under review

திரங்கானு கல் வெட்டு

From Tamil Wiki
திரங்கானு கல்வெட்டு

திரங்கானு கல் வெட்டு (Terengganu Inscription Stone) என்பது தீபகற்ப மலேசியாவின் திரங்கானு மாநிலத்தில் கண்டெடுக்கபட்டது. 700 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்வெட்டு மலேசியாவில் ஆகப்பழமையான ஜாவி எழுத்துகளைக் கொண்டது. இந்தக் கல்வெட்டு 1887-ல் வெள்ளம் வடிந்திருந்த திரங்கானுவில் கம்போங் பூலோ, குவாலா பெராங் தெரேசாட் ஆற்றின் கரையில் பாதி புதைக்கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பின்னணி

வாய் வழிக் கதைகளில், திரங்கானு கல்வெட்டு ஒரு பள்ளிவாசலின் முகப்பில் மண்ணில் புதைந்திருந்ததாகவும் பள்ளிவாசலின் இமாம் திரங்கானு கல்வெட்டைத் தெரேசாட் ஆற்றின் அருகாமையில் இடமாற்றம் செய்தார் எனவும் நம்பப்படுகிறது.

1887-ல் வந்த வெள்ளத்தில் திரங்கானு கல்வெட்டு தெரேசாட் ஆற்றின் முகப்பில் பாதி புதைக்கொண்டிருந்தது. பங்கிரான் அனும் எங்கூ அப்துல் காதிஎ பின் எங்கூ பெசார் (Pengiran Anum Engku Abdul Kadir bin Engku Besar) என்பவரும் ஈயத்தேடுதலில் இருந்த சையத் ஹுசேன் குலாம் அல் புகாரியும் (Saiyed Husin Ghulam Al Bukhari) திரங்கானு கல்வெட்டைக் கண்டுக்கொண்டனர். இருவரும், திரங்கானு கல்வெட்டை மூன்றாம் சுல்தான் சைனால் அபிடினுக்குப் பரிசளித்தனர். பிறகு திரங்கானு கல்வெட்டு புக்கிட் புத்தரி மலைக்கு இடமாற்றம் கண்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1922-ல் திரங்கானுவின் அரசியல் ஆலோசகராக இருந்த மேஜர் ஹச்.எஸ். பாட்டர்சன் (Major H.S Patterson) திரங்கானு கல்வெட்டை ஆராய்ந்தார். பெட்டர்சன் ஜப்பானிய புகைப்படக் கலைஞரான என்.சுசுகியிடம் (N. Suzuki) திரங்கானு கல்வெட்டைப் படம் பிடிக்க வேண்டினார். பெட்டர்சன் திரங்கானு மாநிலத்தின் அனுமதியுடன் திரங்கானு கல்வெட்டை ரஃப்ல்ஸ் கண்காட்சிக்கு ஆராய்ச்சி செய்ய கொண்டு சென்றார். 1960 வரை திரங்கானு கல்வெட்டு சிங்கப்பூரில் இருந்தது. திரங்கானு கல்வெட்டு பிறகு மலேசிய அருங்காட்சியகத்திலும், இறுதியாக 1991-ல் திரங்கானு மாநிலக் கண்காட்சியிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது.

முக்கியத்துவம்

திரங்கானு கல்வெட்டு தென்கிழக்காசியாவில் ஜாவி எழுத்துக்கள் இருந்ததின் சான்றாகும். திரங்கானு கல்வெட்டு 1300-ல் குவாலா பெராங்கில் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் மதம் இருந்ததின் முக்கிய சான்று. திரங்கானு கல்வெட்டு மலாய், சமஸ்கிருதம், அராபிய மொழிகளின் தாக்கத்துடன் ஜாவி எழுத்துகளில் எழுதப்பட்டவை. திரங்கானு கல்வெட்டில் நான்கு முகப்பரப்பிலும் ஜாவி எழுத்துகளில் இஸ்லாமிய ஜரியா(Zaria) சட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

காலம்(தேதி) பற்றிய சர்ச்சை

திரங்கானு கல்வெட்டின் சரியான காலம் சர்ச்சைக்குரியது. பொதுவாக, திரங்கானு கல்வெட்டு ரெஜாப் 4, 702 ஹிஜ்ராவில் (4 Rejab 702 Hijrah) (பிப்ரவரி 22, 1302) செதுக்கப்பட்டது என்று கொள்வர். இருப்பினும், திரங்கானு கல்வெட்டின் இடது கீழ் பகுதியில் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ள பதினொன்றாம் வரியின் விளிம்பு சேதமடைந்திருப்பதால் கல்வெட்டை செதுக்கிய ஆண்டு 702-789 ஹிஜ்ரா ஆண்டு காலகட்டத்தில் (1302-1387) இருக்கலாமென ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கல்வெட்டை முதலில் ஆராய்சி செய்த சி.ஓ. பெலேகன் (C.O. Blagen) எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் திரங்கானு கல்வெட்டு ரெஜாப் மாதம் 702 ஹிஜ்ரா ஆண்டு (1303) அதாவது பிப்ரவரியிலிருந்து–மார்ச் 1303 -ல் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறார்.

பெலேகனின் அனுமானத்தை சைட் முகமது நகீப் அல்-அட்டாஸ் (Syed Muhammad Naquib Al-Attas) மறுக்கிறார். நகீப்பின் கருத்துப்படி ஹிஜ்ரா ஆண்டு 702 ஆகஸ்ட் 26, 1303-ல் தொடங்குகிறது. அதாவது இஸ்லாம் நாள்காட்டியின் தொடக்கமான முதல் முஹாராம் ஆகஸ்ட் 26, 1303-ல் திங்கள் கிழமை தொடங்குகிறது. ரெஜாப் இஸ்லாம் நாள்காட்டியின் ஏழாம் நாள். 702 ஹிஜ்ரா ஆண்டு 1302-ல் தொடங்குகிறது. கிரேக்க நாள்காட்டி செவ்வாயில் தொடங்குகிறது. நான்காம் ரெஜாப் என்றால் இஸ்லாம் நாள்காட்டியின் வரிசையில் 181-ம் நாள். எனவே, நகீப் திரங்கானு கல்வெட்டு பொறிக்கப்பட்ட தினம் கிரேக்க நாள்காட்டியின் படி ஆகஸ்ட் 26, 1303-லிருந்து 181-ம் நாள் வெள்ளிக்கிழமை, ரெஜாப் மாதம் 4--அம் நாள், 702 ஹிஜ்ரா ஆண்டெனவே நிறுவுகிறார். நகீப் தனது அனுமானத்திற்காக கொடுத்த காரணங்களை மலேசியாவின் தேசிய கண்காட்சி காட்சிக்கு வைத்துள்ளது.

ஜாவி எழுத்துரு

திரங்கானு கல்வெட்டில் இருக்கும் ஜாவி எழுத்து நவீன ஜாவி எழுத்துருவிற்கு நெருங்கிய வடிவில் இருக்கிறது.

உள்ளடக்கம்

Batu bersurat hadapan.jpg
முன் முகப்பு

இறைவனின் தீர்க்கதரிசியையும் அவருடைய இறைதூதர்களையும் பாருங்கள்

இஸ்லாத்தை எங்களுக்கு வழங்கியதற்காக எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுங்கள்.

இஸ்லாத்தால் அனைத்து உயிரினங்களுக்கும் உண்மை வெளிப்படுத்தப்பட்டது

இந்நிலத்தில் நபிகளாரின் மார்க்கம் மேலோங்கும்.

புனித நபி, ராஜ்யத்தில் உண்மையை நிலைநிறுத்துபவர்.

அரசர்களே, இந்தச் செய்திகளைக் கேளுங்கள்

எல்லாம் வல்லவரிடமிருந்து செய்திகள். சந்தேகமில்லை.

சக மனிதர்களுடன் அன்புடன் இருக்கவென்று எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறார்

திரங்கானுவே இஸ்லாம் செய்திகளை பெற்ற முதல் நிலமெனத் தெரிந்திருக்கட்டும்

இஸ்லாம் மத ரஜப் மாதம் வெள்ளிக்கிழமை நண்பகலில் சூரியன் வடக்கில் இருக்கும் போது,

புனித நபியின் மறைவுக்குப் பிறகு எழுநூற்று இரண்டு ஆண்டுகள்.

Batu bersurat belakang.jpg
பின்புற முகப்பு

தொலைதூர நாட்டின் சகோதரர்களே,

கடனாளிகளுக்கான நான்காவது தர்மத்தை உங்களிடம் சொல்ல இங்கு வந்தேன்.

உங்களின் கரங்களால் தங்கத்தை எடுக்காதீர்கள்; இழக்காதீர்கள்.

ஐந்தாம் தர்மம்: தர்மம் செய்யுங்கள் ஆடைகளைச் செலுத்துங்கள்

அடுத்தவரின் தங்கங்களை அபரிக்காதீர்,

தங்கங்களை எடுத்திருந்தால், அதை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.

விபச்சாரம் செய்பவர்களுக்கு அழிவு.

அவர்கள் மனந்திரும்ப பின்வருவனவற்றைச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் கட்டளையிடுகிறார்.

மனைவியுடையவனுக்கு நூறு சவுக்கடி;

மணம் புரிந்தவளானால் மண்ணில் புதைக்க இடுப்பளவு வரை. மரணிக்கும் வரை கல்லடி.

இறைத்தூதரின் மகளாக இருப்பினும், புறக்கணிக்காதே.

Batu bersurat kanan.jpg
வலது முகப்பு

மணமாகாத ஆணாக இருந்தால் பத்தரை ‘சாகா’ அபராதம்;

மணமாகாத உயர்குடி ஆணாக இருந்தால் ஏழு ‘தாஹில்’ அபராதம்;

மணமாகாத பெரியவரானால் இரண்டரை ‘சாகா’ அபராதம்;

சுதந்திர மனிதனாவான். ஏழாம் தர்மம்; பெண்ணின் வரதட்சணை

அவள் கூடா ஒழுக்கம் புரிந்தால், அவளுக்குக் கணவனை மறுக்கவும்.

Batu bersurat kiri.jpg
இடது முகப்பு

தவறான ஆதாராமானால், ஒரு ‘தஹில்’, ஒரு ‘பஹா’ அபராதம். ஒன்பதாம் தர்மம்.

எல்லாம் வல்லவர் கட்டளையிடுகிறார். தனித்து துயரடைபவன் அபராதம் செலுத்தமாட்டான்.

என் குழந்தைகளே, என் தந்தைகுலமே, என் பேரக்குழந்தைகளே மற்றும் குடும்பமே மற்றும் அவர்களது உடன்பிறப்புகளே;

இந்தக் கட்டளைகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். கடவுளின் கடுங்கோபம் பெரியது.

கட்டளைக்கு செவிசாய்க்காதவர்களுக்கு ஆபத்துகளும் வேதனைகளும் காத்திருக்கின்றன.

அங்கீகாரம்

  • Memory of the World International Register (UNESCO), ஜூலை 31, 2009
  • (தேசிய பாரம்பரியம்) Warisan Kebangasaan, ஜூலை 15, 2010

உசாத்துணை


✅Finalised Page