டோரதி கிருஷ்ணமூர்த்தி
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியையான டோரதி கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: பிப்ரவரி 2, 1944), ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தியின் மனைவி. கணவருடன் இணைந்து ஞானாலயா ஆய்வு நூலகத்தை நிறுவியவர். எழுத்தாளர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். தாகூரின் படைப்புகள் சிலவற்றைத் தமிழில் தந்தவர்.
பிறப்பு, கல்வி
டோரதி, திருச்சியில், பிப்ரவரி 2, 1944 அன்று, எஸ்.ஜே.சாமிக்கண்ணு-தெரசா ராஜம் இணையருக்கு மகளாகப் பிறந்தார். திருச்சியில் உயர் கல்வியை முடித்த இவர், திருச்சி ஹோலி க்ராஸ் கல்லூரியில், பட்டப்படிப்பை முடித்தார்.
தனி வாழ்க்கை
படிப்பை முடித்ததும் காட்பாடியிலுள்ள ஆக்ஸிலியம் கல்லூரியில் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின் திருச்சி மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளியில் தாவரவியல் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். உடன் பணியாற்றிய ஆசிரியர் பா. கிருஷ்ணமூர்த்தியின் தமிழார்வமும், இலக்கியச் செயல்பாடுகளும் இவரைக் கவர்ந்தன. இருவரும் நண்பர்களாயினர். இருவரும் இலக்கியப் பணிகளில் இணைந்து பயணித்தனர்.
ஒரு சமயம் காரைக்குடியில் 'ஸ்டார் பப்ளிஷிங்’ மற்றும் 'ப்ராக்ரசிவ்' பதிப்பகத்தின் உரிமையாளரான வி.ஆர்.எம். செட்டியாரை இருவரும் சந்தித்தனர். வி.ஆர்.எம். செட்டியார், தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். தாகூரின் சொற்பொழிவுகளை, கவிதைகளைத் தமிழாக்கம் செய்தவர். சந்திப்பின் முடிவில், வி.ஆர்.எம். செட்டியார் 'Crescent Moon’ என்னும் தாகூரின் நூல் ஒன்றைப் பரிசாக டோரதிக்கு அளித்தார்.
தாகூரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட டோரதி, அன்றைய இரவே அதனைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். மறுநாள் பா.கிருஷ்ணமூர்த்தியிடம் அதனைக் கையளித்தார். அதைக் கண்டு வியந்த கிருஷ்ணமூர்த்தி, அந்த மொழி பெயர்ப்பினை, வி.ஆர்.எம். செட்டியாருக்கு அனுப்பி வைத்தார். சில வாரங்களிலேயே, அந்த மொழிபெயர்ப்பு அச்சாகி, 'வளர் பிறை' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. நன்றி கூறத் தன்னை வந்து சந்தித்த டோரதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியை வாழ்க்கையிலும் இணையச் சொன்னார், வி.ஆர்.எம். செட்டியார். கிறிஸ்தவரான டோரதி சாமிக்கண்ணுவுக்கும், இந்துவான கிருஷ்ணமூர்த்திக்கும், 1971-ல், மதுரையில் திருமணம் நடைபெற்றது.
இலக்கிய வாழ்க்கை
டோரதிக்கும் இலக்கியம் மற்றும் புத்தகச் சேகரிப்பில் ஆர்வம் இருந்ததால், கணவர் கிருஷ்ணமூர்த்தியின் புத்தகச் சேகரிப்பு முயற்சிகளுக்கு அவரும் உறுதுணையாக இருந்தார். அவர்களது ஊதியப் பணம் பெரும்பாலும் புத்தகச்சேகரிப்பிற்காகவே செலவிடப்பட்டது. மூத்த மகளான நிவேதிதா பாரதியும், இளைய மகளான ஞானதீபமும் பெற்றோரின் புத்தகச் சேகரிப்புப் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். 'ஞானாலயா ஆய்வு நூலகம்’ உருவானது
தனது ஓய்வு நேரத்தில் மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டார் டோரதி. தாகூரின் நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். பணி ஓய்விற்குப் பின் முழுக்க முழுக்க நூலகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் டோரதி. கபீர் தாஸ் பாடல்கள், மார்க் அரேலியஸின் மெடிடேஷன் போன்றவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
விருதுகள்
- அன்புப் பாலம் அமைப்பு வழங்கிய இலட்சிய தம்பதியர் விருது (கணவர் பா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து)
- ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் வழங்கிய பாரதி இலக்கியச் செல்வர் விருது (கணவர் பா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து)
- நல்லற நன்மணிகள் விருது (கணவர் பா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து)
நூல்கள்
- வளர்பிறை (ஆங்கில மூலம்: Crescent Moon by Rabindranath Tagore)
- தாகூரின் கவிதை மலர்கள் (ஆங்கில மூலம்: Poetry and criticism by Rabindranath Tagore)
- பரிணாமத்தின் கதை (ஆங்கில மூலம்: Life on Earth by David Attenborough)
- சிந்தனைப் பறவைகள் (ஆங்கில மூலம்: Stray Birds by Rabindranath Tagore)
- கபீர்தாஸ் பாடல்கள் (ஆங்கில மூலம்: Songs Of Kabir: Translated By Rabindranath Tagore)
- ஆத்மதாகம் (கிரேக்க மூலம்: Meditations by Marcus Aurelius)
- சலனம் (ஆங்கில மூலம்: The Fugitive by Rabindranath Tagore)
உசாத்துணை
- ஞானாலயா ஆய்வு நூலகம்
- தினமணி இதழ் கட்டுரை
- தென்றல் இதழ் நேர்காணல்
- புத்தகக் காதலால் இணைந்த புதுக்கோட்டை தம்பதிகள்
- இலக்கியப் பீடம், பிப்ரவரி 2011 இதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Apr-2023, 08:14:54 IST