செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் சங்ககாலப் புலவர். இவர் எழுதிய ஐந்து பாடல்கள் சங்க நூல் தொகுப்பில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
செல்லூரில் செல்லூர் கிழாரின் மகனாகப் பிறந்தார். கோசர் வாழும் நெல்லூருக்கு அருகே செல்லூர் உள்ளது.
இலக்கிய வாழ்க்கை
அகநானூறு(250) குறுந்தொகை( 218, 358, 363), நற்றிணை(30) என ஐந்து அகத்திணைப் பாடல்களை இவர் பாடினார். தலைவன் பிரிந்து சென்ற நாளை எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்கத் தலைவி காலையில் எழுந்ததும் சுவரில் ஒரு கோடு போட்டு நாள்தோறும் அதனை எண்ணிப் பார்க்கும் ’ஆய்கோடு’ பற்றிய வழக்கத்தை இவர் பாடல்களின் வழி அறியலாம்.
பாடல் நடை
- அகநானூறு 250
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட,
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய்,
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்குலானே!
- குறுந்தொகை: 218
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின்
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.
- நற்றிணை: 30
கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்,
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-
கால் ஏமுற்ற பைதரு காலை,
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,
பலர் கொள் பலகை போல-
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- தமிழ்ச்சுரங்கம்-நற்றிணை 30
- தமிழ்ச்சுரங்கம்-குறுந்தொகை-218
- தமிழ்ச்சுரங்கம் அகநானூறு-150
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:16 IST