under review

தமிழ் சினிமா வரலாறு

From Tamil Wiki
தமிழின் முதல் பேசும்படம் காளிதாஸ் - விளம்பரம்

தமிழ் சினிமா வரலாறு 1916-ல் வெளியான 'கீசகவதம்' என்ற மெளனப்படத்திலிருந்து ஆரம்பமானது. நாடகக்கலையின் பரிணாம வளர்ச்சியாக ஆரம்பித்து தமிழின் அனைத்துக் கலைகளும் முயங்கும் ஊடகமாக சினிமா பரிணமித்தது.

மெளனப்படம்

1897-ல் எம்.எட்வர்டு என்பவர் சென்னை விக்டோரியா ஹாலில் முதல் சினிமா காட்சியைக் காண்பித்தார். அதன்பின்னர் 1900-ல் சென்னை மவுன்ட் ரோட்டில் (இன்றைய அண்ணா சாலையில்) மேஜர் வார்விக் என்பவரால் எலக்ட்ரிக் தியேட்டர் எனும் சினிமா அரங்கம் கட்டப்பட்டது. இது தென்னிந்தியாவின் முதல் சினிமா திரையரங்கம்.

சாமிக்கண்ணு வின்சென்ட் சென்னையில் 1905-ல் முதல் டூரிங் சினிமா கொட்டகையை உருவாக்கினார். அவர் தனது சினிமா கொட்டகையுடன் பல இடங்களுக்கும் பயணம் செய்து ‘குழந்தை ஏசு’ போன்ற குறும்படங்களைக் காட்டினார். 1911-ல் மருதப்ப மூப்பனார் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டுவிழாவைப் படம்பிடித்து சென்னையில் திரையிட்டார். 1914-ல் ஆர்.வெங்கையா கட்டிய கெயிட்டி தியேட்டர்தான் இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட முதல் சினிமா கொட்டகை.

எஸ்.எம்.தர்மலிங்கத்துடன் இணைந்து நடராஜ முதலியார் 1916-ல் சென்னையில் ஒரு சினிமா கம்பெனியைத் தொடங்கினார். 1917-ல் நடராஜ முதலியார் 'கீசக வதம்' எனும் மௌனப் படத்தை வெளியிட்டார். 1921-ல் சென்னையின் ஈஸ்ட் ஃபிலிம்ஸ் கம்பெனி நட்சத்திரங்களான ஆர்.வெங்கையா, ஆர்.பிரகாஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவான ‘பீஷ்ம பிரதிக்ஞை’ படம்தான் தென்னிந்தியாவின் முதல் முழு நீளப் பேசாத் திரைப்படம். மக்கள் அறிந்துவைத்திருந்த புராணக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகளை மெளனப்பட யுகத்தில் படங்களாக்கினர்.

பேசும்படம்

இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா'-வை தயாரித்த சினிமாக் கலைஞரான அர்தேஷிர் இரானி தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' படத்தைத் தயாரித்தார். ‘ஆலம் ஆரா’ எடுக்கப்பட்ட அதே செட்டில் காளிதாஸ் திரைப்படமும் எடுக்கப்பட்டது. அக்டோபர் 31, 1931-ல் 'காளிதாஸ்' திரைப்படம் ஐம்பது தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களுடன் சென்னை கினிமா சென்டிரல் திரையரங்கில் திரையிடப்பட்டது. காளியின் மீதான பக்தியினால் அறிஞனாக உயர்ந்தவனது புராணவகைக் கதை ‘காளிதாஸ்’. மக்கள் தாங்கள் கேள்விப்பட்டு, படித்து, அறிந்து வைத்திருந்த கதையை சினிமாவாக மீண்டும் பார்க்கும்போது அடைந்த ஆர்வம் படத்தை வெற்றிகரமாக ஓடவைத்தது. மும்பையிலிருந்து படப்பெட்டி கிளம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து வால்டாக்ஸ் சாலை வழியாக கினிமா சென்ட்ரல் திரையரங்கு வரை வந்தது. மக்கள் பேரணியாகத்திரண்டு வரவேற்று படம் பார்த்தனர்.

வண்ணப்படம்

  • 1944-ல் வெளியான ‘ஹரிதாஸ்‘ திரைப்படம் தமிழின் முதல் முழு நீள வண்ணப் படம்.
  • இந்தக் காலகட்டத்திலும் புராணம், இதிகாசக் கதைகளே திரைப்படமாக எடுக்கப்பட்டன. பாடல் பாதி, வசனம் பாதி என திரைப்படம் இருந்தது.
  • 1934-ல் வெளியான ’சீதா கல்யாணம்’ தமிழ் சினிமாவின் முதல் வண்ணத் திரைப்படம் எனப்படுகிறது.
கை வண்ணம்
  • 1940-ல் கிருஷ்ணஸ்வாமி சுப்ரமணியத்தால் இயக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பக்த சேதா வண்ணக் காட்சிகளைக் கொண்ட ஆரம்பகால தமிழ்த் திரைப்படம்
  • முதலில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் நெகடிவ்களை ஃபிரேமுக்கு ஃப்ரேம் வண்ணம் தீட்டுவதன் மூலம் வண்ணப்படமானது.
  • மங்கம்மா சபதம் (1943) கையால் சாயப்பட்ட காட்சிகளை உள்ளடக்கியது.
  • 1944-ல் வெளியான ஹரிதாஸ், அதன் சுவரொட்டியில் முழு புதிய வண்ணப் பிரதியில் வெளியானது என்ற அறிக்கையுடன் வெளியானது
  • 1945-ல் வெளியான பி.என். ராவின் சாலிவாகனன் திரைப்படத்தில் ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரியின் காதல் காட்சி வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
  • ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நாம் இருவர் (1947), வேதாள உலகம் (1948) ஆகியவை கைவண்ணக் காட்சிகளைக் கொண்டது. முருகேசன் என்ற கலைஞர் ஒவ்வொரு சட்டகத்தையும் அதன் நேர்மறை அச்சிலேயே கையால் வரைந்தார்.
கேவா கலர்
  • 1948-ல் நிறுவப்பட்ட கேவா கலர்(Gevacolor) என்பது ஒரு கலர் மோஷன் பிக்சர் செயல்முறை. பெல்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டது, அக்ஃபாகலர் இன் துணை நிறுவனம். 1950-களில் இந்த செயல்முறையும் நிறுவனமும் செழித்தது. நிறுவனங்கள் 1964-ல் ஒன்றிணைந்து அக்ஃபா-கேவர்ட் -ஐ உருவாக்கியது. மேலும் 1980-கள் வரை திரைப்படப் பங்குகளை தயாரித்தது. கேவாகலர் மலிவான வண்ணத் திரைப்படங்களில் ஒன்று. இது தமிழ் சினிமாவை வண்ணப் படங்களைத் தயாரிக்க ஊக்குவித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கேவா கலர் படங்கள் பெரும்பாலும் மும்பையில் உள்ள திரைப்பட மையத்தில் செயலாக்கப்பட்டன.
  • 1952-ல் எல்.வி. பிரசாத் இயக்கி, பி.நாகி ரெட்டி, ஆலூரி சக்ரபாணி ஆகியோரால் விஜயா வாஹினி ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கப்பட்ட ’கல்யாணம் பண்ணிப்பார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கேவாகலர் அறிமுகமானது.
  • 'அலிபாபாவும் 40 திருடர்களும்' (1956) முழுக்க முழுக்க கேவாகலரில் படமாக்கப்பட்டு வெளியான முதல் தமிழ்த் திரைப்படம்.
  • 'கணவனே கண்கண்ட தெய்வம்'(1955), 'மர்ம வீரன்', 'கண்ணின் மணிகள்', 'தங்கமலை ரகசியம்', 'அம்பிகாபதி', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' ஆகியவை கேவாகலரில் வெளிவந்த பிற திரைப்படங்கள்
  • 1940-கள் தொடங்கி, 1960-களின் முற்பாதி வரை கேவாகலர் திரைப்படத்தில் இருந்தது.
டெக்னிகலர்

டெக்னிகலர் என்பது கலர் மோஷன் பிக்சர் செயல்முறைகளின் தொடர். இது 1916 தொடங்கி பல தசாப்தங்களாக மேம்படுத்தப்பட்ட பதிப்புகள். டெக்னிகலர் தமிழ் சினிமாவில் பரவலாக பயன்படுத்தப்படாததற்கான காரணம் இது உலகின் மிக விலையுயர்ந்த வண்ண செயல்முறை என்பதால். டெக்னிகலருடன் வெளியான மூன்று தமிழ்ப்படங்கள் 'அதிசயப்பெண்'(1959), 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கொஞ்சும் சலங்கை'.

ஈஸ்ட்மேன் கலர்
  • உலகத் திரைப்பட வரலாற்றில் கலர் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் கோடக் பிலிம் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜார்ஜ் ஈஸ்ட்மேன். ஈஸ்ட்மேன் கலர் என்பது ஈஸ்ட்மேன் கோடக் நிறுவனத்தின் கலர் மோஷன் பிக்சர் தயாரிப்புடன் தொடர்புடைய செயலாக்க தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்தப்படும் வர்த்தகப் பெயர்.
  • ஈஸ்ட்மேன்கலர் டீலக்ஸ் கலர் (20த் சென்சுரி ஃபாக்ஸ்), வார்னர்கலர், மெட்ரோகலர், பாதேகலர் மற்றும் கொலம்பியாகலர் என பல்வேறு பெயர்களால் அறியப்பட்டது.
  • 1959-ல் ராஜா மலையசிம்மன் திரைப்படத்தின் மூலம் ஈஸ்ட்மேன்கலர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது. இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் அதே தலைப்புகளுடன் படமாக்கப்பட்டது, "ஓரளவு வண்ணத்தில்" இருந்தது.
  • தமிழ் சினிமாவின் முதல் முழு நீள ஈஸ்ட்மேன் கலர் படத்தை இயக்குனர் ஸ்ரீதர் "காதலிக்க நேரமில்லை" திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
ஓ.ஆர்.டபிள்யு.ஓ.
  • ஓ.ஆர்.டபிள்யு.ஓ (ORWO: ORiginal WOlfen) என்பது புகைப்பட தயாரிப்புகள் மற்றும் காந்த பதிவு நாடா ஆகியவற்றின் பிராண்ட்.
  • ORWO கலர் தமிழ் சினிமாவில் அனைத்து படங்களும் வண்ணத்தில் அமைய காரணமாக இருந்தது. எழுபதுகளின் பிற்பகுதியில் ORWO கலர் மலிவான முறைகளில் ஒன்றாக ஆனது.
  • 1977-ல் கே. பாலச்சந்தர் இயக்கிய பட்டின பிரவேசம், ORWO நிறத்தில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முதல் திரைப்படம்.
  • 1978-க்குப் பிறகு கலர் படங்கள் பெரும்பாலும் ORWO கலரில் படமாக்கப்பட்டன. இது ஈஸ்ட்மேன்கலரைப் போன்ற வண்ணத் தரத்தைக் கொடுத்தது. 80-களில் தமிழ் படங்கள் அனைத்தும் ORWO கலரைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. முள்ளும் மலரும் (1979), சம்சாரம் அது மின்சாரம் (1986) போன்ற படங்கள் ORWO நிறத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
கறுப்பு வெள்ளைப் படங்களின் முடிவு

1975-க்குப் பிறகு கறுப்பு வெள்ளைப் படங்களின் எண்ணிக்கை குறைந்தது. 'அவர்கள்'(1977) கறுப்பு வெள்ளை தமிழ் படங்களில் வெற்றி பெற்ற படம். 1980-களில் கறுப்பு வெள்ளை படங்களை தயாரிப்பது அரிதானது. 'சந்தியா ராகம்' (1989) தமிழ் சினிமாவின் கடைசி முழு நீள கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படம். கருப்பு வெள்ளையில் இருந்தாலும், இந்தத் திரைப்படம் 37-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் குடும்ப நலன் பற்றிய சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது (1990). 'இருவர்' (1997) திரைப்படம் கறுப்பு வெள்ளையில் சில காட்சிகளைக் கொண்டிருந்தது. முகம்' திரைப்படம்(1999) சில கறுப்பு மற்றும் வெள்ளை காட்சிகளைக் கொண்டிருந்தது.

1950-1960கள்

  • சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நிறைய நடிகர்கள் நாடகத்திலிருந்து சினிமா வரத்துவங்கிய காலகட்டம்.
  • புராணக் கதைகளின் காலம் முடிந்து புதிய கதைகள் உருவாகிய காலம்.

1960-1970கள்

  • வசனம், நடிப்பு போன்றவைக்கு முக்கியத்துவம் இருந்த காலகட்டத்திலிருந்து இசை, நடனம், சண்டைக் காட்சிகள் என பல புதிய உத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • பல புதிய திரைப்புனைவுக் கதைகள் உருவாகத் தொடங்கியது.

1970-1980கள்

  • தென்னிந்திய மொழிகளில் சினிமாவில் நவீனமயமாதல் காலகட்டம் இது. புதிய கதைக்கருக்கள், புதிய வகை நடிப்பு, புதியவகை திரைமொழி ஆகியவை உருவாகி வந்தன. அவற்றை பொதுவாக தென்னிந்திய புதிய அலை என்று சொல்லலாம். அதை மலையாளத்தில் சமாந்தர சினிமா(இணையான கலைப்படம்) என்றனர். இடைநிலைப் படம் என்று தமிழில் சொல்லலாம். சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறியது.
  • வெறும் கதை சொல்லும் கருவியாக இருந்த சினிமா, இயல், இசை ஆகிய கலைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக ஆன காலகட்டம். ஒரு இசை தகடு வெளியானதும் அந்த இசையைக் கேட்டு திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் இக்காலகட்டதில் அதிகமாக உருவாகினர்.
  • தென்னிந்தியாவின் இந்த புதிய அலை என்பது ஏற்கனவே கலைப்படத்தளத்தில் உருவான திரைமொழி, பேசுபொருள் ஆகியவற்றை வணிகப்படச் சூழலில் பொதுவாகக் கொண்டு வருவதாகவே இருந்தது. மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் (சுயம்வரம்), அரவிந்தன் (காஞ்சனசீதா) ஆகியோர் கலைப்பட இயக்கத்தை தொடங்கினர். தமிழில் பாபு நந்தங்கோடு (தாகம்) ஜெயகாந்தன் (உன்னைப்போல் ஒருவன்) ஆகியோர் கலைப்பட இயக்கமொன்றுக்கு அடித்தளமிட்டனர்.
  • கன்னடத்தில் பி.வி.காரந்த் (வம்ச விருக்ஷெ),சோமன துடி) ஜி.வி.ஐயர் (ஹம்ஸகீதே) போன்றவர்கள் கலைப்பட இயக்கத்தை தொடங்கியிருந்தனர். தெலுங்கில் பி.எஸ்.நாராயணா (நிமஜ்ஜனம்) கலைப்பட இயக்கத்தை தொடங்கினார்.
  • தமிழிலும் தெலுங்கிலும் கலைப்பட இயக்கம் முளையிலேயே கருகியது. தமிழ்ச்சூழலில் அதற்கு அரசு ஆதரவு இருக்கவில்லை. ஊடகங்கள் எதிராகவே இருந்தன. கேலி கிண்டல் மட்டுமே எஞ்சின. தாகம் எங்குமே வெளியாகவில்லை. அதன் ஒரே ஒரு பிரதி மட்டும் ஆவணக்காப்பகத்தில் எஞ்சுகிறது.
  • இச்சூழலில் இளையராஜா தமிழுக்கு வந்தார். அவர் ஏற்கனவே கன்னட, மலையாள தீவிரக் கலைப்படங்களுடன் அறிமுகம் உடையவர். தமிழில் நவீன இந்திய சினிமாவை நன்கறிந்து, அதன் நடுவில் இருந்து வணிகப்படத்திற்குள் வந்த முதல் ஆளுமை அவரே.
  • கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நவீன திரைப்பட அலை வணிக சினிமாச் சூழலுக்குள் உருவாக இளையராஜா மிகப்பெரிய அடிப்படையாக இருந்தார். தமிழில் முழுக்க முழுக்க அவரிடமிருந்தே அந்த இணைசினிமா உருவானது.
  • பாரதிராஜா, மகேந்திரன் முதல் இரண்டு தலைமுறை புதிய இயக்குநர்கள் இளையராஜாவால்தான் சினிமாவுக்குள் நுழைந்தனர். புதியவகை சினிமாக்கள் சிலவற்றை உருவாக்கினர்.
  • அதைவிட குறிப்பிடத்தக்கது புதிய திரைமொழிக்கு அவருடைய இசையின் பங்களிப்பு. பாரதிராஜா கொண்டுவந்த திரைமொழி வேறுபட்டது. அதற்கு முன் ஸ்ரீதர் முதலியோர் கோணங்களில் சோதனை செய்திருந்தாலும் ‘கட்டிங்’ எனப்படும் காட்சி முடிவு -அடுத்தகாட்சி தொடக்கம் ஆகியவற்றிலும், சட்டென்று ஊடுருவும் காட்சித்துளிகளிலும் எந்தச் சோதனையும் செய்யவில்லை. ஏனென்றால் அவை புரியாமல் போய்விடும் என்னும் ஐயம் இருந்தது.
  • அன்றைய ‘ஷாட்கள்’ எல்லாம் ஒருவகை மாறாத ‘டெம்ப்ளேட்’ கொண்டவை. அது சினிமாவின் இலக்கணம் எனப்பட்டது. அன்றைய ஃபிலிம் குறைவான ஒளிவாங்கு சக்தி கொண்டது. ஆகவே அதிக ஒளியில் படம் எடுக்கவேண்டும். அந்த ஏற்பாடுகள் சிக்கலானவை. ஆகவே ஒளிப்பதிவாளர் மேல் இயக்குநருக்கு கட்டுப்பாடு இருக்கவில்லை. அச்சூழலில் அடுத்தகட்ட அதிநுண்ணுணர்வு ஃபிலிம் வந்தது. சினிமா நேரடியாக ஊர்களில் எடுக்கப்பட்டது. புதிய திரைமொழி உருவாகியது. அந்தப்படங்களில் இளையராஜாவின் இசையே காட்சியோட்டத்தை புரியவைப்பதாக அமைந்தது. காட்சிமுடிவு காட்சி தொடக்கம் ஆகியவற்றை இசை வழியாக உணர்த்தினார். பின்னணி இசை என்பதை புரிந்துகொண்டு இசையமைத்த முதல் இசையமைப்பாளர். அதனூடாக தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு வர வழிவகுத்தார்.

1980-1990 ஆண்டுகள்

  • சினிமா ரசிகர்கள் கூட்டம் பொழுது போக்கிற்காக அலைமோத தொடங்கியதும், வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லாமல் குடும்பம், காதல், நட்பு என மனிதர்களின் உணர்வுகள் மற்றும் உறவுகள் சம்பந்தப்பட்ட கதைகள் வரத் தொடங்கின.
  • இந்த காலகட்டத்தில் காதல் படங்கள் அதிகம் வந்தன.

1990-2000 ஆண்டுகள்

  • டிஜிட்டல் காலகட்டம் தொடங்கிய காலம்.
  • அதுவரை ஃபிலிம் கேமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வந்த சினிமா, டிஜிட்டல் கேமராவாக மாறியது.
  • இசையிலும் இசை வாத்தியங்களை தாண்டி கம்ப்யூட்டர் மியூசிக்கும் அதிகம் பயன்பாட்டிற்கு வந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இந்த யுகத்தின் முக்கியமான இசை இயக்குனராக இருந்தார்.

2000-2010 ஆண்டுகள்

  • சந்தையின் மன ஓட்டத்திற்கு ஏற்ப படம் செய்யும் காலகட்டம் என்று வரையறுக்கலாம். கதைப் பஞ்சம் ஏற்பட்டது போல் எல்லோரும் குறிப்பிட்ட ஜானர்'க்குள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.
  • ஒரு நகைச்சுவைப்படம் விரும்பிப் பார்க்கப்பட்டால் மக்கள் வெறுக்கும் வரை அதே ஜானர் கொண்ட நகைச்சுவைப் படங்கள் பிரதானமாக சந்தையை ஆக்கிரமிப்பது.

2010-2020 ஆண்டுகள்

  • ஒரு ஜானர்'க்குளும் மாட்டிக் கொள்ளாமல் எந்த ஒரு ட்ரெண்டையும் பின்பற்றாமல் கலவையாக பல படங்கள் வந்தன.
  • புதிய இயக்குனர்கள், புதிய உத்திகள், புதிய கதைக்களம் என புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்த்தனர்.
  • குறும்படங்கள் தயாரிப்பது அதன் மூலம் இணையத்தில் பிரபலமாகி எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிகர்களும், இயக்குனர்களும் உருவாகி வந்தனர்.
  • திறமையும் கலையும் கைகூடினால் குறைந்த செலவில் படம் செய்யலாம் என எளிய பின்புலம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை தந்த காலம்
  • CG எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்ட காலம்

2020-க்குப்பின்

  • ’ஓடிடி யுகம்‘ எனலாம்.
  • திரைப்படம் பார்க்க திரையரங்குகள் தான் செல்ல வேண்டும் என்பதில்லை என்ற நிலையை ஓடிடி தளங்கள் நிரூபித்தன. கொரானா நோயச்ச காலத்தின் போது வீடடங்கு நாட்களில் ஓடிடி தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும் திரையரங்குகளில் சென்று பார்ப்போரும் இருக்கின்றனர்.
  • இன்ஸ்டாகிராம், யூடியூப், ஓடிடி தளங்கள் மூலம் பிற கலைகளை விட சினிமாவே பிரதானமான பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கும் காலகட்டம். ”சினிமா அனைத்து கலைகளையும் உள்ளடக்கிய பூதம்” எனுமளவு அனைத்துக் கலைகளும், கலைஞர்களும் அதை ஊடகமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் காலம்.
  • உலக சினிமாக்களை எளிதில் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பு ரசிகர்களின் தரத்தை மேம்படுத்தியது.
  • புதிய தொழில் நுட்பங்கள், புதிய கதைக்களங்கள், புதிய முயற்சிகள் என கலையை மட்டுமே நம்பி படம் எடுக்கலாம் என புதியவர்களுக்கு, கலைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் காலகட்டம்.

தமிழ்சினிமாவின் முக்கிய காலக்கோடு(timeline)

  • 1934 - முதல் தமிழ் வண்ணத் திரைப்படம் - சீதா கல்யாணம்
  • 1940 - கை வண்ணத் தொடர் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படம் - பக்த சேதா
  • 1944 - முதல் முழு நீள கைவண்ண தமிழ் படம் - ஹரிதாஸ்
  • 1948 - கை வண்ண வரிசையுடன் கடைசி படம் - வேதாள உலகம்
  • 1952 - கேவாகலர் வரிசையுடன் முதல் படம் - கல்யாணம் பண்ணிப்பார்
  • 1956 - முதல் முழு நீள கேவாகலர் தமிழ்த் திரைப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
  • 1959 - டெக்னிகலரில் படமாக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படம் - அதிசய பெண்
  • 1959 - டெக்னிகலரில் அச்சிட்டு வெளியிட்ட முதல் முழு நீள தமிழ்த் திரைப்படம் - வீரபாண்டிய கட்டபொம்மன்
  • 1959) - ஈஸ்ட்மேன்கலர் காட்சிகளைக் கொண்ட ஆரம்பகால தமிழ்த் திரைப்படங்கள் – ராஜா மலையசிம்மன் மற்றும் தெய்வபலம்
  • 1962)- முழுவதுமாக டெக்னிகலரில் மட்டுமே படமாக்கப்பட்ட ஒரே தென்னிந்தியத் திரைப்படம் வெளியிட்டது - கொஞ்சும் சலங்கை
  • 1963) - முழுக்க முழுக்க கேவாகலரில் எடுக்கப்பட்ட கடைசி தமிழ் படம் – லவ குசா
  • 1964) முழுக்க முழுக்க ஈஸ்ட்மேன்கலரில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் - காதலிக்க நேரமில்லை
  • 1973 - சினிமாஸ்கோப்பில் முதல் தென்னிந்திய வண்ணத் திரைப்படம் - ராஜராஜ சோழன்
  • 1974 - "ஓரளவு வண்ணத்தில்" எடுக்கப்பட்ட கடைசி தமிழ் திரைப்படம் - சுவாதி நட்சத்திரம்(1974), அந்தரங்கம் (1975), மழை மேகம் (1976)
  • 1978 - ORWO நிறத்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் - பட்டின பிரவேசம்
  • 1989 - கறுப்பு வெள்ளையில் கடைசியாக வெளிவந்த தமிழ் படம் - சந்தியா ராகம்

உசாத்துணை


✅Finalised Page