under review

திருமாலை

From Tamil Wiki

'திருமாலை', நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஏழாவதாக இடம் பெறும் பிரபந்தம். தொண்டரடிப் பொடியாழ்வாரால் இயற்றப்பட்டது. திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைப் போற்றிப் பாடப்பட்ட இந்நூல், 45 பாசுரங்களைக் கொண்டது. “’திருமாலை யறியாதவன் பெருமாளை யறியாதவன்” என்று கூறப்படுவதிலிருந்து இந்த நூலின் சிறப்பு உணர்த்தப்படுகிறது. இந்நூலுக்கு பெரியவாச்சான் பிள்ளை உரை எழுதியுள்ளார்.

மாலை இலக்கணக் குறிப்பு

மாலை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. ஒரே வகை மலர்களால் அல்லது பலவகை மலர்களால் தொடுக்கப்படுவது மாலை. அதுபோல பல வகைப் பாக்களால் தொகுக்கப்படும் பிரபந்தங்கள் மாலை என அழைக்கப்படுகின்றன. 'திருமாலை' என்பதில் உள்ள 'திரு' என்னும் சொல், சிறப்புப் பொருளைக் காட்டி மாலைக்கு அடைமொழியானது. அந்தச் சிறப்புப் பொருளாக விளங்குபவர் திருமாலான திருவரங்கப் பெருமாள்.

ஆசிரியர் குறிப்பு

திருமாலையை இயற்றியவர், தொண்டரடிப்பொடியாழ்வார். இவர் சோழ நாட்டில் உள்ள திருமண்டங்குடியில் பிறந்தவர். இயற்பெயர் விப்ர நாராயணன். விப்ர நாராயணன் அரங்கநாதரைச் சேவித்து, அவரது அழகில் விருப்புற்று அங்கு தங்கி, ஒரு நந்தவனத்தை அமைத்து, அரங்கனுக்கு மாலை கட்டித் தரும் திருப்பணியை மேற்கொண்டார்.

நாளடைவில் தேவதேவி என்னும் தாசியின் மீது விருப்பம் கொண்டு அவளுடன் சில காலம் வசித்தார். திருமகளின் கருணையால், அரங்கனின் அருளால் அந்த மையலிலிருந்து நீங்கினார். விப்ர நாராயணர், தான் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக, தூய பாகவதர்களுடைய திருவடித் துகள்களைத் தம் தலையிலிட்டுக் கொண்டும், அவர்கள் பாத தீர்த்தத்தை உட்கொண்டும் அப்பாவத்திலிருந்து மீண்டார் என்பது தொன்மக் கதை.

விப்ர நாராயணர் வைணவ அடியார்களுடைய திருவடித் தூளியாய், அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார். அதனால் ‘தொண்டரடிப்பொடி’ என்ற பெயரைப் பெற்றார். அரங்கன் மீது திருப்பள்ளியெழுச்சி, திருமாலை போன்ற நூல்களைப் பாடி, இறுதிவரை திருவரங்கத்திலேயே வாழ்ந்து நிறைவெய்தினார்.

நூல் அமைப்பு

திருமாலை, 45 பாசுரங்களைக் கொண்டுள்ளது. பாடல்கள் அனைத்தும் அறுசீர் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்துள்ளன. அரங்கனது திருநாமப்பெருமையை 1, 2, 4, 12 பாசுரங்கங்களிலும், அவனது திவ்விய தேசமான திருவரங்கச் சிறப்பை 10, 13, 14, 17, 23, 32 பாடல்களிலும், அவனது திருமேனியழகை 18, 20 பாசுரங்கங்களிலும், யோக நித்திரைச் சிறப்பை 19, 21, 23, 24-ம் பாசுரங்களிலும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் விளக்கியுள்ளார்.

ஆழ்வார், திருமாலை நூலின் இடையிடையே, மானுடனான தனது குறைகளை 15-17, 21, 25–35 பாசுரங்களில் கூறியுள்ளார்.

பாடல்கள்

அரங்கனின் பேரைச் சொல்வதே பேரின்பம்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா!அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!

இறைவனின் மீதான பக்திச் சிறப்பு

புலையறம் ஆகிநின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோதாம்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

இறைவன் தன்னைக் காக்க வேண்டுதல்

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னே கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே!

த்வய மஹா மந்திரத்தின் அர்த்தம்

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி
காம்புறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே

அரங்கனின் அடியவர்களது பெருமை

பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே

சிறப்புகள்

திருமாலை சொற்சுவையும் பொருட் சுவையும் வாய்ந்தது. தன்னை எளியவனாக்கி, பரம்பொருளை வலியவனாக்கி, ஆழ்ந்த பக்தி உணர்வில், தொண்டரடிப்பொடி ஆழ்வாரால் பாடப்பட்டது. “சுருக்கமும் பெருக்கமும் இன்றிச் சொல்லின் தெளிவாலே பரம்பொருளை நன்கு விளக்கிக் காட்டக் கூடிய நூல்” என்பது இந்நூலின் உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளையின் கருத்து.

உசாத்துணை


✅Finalised Page