under review

பரங்குன்று (எண்பெருங்குன்றம்)

From Tamil Wiki
பரங்குன்று கோவில்

திருப்பரங்குன்றம் என்று பரவலாக அறியப்படும் பரங்குன்றம் மலை மதுரையைச் சுற்றி அமைந்த எண்பெருங்குன்றம் என்னும் எட்டு சமண மலைப்பள்ளிகளுள் ஒன்று. இம்மலை மதுரைக்கு தென்மேற்கே திருநெல்வேலி செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சமணம் இருந்துள்ளது.

திருப்பரங்குன்று

திருப்பரங்குன்றம் மலையின் வடபுறம் மேற்கு எல்லையில் சற்று உயரமான இடத்திலுள்ள இயற்கையான குகைத்தளம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் சமணப்பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இப்பள்ளியை உருவாக்கிக் கொடுத்த 'அந்துவன்' என்பவன் பெயர் அங்குள்ள கற்படுக்கையில் தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு சான்றுகள்

மேலே சொன்ன கல்வெட்டு அமைந்த படுகைக்கு கீழ்ப்புறமுள்ள படுக்கையை பொ.யு. முதல் நூற்றாண்டில் எருக்காட்டூரைச் சார்ந்த ஈழக்குடும்பிகன் போலாலயன் என்பவன் சமணமுனிவர்களுக்குத் தானமாக அளித்துள்ளான். இதனை அக்கல்படுகையின் பக்கவாட்டிலுள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டு அமைந்த குகைத்தளத்திற்கு கீழ்ப்புறம் இயற்கையான சுனை அமைந்து இன்னொரு குகைத்தளம் உள்ளது. இங்கும் சமண முனிவர்கள் தங்குவதற்கு ஏற்றாற்போல் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சங்க காலத்தினைத் தொடர்ந்து இம்மலையில் மூன்று இடங்களில் மலைப்பள்ளிகளை சமணர் அமைத்துள்ளனர். பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மலையடிவார முருகன் கோவிலுக்குப் பின்னால் உள்ள சுனையை ஒட்டியும், மலை உச்சியில் தென்மேற்குக் கோடியில் சுனைகள் நிறைந்த காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியிலும், பரங்குன்றத்தின் தென்புற அடிவாரத்தில் உமையாண்டார் கோயிலுள்ள பகுதியிலுமாக மூன்று இடங்களில் பொ.யு. எட்டாம் நூற்றாண்டில் இருந்து பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சிற்பம்

முக்குடையின் கீழ் அமர்ந்த தீர்த்தங்கரர் உருவங்களும் இயக்கி, பத்மாவதி, இயக்கன் தர்ணேந்திரனுடன் காணப்படும் பார்சுவநாதர் உருவமும் மலையின் வடப்பக்க அடிவாரத்தில் முருகன் கோவில் சுனைக்கு அருகிலுள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக உள்ளன. இச்சிற்பங்களுக்கு கீழே அச்சிற்பங்களைச் செய்வித்தோர்களின் பெயரும் வட்டெழுத்துக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. பலதேவர் என்பவரும் குறண்டிப்பள்ளியைச் சார்ந்த மாணவரும் ஒருவரும் இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மலையின் உச்சியில் காசிவிஸ்வநாதர் கோவில் பக்கத்திலுள்ள சுனையின் அருகில் உள்ள பாறையில் உயரமான இடத்தில் பொ.யு. ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த பார்சுவநாதர், பாகுபலி ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன. இதில் பார்சுவநாதரின் எதிரி கமடன் அவர் மீது பாறையை தூக்கி வீசுவது போலவும் பின்னர் பார்சுவநாதரின் தவத்தை போற்றி வழிபடுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாகுபலியின் உருவம் அவரது இரு சகோதரிகளுடன் காணப்படுகிறது. இந்த பகுதியில் அமைந்த பள்ளியே முற்காலப்பாண்டியரின் பள்ளியாக இருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர் வெ. வேதாசலம் குறிப்பிடுகிறார்.

பரங்குன்றத்தின் தெற்கே உமையாண்டார் கோவில் என்றழைக்கப்படும் சிவன்கோவில் முன்பு அசோகமரத்தின் கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரருக்காக எடுக்கப்பட்ட குடைவரைக் கோவில். இக்கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்த அகமண்டபமும் அதற்கு முன்பாக முகமண்டபமும் உள்ளன. இக்கோவில் எட்டாம் நூற்றாண்டு வாக்கில் முற்காலப்பாண்டியரால் தோற்றுவிக்கப்பட்டது. பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் மதுரையில் சமணம் செல்வாக்கு இழந்த போது பிரசன்ன தேவர் என்னும் சைவத் துறவி இதனை சிவன்கோவிலாக மாற்றியுள்ளார். இக்கோவில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பெயரால், "சுந்தரபாண்டியன் ஈஸ்வரமுடையார் கோவில்" உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவிக்கும் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு குடைவரை முகமண்டபத்தின் கீழ்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் தீர்த்தங்கரர் சிற்பம் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் மேலே பாறையில் தீர்த்தங்கரர்க்குரிய அசோகவிருட்சத்தின் சுருள் கிளைகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன.

உசாத்துணை

  • எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்


✅Finalised Page