under review

சேர்.பொன். இராமநாதன்

From Tamil Wiki
சேர்.பொன். இராமநாதன்
சேர்.பொன். இராமநாதன்

சேர்.பொன். இராமநாதன் (பொன்னம்பலம் இராமநாதன்) (ஏப்ரல் 16, 1851 – நவம்பர் 26, 1930) ஈழத்து சைவ அறிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், அரசியல்வாதி, சமூகசேவகர். இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

சேர்.பொன். இராமநாதன் இலங்கை யாழ்ப்பாணம், மானிப்பாயைச் ராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியார், செல்லாச்சி (சேர் முத்துகுமாரசுவாமியின் சகோதரி) இணையருக்கு இரண்டாவது மகனாக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர்.பொன். அருணாசலம் ஆகியோர் உடன்பிறந்தவர்கள். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13-ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார்.

தனி வாழ்க்கை

சேர்.பொன். இராமநாதன் சேர்றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873-ல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906-ல், பணி ஓய்வு பெற்றார்.

1915 கலவரத்தின் போதும் அதன் பின்னர் இலங்கையர்களுக்கு நீதி கேட்டும் இலங்கையில் ஆங்கிலேயரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்றார். 1883-ல் நடந்த கொட்டாஞ்சேனைக் கலவரத்தைத் தொடர்ந்து 1885-ல் அரசாங்க சபையில் வெசாக் நாளை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு அவர் உரையாற்றி, அந்த நாளை விடுமுறை நாளாக்கித் தந்தார். பௌத்த விகாரைகள் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் முக்கியப் பங்காற்றினார்.

அரசியல் வாழ்க்கை

சேர்.பொன். இராமநாதன் 1879-ல் இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911-ல் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தேர்வு செய்யப்பட்டார்.

சமூக சேவை

இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவினார். இணுவில் கிராமத்தில் 25 ஏக்கர் காணியை வாங்கி பெண்களுக்கென இராமநாதன் கல்லூரியை 1913 -ல் நிறுவினார். உடுவில்லில் அமைந்த இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970-களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.

சமய சேவை

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி கற்றார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905–1906-ல் அமெரிக்கா சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார். 1906-ல் சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். கொழும்பு கொச்சிக்கடையில் பொன்னம்பலவாணேசர் கோயில் உள்ள இடத்தில் புதிய கோயிலை 1907-ல் கருங்கற் பணியாக ஆரம்பித்து நவம்பர் 21, 1912-ல் குடமுழுக்கு செய்தார். யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா ஆலயத்தை அமைத்தார். 1923-ல் யாழ்ப்பாணத்தில் சைவ வித்தியா விருத்திச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள், கட்டுரைகள் எழுதினார். பகவத்கீதை தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும், திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும், ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம் போன்ற நூல்கள் உட்பட பல நூல்களை எழுதினார்.

விவாதங்கள்

இலங்கையில் பெண்கள் வாக்குரிமை வழங்குவதை சேர்.பொன். இராமநாதன் எதிர்த்தார். இது தொடர்பாக இவர் கடுமையாக விமர்சனத்திற்கு உட்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது எனவும், படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தேசவழமைச் சட்டத்தை முன்னிறுத்தி டொனமூர் ஆணைக் குழு முன் வாதிட்டார்.

சிறப்புகள்

  • சேர்.பொன். இராமநாதனின் உருவச் சிலை கொழும்பில் அமைக்கப்பட்டது
  • இவர் வாழ்ந்த இடமான இராமநாதன் கல்லூரி முன்றலிலும் முழுஉருவச்சிலை நிறுவப்பட்டது.
  • 1938-1940 காலப்பகுதியில் இவரது சமாதியடைந்த இடத்தில் இராமநாதேஸ்வரன் கோயில் இந்திய சிற்பக்கலை மரபினை ஒட்டி இந்தியக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு கருங்கற்களால் கட்டப்பட்டது.

விருதுகள்

  • 1921-ல் பிரிட்டன் அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  • அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலைநிறுவப்பட்டது.

மறைவு

சேர்.பொன். இராமநாதன் நவம்பர் 26, 1930-ல் காலமானார்.

இவரைப்பற்றிய நூல்கள்

  • A Criticism of Mr. Ramanathan's ethnology of the moors of the ceylon (Abdul azeez)

நூல் பட்டியல்

Ethnology of the moors of the ceylon
  • பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914)
  • திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919)
  • ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம்
  • ஆத்திசூடி மந்திரவிளக்கம்
  • செந்தமிழ் இலக்கணம்
ஆங்கிலம்
  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898)
  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902)
  • The Culture of the Soul Among Western Nations (1906)
  • The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905)
  • On Faith or Love of God (1897)
  • The Gospel of Jesus According to St. Matthew, as Interpreted to R. L. Harrison by the Light of the * * Godly Experience of Sri Paránanda
  • The Judgments of the Supreme Court of Judicature: And of the High Court of Appeal of the Island of Ceylon, Delivered Between the Years 1820-1833
  • Riots and martial law in Ceylon, 1915
  • Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon...: 1860, 1861 and 1862. 1880
  • The Spirit of the East Contrasted with the Spirit of the West: Being a Lecture Delivered ... Before the Brooklyn Institute of Arts and Sciences at Its Open Meeting of the Season of 1905-6
  • Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon: During the Years 1860, 1861 and 1862: with an Appendix Containing Cases Decided During that Period by the Judicial Committee of the Privy Council on Appeal from the Supreme Court of Ceylon
  • On the Ethnology of the "Moors" of Ceylon

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page