ஜோசப் வியாட்
ஜோசப் வியாட் (Joseph Light Wyatt ) (1841-1936 ) கிறிஸ்தவ மதப்பணியாளர். ராபர்ட் கால்டுவெல்லின் மகள் இசபெல்லாவின் கணவர். இடையன்குடியில் கால்டுவெல்லின் மதப்பணிகளை முன்னெடுத்தவர்.
பிறப்பு, கல்வி
ஜோசப் வியாட் இங்கிலாந்தில் பிஷப்ஸ்வொர்த் என்னும் ஊரில் ஜோசப் வியாட் (சீனியர்) -மார்த்தா வியாட் இணையருக்கு 1841-ல் பிறந்தார். கிங்ஸ்ஹெட் லேன் என்னும் ஊரில் அவர்களுக்கு 65 ஏக்கர் பண்ணை ஒன்று இருந்தது. செயிண்ட் அகஸ்டின் காலேஜ் காண்டர்பரியில் கல்வி பயின்றார்.
தனிவாழ்க்கை
1867-ல் இடையன்குடிக்கு வந்த வியாட் கால்டுவெல்லின் மூத்தமகள் இசபெல்லா கால்டுவெல் லை 1868-ல் மணந்தார். அவர்களுக்கு மூன்று மகள்கள். மேபல், லிலியன், பௌலின் . இரண்டு மகன்கள் ஏர்னஸ்ட் , ஃப்ராங்க்.
1895-ல் வியாட் எஸ்.பி.ஜி அமைப்பில் இருந்து ராஜினாமா செய்தார். 1899-ல் அவர் லண்டனில் பிராண்டன் (சஃபோக்) என்னும் ஊரில் ஆலயப்பணியாளராக 18 ஆண்டுகள் பணியாற்றினார்
மதப்பணி
வியாட் எஸ்.பி.ஜி (சொசைட்டி ஃபர் பிராபகேஷன் ஆஃப் காஸ்பல்) அமைப்பின் உறுப்பினராக 1867-ல் தன் 26-வது வயதில் சேர்ந்தார். இந்தியாவுக்கு மதப்பணிக்காக அனுப்பப்பட்ட அவர் கால்டுவெல் பணியாற்றிக்கொண்டிருந்த இடையன்குடி கிராமத்துக்கு வந்தார். இடையன்குடியில் பத்தாண்டுகள் வாழ்ந்தார். 1873-1875, காலகட்டத்தில் கால்டுவெல் லண்டனில் இருந்தபோது வியாட் மதப்பணிகளின் முழுப்பொறுப்பை ஏற்று நடத்தினார்.
1894-ல், கால்டுவெல்லின் மரணத்துக்குப்பின் கால்டுவெல்லின் நினைவலைகளை தொகுத்து நூலாக்கினார். Reminiscences என்னும் அந்நூலே கால்டுவெல் பற்றிய பல ஆய்வுகளுக்கு அடிப்படை.
வியாட் 1877 -1878 ஆண்டுகளில் லண்டனில் இருந்தார். கால்டுவெல் அவரை 1879-ல் அவர் தொடங்கிய கால்டுவெல் கல்லூரியின் முதல்வராக நியமித்தார் அதை எம்.டி.சி அமைப்பு ஏற்காமல் ஷாரோக் என்பவரை முதல்வராக்கியது. வியாட் எம்.டி.சி அமைப்பால் திருச்சிக்கு அனுப்பப்பட்டார்.
வியாட் திருச்சிக்கு வருகையில் அங்கே எம்.டி.சி அமைப்பின் செயல்பாடுகள் முடங்கியிருந்தன. 32 கிராமங்களில் மட்டுமே மதப்பணி நடைபெற்றது. வியார் அப்பணியை முன்னெடுத்தார்
உறையூரில் 1895-ல் ஆல்செயிண்ட்ஸ் தேவாலயத்தை வியாட் பொதுநிதி சேகரித்து கட்டினார்.
கல்விப்பணி
வியாட் இடையன்குடி பள்ளிகளை மேம்படுத்தினார். திருச்சியில் 1864-ல் தொடங்கப்பட்ட மிஷன் பள்ளியை கல்லூரியாக ஆக்கினார்.
வியாட் உறையூறை மையமாகக்கொண்டு தன் பணிகளை ஆற்றினார். பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளியையும் லேஸ் உருவாக்கும் தொழிலமைப்பையும் உருவாக்கினார்கள். ஆசிரியர்பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டது. உறையூரில் தமிழகத்தின் முதல் எஸ்.பி.ஜி ஊழியர் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. ஆனால் இம்முயற்சிகளை எஸ்.பி.ஜி அமைப்பு முன்னெடுக்கவில்லை.
வியாட் 1895 முதல் 1899 வரை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அமைப்புடன் பூசல்கள்
வியாட் திருச்சியிலும் உறையூரிலும் மதப்பணிகளை முன்னெடுக்கவில்லை என்றும், அவருடைய கல்விநிறுவனங்களில் பிராமணர்களே அதிகமும் பயில்கிறார்கள் என்றும் எஸ்.பி.ஜி அமைப்பு கருதியது. பிராமணர்கள் தங்களுக்கான கல்விநிறுவனங்களை தொடங்கிவிட்டனர், ஆகவே எஸ்.பி.ஜி தொடங்கிய கல்விநிறுவனங்கள் தேவையில்லை என அவற்றை மூடியது. வியாட் அதை எதிர்த்தார். மேலும் வியாட்டின் பிள்ளைகள் லண்டனில் வளர்ந்தனர். அவர்களின் கல்வி, திருமணம் ஆகியவற்றில் ஈடுபடும்பொருட்டு அவர் விடுமுறை கோரினார். அது அளிக்கப்படவில்லை. ஆகவே வியாட் 1895-ல் ராஜினாமா செய்தார்.
மறைவு
வியாட் 1936-ல் தன் 95-வது வயதில் பிரிட்டனில் பிராண்டன் (சஃபோக்) என்னும் ஊரில் மறைந்தார்.
வரலாற்று இடம்
கால்டுவெல்லின் வழித்தோன்றலாகவும் முன்னோடி கல்விப்பணியாளராகவும் வியாட் கருதப்படுகிறார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jan-2025, 00:43:31 IST
