நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
- ராஜமாணிக்கம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜமாணிக்கம் (பெயர் பட்டியல்)
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை (1906 - 1974) தமிழக நாடக முன்னோடிகளில் ஒருவர். நாடக நடிகர், நாடக ஆசிரியர். 'ஸ்ரீ தேவி பால வினோத சபா’ என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து நாடக அரங்காற்றுகை செய்தார். நடிகர்கள் பலரை உருவாக்கினார். இவருடைய ’பக்த ராமதாஸ்’ நாடகம் திரைப்படமாக்கப்பட்டது. திரைப்படங்களில் நடித்தார்.
பிறப்பு, கல்வி
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தஞ்சாவூரில் சுப்ரமண்ய பிள்ளை, குப்பம்மாள் இணையருக்கு மகனாக 1906-ல் பிறந்தார். திண்ணைப்பள்ளிக்கூடத்தில் பயின்றார். தந்தை கான்ஸ்டபிள். சகோதரர் கோவிந்தராஜ்பிள்ளை.
தனிவாழ்க்கை
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1936-ல் தஞ்சையைச் சேர்ந்த அங்கையற்கண்ணியை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த மகனுக்கு 'தேவிபாதம்' என்று பெயரிட்டார். பிற்காலத்தில் தேவிபாதம் நாடகக்கலைஞர் சங்கம் உருவாக்கியதோடு நாடகக்கலையிலும் புகழ்பெற்றார்.
நாடக வாழ்க்கை
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகப் பயிற்சிக்காக ஹார்மோனியம் கே.டி. நடராஜப்பிள்ளை கம்பெனியில் சேர்ந்தார். 1914-ல் பால மீனா ரஞ்சனி சங்கீத சபாவிலும், சங்கரதாஸ் சுவாமிகள் கீழ் இயங்கிய நாடகக் குழுவிலும் பணியாற்றினார். பின்னர் ஜகந்நாத ஐயர் நாடகக் குழுவில் சேர்ந்தார். இதில் ஐந்து வயதுக்கும் மேற்பட்ட பதினைந்து வயதிற்கும் உட்பட்ட சிறுவர்கள் அதிகம் நடித்ததால் "பாய்ஸ் கம்பெனி" என்று அறியப்பட்டது. இங்கு நாடக நுணுக்கங்கள் கற்றார். எம்.ஆர். ராதா, சாரங்கபாணி, எஸ்.வி. வெங்கட்ராமன் ஆகியோர் அவருடன் இணைந்து நடித்தவர்கள்.
ஸ்ரீ தேவிபாலவிநோத சபா
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை ஜகந்நாத ஐயர் நாடகக் குழுவிலிருந்து வெளியேறி பங்குதாரர்களைச் சேர்த்து ’ஸ்ரீ தேவிபாலவிநோத சபா’ என்ற பெயரில் நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். முதல் நாடகத்தை தஞ்சையில் அரங்கேற்றினார். தொடர்ந்து திருச்சி, தஞ்சை, திருப்பூரில் நாடகங்கள் அரங்கேற்றினார். அறுபதுக்கும் பேற்பட்ட நாடக உறுப்பினர்கள் இருந்தனர். ராம பக்தரான சமர்த்ததாஸ் கதையில் அவரை சிறையிலிட்டு வாட்டும் நவாபாக நடித்து புகழ்பெற்றதால் 'நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை’ என்று அழைத்தனர். இவர் அரங்காற்றுகை செய்த ’இன்பசாகரன் நாடகம்’ 178 நாட்கள் தொடர்ந்து மேடையேற்றப்பட்டதாக முக்தா சீனிவாசன் தனது 'இணையற்ற சாதனையாளர்கள்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ராமாயணம் நாடகம் நடந்த இடத்திற்கு ’ராமாயணம் ஸ்டாப்’ என்று பெயரிடப்படுமளவு புகழ்பெற்றார். கிருஷ்ணலீலா நாடகம் 1418 நாட்கள் மேடையேறியது.
சிறப்புகள்
- வசனங்கள் மட்டுமல்லாமல் காட்சிக்கும், கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். புராண நாடகங்களை அரங்கேற்றுவதில் ஆர்வம் காட்டினார்.
- புராண நாடகங்களில் ’தந்திரக் காட்சிகள்’ வடிவமைத்ததால் மக்கள் அதிகம் கவரப்பட்டனர்.
- பக்தி நாடகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். சுவாமி ஐயப்பன் வரலாற்றை முதன் முதலாக நாடகமாகப் அரங்கேற்றியவர். இந்த நாடக அரங்காற்றுகை செய்யும்போது ஐயப்பன் ஊர்வலத்தையும், பஜனையையும் நிகழ்த்தினார்.
- பெண் நடிகர்கள் இல்லாத கம்பெனி. நேரக்கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
- நடிகர்களுக்கு இசை, நடனம், வாள் சண்டை போன்ற பயிற்சிகளை கொடுத்தார்.
- தன் நாடகத்தில் தேசப்பற்று வசனங்கள், பாடல்கள் இடம்பெறச் செய்தார். 1934-ல் நந்தனார் நாடகத்தை காந்தி முன்பு அரங்காற்றுகை செய்து அதில் வந்த தொகையை விடுதலைப் போராட்டத்திற்கு அளித்தார். இதன்பின் தன் கம்பெனி நாடக உடைகளில் சக்கரம் பொறித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
- கதராடை அணிவதையும், சபரிமலைக்கு மாலையிடுவதையும் கட்டாயக் கடமையாக்கினார்.
தந்திரக் காட்சிகள்
- 'குமார விஜயம்’ நாடகத்தில் முருகன் பிறப்பைக் காட்டுகையில், ஆறு சுடர்கள் ஆறு குழந்தைகளாக மாறுவதைக் காட்டினார்.
- 'கிருஷ்ணலீலா’ நாடகத்தில் குழந்தை கண்ணனைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு வசுதேவர் கொட்டும் மழையில் செல்வதும், ஐந்து தலை நாகம் வந்து குடை பிடிப்பதும் காட்டப்பட்டது. யமுனை நதி பிளந்து வழிவிடுவதும், நதி நீர் அலம்புவதும், மீன்கள் துள்ளி விளையாடுவதும் காட்டப்பட்டது.
- 'தசாவதாரம்’ நாடகத்தில் சிறைக்காவலர்கள் மயங்கி இருக்க, இரும்புச் சாவி தானே நகர்ந்து பூட்டைத் திறப்பதும், கதவு தானாகத் திறந்து கொள்வதும் காட்டப்பட்டது. 'ஏசுநாதர்’ நாடகத்தில் கல்லறையிலிருந்து ஏசு உயிர்த்தெழும் காட்சி காட்டப்பட்டது. இவரது தந்திரக் காட்சி முறைகளை, ஆர். எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி முதலானோர் பின்பற்றினார்கள்.
மாணவர்கள்
- எம்.என். நம்பியார்
- டி.கே.எஸ். நடராஜன்
- கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
- கே.டி. சீனிவாசன்
- டி.கே. பாலச்சந்திரன்
- சிதம்பரம் ஜெயராமன்
கம்பெனி முடிவு
திரைப்படங்களின் செல்வாக்கால் நாடகங்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. நடிகர்களும் திரைப்படங்கள் நோக்கி செல்ல ஆரம்பித்தனர். ஒருமுறை ஏற்பட்ட கடும் புயல், மழையால் கம்பெனி நஷ்டமடைந்தது. மகன் தேவி பாதம் முயன்றும் நிலைமையை சரிசெய்ய இயலவில்லை. வறுமை நிலை ஏற்பட்டது.
திரைப்பட வாழ்க்கை
1935-ல் ’பக்த ராமதாஸ்’ திரைப்படம் ஜூப்பிட்டர் சோமுவின் தயாரிப்பில் முருகதாஸின் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி வெற்றிபெற்றது. இதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தனர். இவர் அரங்காற்றுகை செய்த ’இன்பசாகரன் நாடகம்’ அதே பெயரில் திரைப்படமாக வெளியானது. ஹிந்தியில் இப்படம் ’பிரேம் சாகர்’ என்ற பெயரில் வெளியானது.
மறைவு
தன் இறுதி காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1974-ல் காலமானார்.
நடித்த நாடகங்கள்
- பவளக்கொடி
- வள்ளி திருமணம்
அரங்கேற்றிய நாடகங்கள்
- கிருஷ்ணலீலா
- தசாவதாரம்
- சம்பூர்ண ராமாயணம்
- ஏசுநாதர்
- குமார விஜயம்
- சக்திலீலா
- ஞானசெளந்தரி
- சமர்த்ததாஸ்
- நந்தனார் நாடகம்m
- இன்பசாகரன்
- ஐயப்பன் நாடகம்
உசாத்துணை
- நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை: தென்றல்
- நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி: சு. முருகானந்தம்
- நவாபிலிருந்து நவீனம் வரை: தினமணி
- தமிழகம் மறந்த நாடகத்தந்தை: நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை:openhorizon
- The Mahatma and the Nawab’s Tamil plays: The Hindu: நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
- http://www.tamilartiste.com/
- நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகங்களும் -அவரது அபூர்வமான திருவனந்தபுரம் முகாம் விளம்பரமும்: vimarisanam
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Sep-2023, 19:51:08 IST