under review

தணிகை உலகநாதன் (நாடக ஆளுமை)

From Tamil Wiki

தணிகை உலகநாதன் (முனைவர் தணிகை உலகநாதன்) (பிறப்பு: நவம்பர் 02, 1933) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், நாடக ஆசிரியர், நடிகர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

தணிகை உலகநாதன், நவம்பர் 02, 1933 அன்று, திருத்தணியிலிருந்து 21 கி.மீ. தூரத்திலுள்ள வங்கனூர் என்னும் கிராமத்தில், செவ்வண்ண தேசப்பர் - வள்ளியம்மை இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை நிறைவு செய்தபின் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். முதுகலைப் பட்டம் பெற்றார். திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் 'தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தணிகை உலகநாதன், கே.ஜி.கண்டிகையை ஒட்டிய செருக்கனூர் அக்கிரகாரம் சேரி ஓராசிரியர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். முதல் மனைவி வேலம்மாள். அவர் இரண்டாவது மகப்பேற்றின்போது காலமானதால் வேலம்மாளின் தங்கை ஈஸ்வரியை இரண்டாவதாக மணம் செய்துகொண்டார். முதல் மனைவிக்கு வரதராசன்'என்றொரு மகன். இரண்டாவது மனைவிக்கு செந்தாமரை'என்றொரு மகள்; செழியன் என்றொரு மகன்.

இலக்கிய வாழ்க்கை

தணிகை உலகநாதனின் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இரு தொகுதிகளாக வெளிவந்தன. திருமலை தேவஸ்தானத்தின் மானியத்துடன் 'ஆன்மிக அலைகள்' எனும் கட்டுரைத் தொகுதியை வெளியிட்டார். 'தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள்' என்னும் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டைத் தமிழ் வளர்ச்சித் துறையின் மானியம் பெற்று நூலாக வெளியிட்டார்.

தணிகை உலகநாதன் ஐந்து நாவல்கள், ஒரு குறுநாவல், ஒரு நாடகம், பதினோரு ஓரங்க நாடகங்கள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், பதினெட்டு ஆய்வு நூல்கள், ஒரு தன் வரலாற்று நூலை எழுதினார்

நாடகம்

தணிகை உலகநாதன், 1954-ல் 'பணத்திமிர்' என்றொரு நாடகத்தை எழுதி, அதில் கதாநாயகனாக நடித்தார். திருத்தணிக்கு அருகிலுள்ள சரஸ்வதி ஆலை ஊழியர்களுக்காக, 'யாருக்கு யார் சொந்தம்' என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றினார். இந்நாடகம் பிற்காலத்தில், அகமதாபாத் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 1957-ல் மாணவர் விடுதிக் கொண்டாட்ட தினத்தில் 'சீதா கல்யாணம்' எனும் நகைச்சுவை நாடகத்தை எழுதி, அதில் அறுபது வயது வழக்குரைஞராக நடித்தார்.

இதழியல்

தணிகை உலகநாதன் 'தமிழ் இன்பம்' எனும் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆவணம்

தணிகை உலகநாதனின் வாழ்க்கை வரலாற்றை பி.ஏ. முனுசாமி எழுதினார். இந்நூலை 2015-ல், கலைஞன் பதிப்பகம், தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயாவுடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

தணிகை உலகநாதன், பொது வாசிப்புகுரிய சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார். குறிப்பிடத்தகுந்த நாடக ஆளுமைகளுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • ஆன்மிக மலர்கள்
சிறுகதைத் தொகுப்பு
  • கண்ணீரும் கங்கையாகலாம்
  • உலகத்தொண்டர்
வாழ்க்கை வரலாறு
  • சுவாமி சங்கரதாசர்
  • டாக்டர் இராதாகிருஷ்ணன் வாழ்வும் தொண்டும்
கட்டுரை நூல்
  • ஆன்மிக அலைகள்
உரை நூல்கள்
  • மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தெளிவுரை
  • முத்தொள்ளாயிரம் தெளிவுரை
  • புரட்சிக்கவி தெளிவுரை
  • பாஞ்சாலி சபதம் தெளிவுரை
நாடகம்
  • பணத்திமிர்
  • யாருக்கு யார் சொந்தம்
  • சீதா கல்யாணம்
ஆய்வு
  • தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள்

உசாத்துணை

  • தணிகை உலகநாதன் வாழ்க்கை வரலாறு, பி.ஏ. முனுசாமி, கலைஞன் பதிப்பகம், முதல் பதிப்பு: 2015


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:26:05 IST