தஞ்சைப் பெருவுடையார் உலா
தஞ்சைப் பெருவுடையார் உலா தஞ்சை இராசராசேச்சுரத்தில் கோவில் கொண்ட பெருவுடையாரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட உலா என்னும் சிற்றிலக்கியம்.
ஆசிரியர்
தஞ்சைப் பெருவுடையார் உலாவை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். மராட்டிய மன்னர் காலத்தில் வாழ்ந்தவர். சரபோஜி மன்னரின் அவைக்கவிஞராக இருந்தவர்.
நூல் அமைப்பு
தஞ்சைப் பெருவுடையார் உலா 'பிரகதீஸ்வர மகாத்மியம்' என்னும் வடமொழி நூலை மூல நூலாகக் கொண்டு இயற்றப்பட்டது. இந்நூல் அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலாவின் அமைப்பைப் பெரும்பாலும் ஒத்திருக்கிறது.
தலைவனின் திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனமாடல், ஆபரணங்கள் தரித்தல், அடியார்கள் புடைசூழ உலாவருதல், அடியார்களின் பெருமையும், பக்தியும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய பருவங்களில் உள்ள பெண்கள் தத்தம் வயதுக்கேற்றவாறு பெருவுடையார்மேல் காதல்கொள்ளல் ஆகியவை கூறப்படுகின்றன.
மற்ற உலாக்களைவிட தஞ்சைப் பெருவுடயார் உலா சில இடங்களில் மாறுபட்டிருக்கிறது. பேரிளம்பெண் தேர்நிலை வரை சென்று திரும்பியதையும், அவள் ஞானம் பெற்றதையும், பெருவுடையார் மீண்டும் ஆலயத்துக்குத் திரும்புவதையும் கூறி அவர் இன்னார் என சுட்டப்படுகிறது.
சொல்லணிகளும், பொருளணிகளும், பல தலங்கள் தொடர்பான செய்திகளும், ஆசிரியரை ஆதரித்த சரபோஜி மன்னரைப்பற்றிய செய்திகளூம் இந்நூலில் காணப்படுகின்றன.
பாடல் நடை
உடன்வரும் அடியார்கள்
வந்திறைஞ்சும் வானோர் மகுடபந்தி மாமணிகள்
சிந்தப் பிரம்பு செலுத்திறையும் -முந்தொருநாள்
தந்தையிரு தாள்சிதைத்துச் சார்ந்த சிவத்துரோ
கந்தவிரச் செய்த கருத்தனும் -வந்தெம்மை
சாலக்காத்தாளுமுயர் சங்கரனார் நம்மிடத்தில்
கோலக்காத்தாளங்கொள் கோமானும்...
உசாத்துணை
தஞ்சைப் பெருவுடையார் உலா, தமிழ் இணைய கல்விக்கழகம்
✅Finalised Page