • எஸ்.எம். ராமசாமி - கட்சியின் மீது நம்பிக்கை இழந்தவர், மூத்த எழுத்தாளர்.
  • ஜெயமோகன் - எழுத்தாளர்
  • கே. என். ஜோணி - நக்சல் சார்பாளர், கட்டுரையாளர்.
  • ஆர். நீலகண்ட பிள்ளை
  • நம்பிராஜன்
  • எசிலி - கெ.கே. மாதவன் நாயரின் துணைவி
  • ஆஸ்டின் - கெ.கே. மாதவன் நாயரின் மகன்
  • ராமசுந்தரம்
  • கெ. ஆர். எஸ்.
  • சாமிக்கண்ணு - உதவியாளர்
  • பாலன் - உதவியாளர்
  • தோழர் கந்தசாமி (ரிஷி) - கட்சியின் முக்கியமான பொறுப்பில் இருப்பவர், மூத்தவர்
  • கரியமால் - மூன்றாந்தரக் கவிஞர்
  • செம்புலன் - மூன்றாந்தர எழுத்தாளர்
வரலாற்று மனிதர்கள்
  • நிகலாய் இவானோவிச் புகாரின்
  • அன்னா மிகாய்லோவ்னா லாறினா
  • ஜோசப் விசாரியோவிச் ஸ்டாலின்
  • லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய்
  • பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி
  • இயேசு கிறிஸ்து

இலக்கிய மதிப்பீடு

தமிழில் எழுதப்பட்ட முதன்மையான அரசியல்நாவல் என இந்நாவலை விமர்சகர் ராஜமார்த்தாண்டன் மதிப்பிடுகிறார். இந்நாவல் தமிழ்ச்சூழலில் உள்ள பல உண்மை மனிதர்களின் சாயல் கொண்ட கதைமாந்தர்களை புனைந்துள்ளது. ’நாவலுக்குள் சொந்த மற்றும் எளிதில் ஊகிக்க முடிகிற கற்பனையான பெயர்களுடன் வருகிற சில நிஜமனிதர்களின் பாத்திரங்கள் புனைவுக்கும் நிஜத்துக்குமான அருவமான உறவை காட்டுவதோடல்லாமல் நாவலின் நம்பகத்தன்மையை துல்லியமாக்கிக் காட்டவும் உதவுகின்றன’ என விமர்சகர் க.மோகனரங்கன் குறிப்பிடுகிறார். இந்நாவல் எழுதப்பட்டபின் இந்நாவலில் நிகழ்ந்தவையே இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி அரசியலிலும் நிகழ்ந்தன. கே.ஆர்.கௌரி தியாக வரலாறு கொண்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கட்சியைவிட்டு நீக்கப்பட்டு, அவதூறுசெய்யப்பட்டு மதத்தில் சரணடைந்தனர். டபிள்யூ.ஆர்.வரதராஜன் போல சிலர் தற்கொலை செய்துகொண்டனர். மருதையன் போன்றவர்கள் கட்சியால் துரோகி என முத்திரை குத்தப்பட்டனர். இந்நாவல் காட்டிய அறநெருக்கடி என்பது மறுக்கமுடியாத உண்மை என அந்நிகழ்வுகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. இந்நாவல் உருவாக்கும் வலுவான அறக்கேள்விகளாலும், எல்லா விவாதங்களுக்கும் இடமளிக்கும் இதன் சிக்கலான கட்டமைப்பாலும், இதன் கவித்துவத்தாலும் தமிழின் முதன்மையான நாவல் இது என சுரேஷ் பிரதீப் போன்ற அடுத்த தலைமுறை விமர்சகர்களால் கருதப்படுகிறது.

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:16 IST