under review

தஞ்சாவூர் பாலசரஸ்வதி

From Tamil Wiki
தஞ்சாவூர் பாலசரஸ்வதி
தஞ்சாவூர் பாலசரஸ்வதி

தஞ்சாவூர் பாலசரஸ்வதி (டி. பாலசரஸ்வதி) (மே 13, 1918 - பிப்ரவரி 9, 1984) பரதநாட்டியக் கலைஞர், நாட்டிய ஆசிரியர். சதிராட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து பரதநாட்டியமாக மாற்றியதில் பாலசரஸ்வதி, ருக்மிணி அருண்டேல் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. ருக்மிணியின் தரப்பிலிருந்து மாறுபட்டு பாலசரஸ்வதி சதிராட்டத்தின் சிருங்கார ரசத்தை பரதத்திலும் தக்க வைக்கும் போக்கை முன்வைத்தார்.

பிறப்பு, கல்வி

பாலசரஸ்வதி ஜயம்மாள், கோவிந்தராஜுலுக்கு மகளாக மே 13, 1918-ல் பிறந்தார். இசைவேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர். பாலசரஸ்வதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞர், நடனக் கலைஞர். வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரி. தாயார் பாடகி. தந்தை இசைக் கலைஞர். பாலசரஸ்வதி ஏழாவது தலைமுறைக் கலைஞர்.

பாலசரஸ்வதி கெளரி அம்மாளுடன்
பாலசரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி

தனிவாழ்க்கை

பாலசரஸ்வதி ஏற்கனவே திருமணமான ஷண்முக ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள் லட்சுமி. லட்சுமியின் கணவர் டக்ளஸ்.எம்.நைட் பாலசரஸ்வதி பற்றி 'Her life and Art'புத்தகத்தை எழுதினார். மகள் லட்சுமி பரதக்கலைஞர்.

கலை வாழ்க்கை

பாலசரஸ்வதி, தனது மூன்று வயதில் மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் நடனம் கற்றார். வாய்ப்பாட்டுக் கலைஞர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் கந்தப்பா நட்டுவனாரிடம் நடனம் கற்க ஒழுங்கு செய்தார். 1925-ல் பாலசரஸ்வதி ஏழு வயதில் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நடன அரங்கேற்றம் செய்தார். முதலில் 1934-ல் கல்கத்தாவில் இவரது நிகழ்ச்சி நடைபெற்றது. 1960-களில் சர்வதேச அளவில் ஐரோப்பா, கிழக்காசியா, வடஅமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரதநாட்டியம் அரங்கேற்றினார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகக் கல்லூரி, வாஷிங்டன் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 1980-களில் அமெரிக்கா சென்றார். சென்னை மியூசிக் அகாதெமி தந்த ஊக்கத்தால் அந்த அமைப்புடன் இணைந்து நாட்டியப் பள்ளியை நிறுவினார். 1961-ல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற எடின்பரோ சர்வதேசத் திருவிழாவில் பாலசரஸ்வதிக்கு 8 நிகழ்வுகள் ஏற்பாடாகி இருந்தன.

சதிராட்டத்தை பரதமாக மீட்டுருவாக்கம் செய்து அனைத்து தரப்பினரும் கற்கும் வகை செய்தவர்களில் ருக்மிணிதேவி அருண்டேலும் பாலசரஸ்வதியும் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆனால் பாலசரஸ்வதி ருக்மிணிதேவி அருண்டேலுடன் வேறுபட்டார்.

தஞ்சாவூர்_பாலசரஸ்வதி
சிருங்காரம்

பாலசரஸ்வதி சிருங்கார ரசத்தை எல்லையற்ற சக்தியுடன் ஒருவர் வரித்துக் கொள்ளும் உறவிலிருந்து எழும் பரவசநிலை என்றார். மனிதனைக் குறித்தும் கடவுளைக் குறித்தும் இருக்கும் ஆண்-பெண் உறவை குறியீட்டுத் தளத்திலும் தத்துவார்த்தமாக வெளிப்படுகிறது என்ற கருத்தைக் கொண்டவர். இது குறித்த கருத்து வேறுபாடுகள் பாலசரஸ்வதிக்கும் ருக்மிணிதேவி அருண்டேலுக்கும் இடையே இருந்ததன. ருக்மிணி தேவியின் அழுத்தம் சிருங்காரம் சாராத பாடல்களின் மீதே இருந்தது. "கவிதை, ஓவியம், இசை, நடனம் மற்றும் இதர கலைகளின் மையமாகத் திகழ்வது ரசம். இந்த ரச உணர்வு காதல், வீரம், கருணை, அருவருப்பு, வியப்பு, பயம், வெறுப்பு, சாந்தம், கோபம் என்ற நவரச நிலைகளை உள்ளுணர்வின் தளத்தை உணரவேண்டும்" என்றார் பாலசரஸ்வதி.

பாலசரஸ்வதி

விவாதம்

”வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்தி எதிர்த்தார், மேலும் இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய பிராமணிய ஆக்கிரமிப்பை எதிர்த்ததால், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக இந்தியாவில் அளிக்கப்படவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது தொடர்கிறது.” என்று பாலசரஸ்தியின் மருமகனும் மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம்.நைட் குறிப்பிட்டார்.

இந்தியக் கலைகளின் மறுமலர்ச்சி என்றழைக்கப்படும் 1930-க்கு பிறகான காலகட்டத்தில் இந்திய கலைகளில் இருந்து வந்த மரபு சார்ந்த பாலியல் குறியீடுகள் நீக்கப்பட்டு விக்டோரியன் மொராலிடி அடிப்படையில் கலைகளை அணுகும் முறை உருவாகி வந்தது. சதிர் ஆட்டம் என்ற மரபுக்கலையிலிருந்து பரதக்கலையாக புத்துருவாக்கம் பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை சதிர் ஆட்டம் என்கிற கலை தேவதாசிகள் மட்டுமே ஆடக்கூடிய ஒரு கலையாக இருந்து வந்தது. தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ருக்மிணி தேவி அருண்டேல் ஆகியோரால் அது எல்லோராலும் பயிலக்கூடிய ஒரு கலையாக ஆனது. ருக்மிணி தேவி அருண்டேல் பரதநாட்டியத்தை விக்டோரியன் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு சதிர் ஆட்டத்தில் அதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த சிருங்கார பாவம் எனப்படும் பாலியல் சார்ந்த முத்திரைகளை நிராகரித்தார். அது சதிராட்டம் என்ற மரபுக்கலையை அழிக்கும் போக்கு என பாலசரஸ்வதி எதிர்த்தார்.

பாலசரஸ்வதி

பாராட்டுக்கள்

  • அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் பாலசரஸ்வதியை ’உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்’ என பாராட்டினார்.
  • ‘அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற பட்டியலில் பாலசரஸ்வதி சேர்க்கப்பட்டார்.
  • ஷம்பு மஹராஜ், டேம் மார்கட் ஃபான்டெய்ன், மார்தா கிரஹாம் உள்ளிட்ட சர்வதேச விமர்சகர்களின் கவனத்தையும் மரியாதையையும் பெற்றார்.
  • டி.ஜெ.எஸ் ஜார்ஜ் 'M.S. Subbulakshmi: The Definitive Biography' என்ற நூலை வீணை தனம்மாள், பெங்களூர் நாகரத்தினம்மாள், நாட்டியமணி பாலசரஸ்வதி ஆகிய மூவருக்கும் சமர்ப்பித்தார். பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட இழிவிலிருந்து தங்கள் கலையின்மூலம் வெளியே வந்தவர்கள் என்றார் ஜார்ஜ்.
பாலசரஸ்வதி

விருதுகள்

  • 1955-ல் சங்கீத நாடக அகாதெமி விருது பெற்றார்
  • 1973-ல் மியூசிக் அகாதெமி சென்னை சங்கீத கலாநிதி விருது வழங்கியது
  • சென்னையில் உள்ள இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இவருக்கு சங்கீத கலாசிகாமணி விருது வழங்கியது.
  • 1975-ல் தமிழ் இசைச் சங்கம் சென்னை இசைப்பேரறிஞர் விருது வழங்கியது
  • 1981-ல் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது
  • பத்ம பூஷன் விருது
  • பத்ம விபூஷண் விருது

குறும்படம்

1976-ல் சத்யஜித் ரே பாலசரஸ்வதியை வைத்து ‘பாலா’ என்ற குறும்படத்தை இயக்கினார்.

மறைவு

தஞ்சாவூர் பாலசரஸ்வதி தன் அறுபத்தியாறு வயதில் பிப்ரவரி 9, 1984-ல் காலமானார்.

இவரைப்பற்றிய நூல்கள்

  • Balasaraswathi: Her life and Art - டக்ளஸ் எம்.நைட்
  • ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ - அரவிந்தன் மொழிபெயர்ப்பு (2017)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page