under review

திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

From Tamil Wiki

திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்(பொ.யு. 12-ம் நூற்றாண்டு) சைவ சித்தாந்த நூல்களில் முதல் நூலான திருவுந்தியாரை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் 1147- ஆம் ஆண்டு திருவுந்தியாரை இயற்றினார் என்பதைத் தவிர அவரைப் பற்றிய பிற விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. உத்தர பூமி (வட இந்தியா) யிலிருந்து தென்னகம் வந்து திருவுந்தியாரை இயற்றியதாகக் கூறப்படும் செய்திக்கு சான்றுகள் இல்லை. இவரது சீடர் ஆளுடையதேவ நாயனார். ஆளுடைதேவர் நாயனராருக்கு உபதேசம் செய்யும் பொருட்டு திருவுந்தியாரை இயற்றினார் என்று மு.அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு- 12-ம் நூற்றாண்டு நூலில் குறிப்பிடுகிறார். திருவுந்தியாரின் 43-ஆவது பாடலில் நூலின் ஆசிரியர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

'வையமுழுதும் மலக்கயம் கண்டிடும்
உய்யவந்தானுறை உந்தீபற' (திருவுந்தியார் 45)

இறைவனே குருவாய் வந்து உபதேசம் செய்ததாக வாழ்த்துப் பாடல் குறிப்பிடுகிறது

செந்தையினுள்ளும் என சென்னியுள்ளும் சேர
வந்தவர் வாழ்க என்று உந்தீபற
மடவாளுடனே என்று உந்தீபற (திருவுந்தியார் 44)

ஆன்மிக வாழ்க்கை

திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய சைவ சித்தாந்த நூல் திருவுந்தியார். இந்நூல் இறை அனுபவத்தைக் கூறும் 45 செய்யுட்களையுடையது. இப்பாடல்கள், சமய சாத்திரங்கள் போலவே, கடவுள்-உயிர்-உலகம் என்னும் மூன்று பொருள்களின் இலக்கணத்தையும், பயன்களையும், பயன் அடையும் நெறிகளையும் விளக்குபவை.

பாடல் நடை

பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப்
பற்றை யறுப்பரென் றுந்தீபற
பாவிக்க வாராரென் றுந்தீபற.
பாவிக்கில்
கிடந்த கிளவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனேநின் றுந்தீபற
உன்னையேகண்டதென் றுந்தீபற.

உசாத்துணை

  • தமிழ் இலக்கிய வரலாறு-12-ம் நூற்றாண்டு (இரண்டாம் பகுதி)-மு.அருணாசலம்


✅Finalised Page