தளவானூர் சத்ருமல்லேஸ்வரம் குடைவரை
தளவானூர் சத்ருமல்லேஸ்வரம் குடைவரை (பொ.யு. 7-ம் நூற்றாண்டு) செஞ்சி அருகே அமைந்துள்ள பல்லவர் காலத்து குடைவரை. இது மகேந்திரவர்மன் காலத்தையது, பொ.யு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருதப்படுகிறது.
இடம்
செஞ்சியிலிருந்து விழுப்புரம் செல்லும் பெருஞ்சாலையில் ஏறத்தாழ பதினைந்து கிலோ மீட்டர் சென்று, அங்கிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கிளைச்சாலை வழியாக ஆறு கிலோ மீட்டர் சென்றால் தளவானூர் என்னும் சிற்றூரை அடையலாம். இவ்வூரை அடுத்துள்ள சிறிய மலை தளவானூர் மலை எனவும், பஞ்ச பாண்டவ மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்தமலையில் தளவானூர் சத்ருமல்லேஸ்வரம் குடைவரை உள்ளது. குடைவரைக்கு மேல் தளவானூர் சமணர் குகை அமைந்துள்ளது. மேலே செல்ல படிகளும் உள்ளன
குடைவரை
சிவனுக்காக எழுப்பபட்ட இக்குடைவரையின் கருவறையில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பிற குடைவரைகளைப் போல் அல்லாது கருவறைக்கு முன் சிறிய தாழ்வாரம் உள்ளது. இது பல்லவர்கால குடைவரையின் அமைப்பு. ஆலய முகப்பில் துவாரபாலகர்கள் உள்ளனர். தூண்கள் வேலைப்பாடுகள் கொண்டவை.
கல்வெட்டுகள்
இக்குடைவரையில் பல்லவர் காலத்தைய கல்வெட்டுகள் மூன்றும் பிற்காலத்தைய கல்வெட்டு ஒன்றும் காணப்படகிறது.
பிற்காலக் கல்வெட்டு பஞ்சவநனியிசுரன் ,பெரிய நாச்சியம்மை எனும் இரு பெயர்களைக் குறிப்பிடுகிறது.
குடவரையின் வெளிப்புறத் தூணொன்றில் பல்லவ கிரந்த கல்வெட்டு உள்ளது. நரேந்திரன் என்பவன் சத்ரு மல்லேசுவரம் எனும் பெயரில் குடைவரை கட்டியதைக் குறிப்படுகிறது.நரேந்திரன் என்னும் சிற்றரசன் மகேந்திரன் பெயரால் குடைவரை அமைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. *
பல்லவ கிரந்த கல்வெட்டு
"தண்டோநத நரேந்த்ரநோ
நரேந்த்ரநை ஸகரிதம்
ஸத்ரு மல்லேந ஸைலேஸ்மிந்
ஸத்ரு மல்லேஸ்வராலயம்"
இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு முகப்புத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. செல்லன் சிவதாசன் எனபான் சொன்னதாக இக்கல்வெட்டு முடிகிறது. கிரந்தக் கல்வெட்டு கூறும் அதே தகவலைத் தான் இதுவும் கூறுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் வெண்பெட்டு ஊரினைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.
தமிழ் கல்வெட்டு
"ஶ்ரீ தொண்டையந்தார்
வேந்தன் நரேந்திரப்
போத்தரைசன் வெ
ண்பெட்டின் பா
ல் மிகமகிழ்ந்து க
ண்டான் சரமிக்க வெ
ஞ்சிலையின் ஶ
த்துரு மல்லேஶ்வ
ராலையமென்றர
ணுக்கிடமாக ணங்கு
இவ்வூரழும்
ம மங்கலவன்
செல்லன் சிவ தா
ஸந் சொல்லியது"
வெளிப்புறத் தூணொன்றில் மூன்றாம் நந்திவர்மப் பல்லவனதாகக் கருதப்படும் நந்திவர்மனின் பதினைநதாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று காணப்படுகிறது (Ref. vol. 12). இக்கல்வெட்டு தானம் அளித்தவரை வெண்பெட்டு தளி உடையை….." எனக் குறிப்பிடுகிறது. சிறிது சிதைந்துள்ளது. தொல்லியல் துறை அதன் மேலேயே தடுப்பு வேலிகளை அமைத்துள்ளது.
'
"ஸ்வஸ்தி ஶ்ரீ கோவிசைய
நந்தி விக்கிரமப்
பரு(மக்கு) யாண்டு பதி
னைந்தாவது வெண்
பெட்டு வாழும் தளி உடை(ய)
……
மொடன்னிடைக் க
ழஞ்சுப் பொன் முத
ல் கொண்டு இப்பொ"
உசாத்துணை
- பொன் கார்த்திகேயன் தளவானூர் சத்ருமல்லேசுவரம்
- ஏ.ஏகாம்பரநாதன் தொண்டைமண்டல சமணக்கோயில்கள்
- Tamilnadu Tourism: Shatru Malleswaralayam Rock Cut Temple, Thalavanur, Villupuram
- [https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/The-writing-on-the-cave/article16209960.ece
The writing on the cave - The Hindu
]
Thalavanur Caves
]
✅Finalised Page