பாமா கோபாலன்
பாமா கோபாலன் ( 1943-2022 ) (எஸ். கோபாலன்) எழுத்தாளர், இதழாளர். குமுதம் இதழில் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
பாமா கோபாலனின் இயற்பெயர் எஸ்.கோபாலன். சென்னையில் 1943-ல் பிறந்தார். தன் பாட்டியின் பெயரை இணைத்துக்கொண்டு பாமா கோபாலன் என்னும் பெயரில் எழுதினார்
சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பயின்றார்.
தனிவாழ்க்கை
கோபாலன் சென்னை ஏ.எம். ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் ஒரு வருடம் கணக்கீட்டுப்(Accounts) பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் இதழாளராகவும் பணியாற்றினார்.
எழுத்தாளர் வேதா கோபாலன் இவர் மனைவி. ஒரே மகன் அமெரிக்காவில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை.
பாமா கோபாலன் 1963-ம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் மூலம் 'பிரசண்ட விகடன்' இதழில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள், பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதினார்.
இதழியல்
பாமா கோபாலன் அமுதசுரபியிலும் குமுதம் இதழிலும் உதவியாசிரியராகப் பணிபுரிந்தார். குமுதம் இதழில் 13 ஆண்டுகள் பணியாற்றினார்.
மறைவு
பாமா கோபாலன் டிசம்பர் 2, 2022-ல் அமெரிக்காவில் மறைந்தார்.
இலக்கிய இடம்
பாமா கோபாலன் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். தமிழக வார இதழ்களில் கட்டுரைகளும் நேர்காணல்களும் எழுதிவந்தார்.
நூல்கள்
பொது
- பாமா கோபாலனின் சிந்தனை சிதறல்கள்
- குரல் இனிது
- குமுதம் ஆபீசில் பாமா கோபாலன்
- போன் ஆப் பண்ணிட்டுப்பேசு
ஆன்மிகம்
- பகவத்கீதை எளிய விளக்கம்
- அருள் வாக்கு
சிறுகதைகள்
- காற்றில் போட்ட கணக்கு
நாவல்கள்
- இதுதாண்டா கொலை
- காற்றில் போட்ட கோலம்
- காதல் நட்சத்திரம்
- மாதவன் இன்னும் வரலை
- இவள் இப்படித்தான்
- ஒரு மூத்தம் ஒரு டைரி ஒரு கல்யாணம்
- கொலைக்கு ஒரு பாஸ்போர்ட்
- மைனா உன்னை கொல்வேனா
- காதல் பூக்கள்
- அரண்மனைக்கிளியும் கோலிவுட் டைரக்டரும்
- குழந்தையை காப்பாற்றுங்க"நெருப்புக்குளியல்
- என்முறை வன்முறை
- கடலில் ஒருத்தி கட்டிலில் ஒருத்தி
உசாத்துணை
✅Finalised Page