under review

பாதிப்பு பிழை

From Tamil Wiki

பாதிப்பு பிழை (Affective Fallacy): வாசிகன் தன் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை கொண்டு ஒரு இலக்கிய படைப்பை அணுகும் பிழை. இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ’புதுவிமர்சன’ மரபு உருவான போது உருவான கலைச்சொல்.

பார்க்க: நோக்க பிழை

கலைச்சொல் தோற்றம்

பாதிப்பு பிழை: இக்கலைச் சொல் புதுவிமர்சன மரபை சேர்ந்தவர்கள் இம்ப்ரெஷனிச விமர்சன மரபை (Impressionistic critics) சேர்ந்த விமர்சகர்கள் கூறிய ‘வாசகனின் பார்வையே ஒரு கவிதையின் மதிப்பை தீர்மானிக்கும் இறுதி அளவுகோல்’ என்ற கருத்திற்கு எதிராக உருவாக்கிய பார்வை.

இக்கலைச்சொல்லை பொ.யு.1946-ம் ஆண்டு புதுவிமர்சன மரபைச் சேர்ந்தவர்களான டபிள்யூ.கே. விம்சாட் (W.K. Wimsatt), மோன்ரோ பியர்ட்ஸ்லே (Monroe Beardsley) ஆகியோர் முதன்முதலில் பயன்படுத்தினர்.

விளக்கம்

வாசகனின் பார்வையை கலைப்படைப்பின் அளவுகோலாக முன் வைக்கும் பார்வை அரிஸ்டாட்டிலின் கட்டளையான, “துயர நாடகங்களின் தேவையென்பது அவை வாசக மனத்தில் பயத்தையும், இரக்கத்தையும் உருவாக்க வேண்டும்” என்பதிலிருந்து தொடங்கியது. அக்கருத்தை பின் வந்த விமர்சகர்கள் பலர் ஏற்று முன்மொழிந்தனர். அவர்கள், ’வாசகனின் உணர்வு ரீதியான தொடர்பாற்றல் என்பது கவிதையின் வளர்ச்சி நிலையின் தவிர்க்க முடியாத ஒன்று’ எனக் கருதினர். எட்கர் அலன் போ (Edgar Allan Poe) ”ஒரு கவிதையின் உயரிய அங்கிகாரம் அதனை வாசிக்கும் போது வாசக மனதின் எழுச்சி மட்டுமே” என்றார். எமிலி டிக்கின்சன் (Emily Dickinson), "என் தலையின் மேற்புறத்தை என்னால் முற்றிலுமாக உணர முடிந்தால் தான் அது கவிதை" என்றார்.

புது விமர்சன மரபை சேர்ந்தவர்கள் இதனை பிழையென கருதினர். இந்த விமர்சன பார்வைக்கு எதிராக பாதிப்பு பிழை (Affective Fallacy) என்னும் கலைச்சொல்லை உருவாக்கினர். விம்சாட், பியர்ட்ஸ்லே இருவரும் ஒரு படைப்பென்பது தன்னளவில் தனித்துவமானது. அது படைப்பாளி, வாசகன் இருவரையும் சாராதது. அப்படைப்பின் பொருளும், தரமும் அதற்குள்ளார்ந்தே நோக்க வேண்டுமே ஒழிய வாசகனால் எற்றிவைக்கப்படுவதாக இருக்கக் கூடாது என்றனர். ஒரு படைப்பில் என்ன உள்ளது என்பதே விமர்சனத்தின் பார்வையே ஒழிய அவை வாசகனில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தியது என்பது பிழை என வகுத்தனர்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page