ஜே.எம். சாலி
ஜே.எம். சாலி (ஜமாலூதீன் முகம்மது சாலி; பிறப்பு: ஏப்ரல் 10, 1939) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர். சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளிதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். சென்னையில் இதழாளராக, பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திலும், சிங்கப்பூர் தொலைக்காட்சிக் கழகத்திலும் பணிபுரிந்தார். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தார். இஸ்லாமிய சமயம் சார்ந்து பல நூல்களை எழுதினார். தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
ஜமாலூதீன் முகம்மது சாலி என்னும் ஜே.எம். சாலி, ஏப்ரல் 10, 1939 அன்று, தஞ்சை மாவட்டத்திலுள்ள இரவாஞ்சேரியில் பிறந்தார். இரவாஞ்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்தார். குடந்தை அரசினர் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஜே.எம். சாலி, தனது 25-ம் வயதில் சிங்கப்பூருக்குச் சென்றார். அங்கு இதழாளராகப் பணியாற்றினார். பின் சென்னைக்கு வந்து இதழாளராகச் செயல்பட்டார். சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தில் ஒலிபரப்பு இதழாளராகப் (Broadcast Journalist) பணிபுரிந்தார். சிங்கப்பூர் தொலைக்காட்சிக் கழகத்தில் செய்தி ஆசிரியராகப் (News Editor) பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பணி ஒய்வுக்குப் பின் சிங்கப்பூர், சிவில் சர்வீஸ் கல்லூரியில், பகுதி நேர மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார். சிங்கப்பூர், ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகத்தில் பகுதி நேர மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
ஜே.எம். சாலி, இளம் வயதில் சிறார் நூல்களை வாசித்துத் தனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார். சாலியின் முதல் சிறுகதை, ஆர்வி ஆசிரியராக இருந்த கண்ணன் இதழில், 1955-ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து அவ்விதழில் கதைகள், துணுக்குகள், பாடல்களை எழுதினார். ஆனந்த விகடன், தினமணிக் கதிர், கலைமகள், முஸ்லிம் முரசு, உமா, இதயம் பேசுகிறது போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். மணியன் இதழில் புதினங்கள் எழுதினார். இஸ்லாமிய சமயம் சார்ந்து பல நூல்களை எழுதினார். சாலியின் படைப்புகள் ஹிந்தி, சிங்களம் போன்ற பல மொழிகளில் பெயர்க்கப்பட்டன.
ஜே.எம். சாலி, நாவல், கவிதை, கட்டுரை என 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 80-க்கும் மேற்பட்ட நாடகங்கள், 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தார்.
இதழியல்
ஜே.எம். சாலி, 1964 முதல் 1971 வரை சிங்கப்பூரில், தமிழவேள் கோ. சாரங்கபாணி நடத்தி வந்த தமிழ் முரசு நாளிதழில், துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1971 முதல் 1981 வரை ஆனந்தவிகடன் இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1981-1982 வரை மணியன் நடத்திய ‘மயன்’ இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1983 முதல் மீண்டும் தமிழ் முரசு நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
பொறுப்புகள்
- சிங்கப்பூர் இஸ்லாமிய சமயப் பேரவையின் உறுப்பினர்
- இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளர்.
விருதுகள்
- 1959-ல், கண்ணன் சிறுவர் இதழ் நடத்திய நாவல் போட்டியில் பரிசு - ‘இரு கண்கள்’ சிறார் நாவலுக்காக.
- 1962-ல், குழந்தை எழுத்தாளர் சங்கம் வழங்கிய சிறந்த நாவலுக்கான விருது - ’தங்கக் கிளிகள்’ நாவலுக்காக
- தமிழக அரசின் 1978-ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான பரிசு - ‘கனாக் கண்டேன் தோழி’ நாவலுக்காக.
- தமிழக அரசின் 1995- ஆம் ஆண்டின் சிறந்த சிறார் நூலுக்கான பரிசு - ‘அறிவியல் முன்னோடிகள்’ கட்டுரை நூலுக்காக.
- சிங்கப்பூரின் தேசிய புத்தக மேம்பாட்டுக் கவுன்சிலின் புத்தக விருது - ’நோன்பு’ சிறுகதைத் தொகுப்புக்காக. (1996)
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய ‘தமிழவேள்’ விருது.
- கவி மாலை கவிஞர் சங்கம் வழங்கிய கவி மாலை விருது - 2005
- சென்னை கம்பன் கழக விருது - 2008
- வாழ்நாள் இலக்கியப் பங்களிப்புக்காக சிங்கப்பூர் நாட்டின் கலாசார விருது மற்றும் பதக்கம் - 2012
- தாய்லாந்து அரசு, ஆசிய நாட்டின் எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கும் தென்கிழக்கு நாட்டின் ஆசியான் இலக்கிய விருது - 2015 (South East Asia Write Award)
இலக்கிய இடம்
சாலியின் எழுத்துக்கள் பொது வாசிப்புக்குரியவை என்றாலும், இலக்கிய நுட்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தம் படைப்புகளில் வெளிப்படுத்தினார். தாம் உணர்த்த எண்ணும் கருத்தை இயல்பாகக் கதையோட்டத்தில் இழையோடவிடும் உத்தியைக் கையாண்டார். இஸ்லாமிய சமயம் சார்ந்த இவரது படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை.
“தமிழக முஸ்லிம் மக்களின் சமூக கலாசார வாழ்வியல் தன்மைகளை வெகு இயல்பாக சித்தரிக்கும் போக்கு சாலியிடம் தெளிவாக இருந்தது. சமூக மாற்றங்களின் அடியாக முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுவரும் வாழ்வியல் மோதல்கள், முரண்கள், இஸ்லாமியச் சமயப் பழக்க வழக்கத்தின் சாயல்களை ஊடறுத்து வெளிப்படும் கதைக் களங்களில் எதிரொலித்தது. தமிழில் முஸ்லிம் சமுகத்தின் வாழ்புலம், பண்பாடு வழக்காறுகள் உரியமுறையில் கருத்துத் தெளிவுடன் இலக்கியக் கலையாக்கமாக வெளிப்படும் மரபின் தொடக்கமாக ஜே.எம். சாலி இருந்திருக்கிறார்” என்று மதிப்பிடுகிறார், விமர்சகர் தெ. மதுசூதனன்.
நூல்கள்
சிறார் நூல்கள்
- இருகண்கள்
- தங்கக் கிளிகள்
- சிறுவர்க்கான சிறந்த சிறுகதைகள்
- ஜே.எம். சாலியின் சிறுவர் கதைகள்
சிறுகதைத் தொகுப்புகள்
- சாயல்
- விலங்கு
- நோன்பு
- அந்த நாள்
- அலைகள் பேசுகின்றன
- சொல்லித் தெரிவதில்லை
- ஜே.எம். சாலி சிறுகதைகள்
- தமிழக முஸ்லிம் சிறுகதைகள்
புதினங்கள்
- கனாக் கண்டேன் தோழி
- வெள்ளைக் கோடுகள்
- ஆயுள் தண்டனை
- ஒரு கிளைப் பறவைகள்
- பொன் மலர்
- மூன்றாவது கணை
- மஞ்சள் ரோஜா
- கவிதை தேடும் ராகம்
- தரிசனம்
கட்டுரை நூல்கள்
- உலக வீரன் அலி
- அலியின் வெற்றிக்கதை
- புரூஸ் லீ வாழ்க்கை வரலாறு
- புருஸ்ஸ்லீயின் தற்காப்புக் கலை
- புருஸ்ஸ்லீயின் புரட்சிப் பாடங்கள்
- இதுதான் குங்ஃபூ
- குத்துசண்டை வீரர் முகம்மது அலி வாழ்க்கை வரலாறு
- உலகக் குத்துச் சண்டை வீரர்கள்
- இடி அமீன் வாழ்க்கை வரலாறு
- கால்பந்து மன்னன் பீலே வாழ்க்கை வரலாறு
- யாசர் அராஃபத் வாழ்க்கை வரலாறு
- கண்ணியமிகு காயிதேமில்லத்
- புரட்சித் தலைவரின் பொன் மொழிகள்
- இயற்கை மருத்துவம்
- அண்ணாதுரையின் உரைகள் (தொகுப்பு)
- முத்திரை நினைவுகள்
- லீ குவான் யூ
- செந்தமிழ் திருநாடு சிங்கப்பூர்
இஸ்லாமிய சமய நூல்கள்
- இஸ்லாமியத் தமிழ்க் காவியங்கள்
- கண்ணியமிக்க காயிதே மில்லத்
- அல்லாஹ்வின் திருநாமங்கள்
- தமிழகத்து தர்காக்கள்
- இஸ்லாமிய இலக்கிய இதழ் முன்னோடிகள்
- இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம் (ஸல்)
மொழிபெயர்ப்பு நூல்கள்
- One Year of Independence (Published by the Ministry of Culture, Singapore)
- Once Upon A Time – Buddha History (For New Delhi’s National Book Trust)
உசாத்துணை
- Writer J.M.Sali Profile
- எழுத்தாளர் ஜே.எம். சாலி: தெ. மதுசூதனன்: தென்றல் இதழ் கட்டுரை
- ஜே.எம். சாலி படைப்புகள்: இந்து தமிழ் திசை
- ஜே.எம். சாலி நாவல் விமர்சனம்
- ஜே.எம். சாலி: பதிவுகள் தளம் கட்டுரை
- ஜே.எம். சாலி நூல்கள்: காமன்ஃபோல்க்ஸ் தளம்
✅Finalised Page