under review

சு. சண்முகசுந்தரம்

From Tamil Wiki
சண்முகசுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சண்முகசுந்தரம் (பெயர் பட்டியல்)
சு. சண்முகசுந்தரம், (நன்றி தென்றல்)

சு. சண்முகசுந்தரம், (சுந்தரபாண்டியன், காவ்யா சண்முகசுந்தரம்)(பிறப்பு: டிசம்பர் 30 ,1949 ) தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாசிரியர். 'காவ்யா' பதிப்பகத்தை நிறுவியவர்.

பிறப்பு, கல்வி

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

சு. சண்முகசுந்தரம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கால்கரை எனும் கிராமத்தில் டிசம்பர் 30, 1949 அன்று பிறந்தார். பெற்றோர் வெ.சுடலைமுத்துத் தேவர், இசக்கியம்மாள். இயற்பெயர் சுந்தரபாண்டியன். சு. சண்முகசுந்தரம் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-ல் 'திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சு. சண்முகசுந்தரம் 1978 முதல் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 2006-ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு, செம்மொழி நிறுவனம் ஆகியவற்றில் நான்கு ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டு நிறைவு செய்தார்.

சு. சண்முகசுந்தரத்தின் மனைவி முத்துலெட்சுமி. இவர்களுக்கு முத்துக்குமார் என்ற மகனும் காவ்யா என்ற மகளும் உள்ளனர். சு. சண்முகசுந்தரம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சு. சண்முகசுந்தரம், எழுதிய கவிதைகள் 1972-ம் ஆண்டு 'கதம்பம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டன.

சு. சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல் குறித்த ஆய்வு 'நாட்டுப்புற இயல்' என்ற தலைப்பில் 1975-ல் ஆண்டு மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. இலக்கிய மாணவர் வெளியீடு அமைப்பின் துணையுடன், 1976-ல், 'நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு' என்ற நூலை வெளியிட்டார்.

தொடர்ந்து நாட்டுப்புற இயல் குறித்த பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். 1981-ல், தனது மகளின் பெயரில் 'காவ்யா' பதிப்பகத்தை ஆரம்பித்தார். சு. சண்முகசுந்தரத்தின் முதல் நாவல், 'கன்னடியர் மகள்' 1982-ல், காவ்யா பதிப்பகம் மூலம் வெளியானது. தொடர்ந்து 'திப்புசுல்தான்', 'சாணக்கியன்' போன்ற நாவல்களை எழுதினார். சுந்தரபாண்டியன் என்ற பேரில் தொடக்கத்தில் தன் நாவல்களை வெளியிட்டார்.

சு. சண்முகசுந்தரம், 'களவு' என்ற பெயரில் தனது முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். தனது சிறுகதைகளை பத்திரிகைகளில் வெளியிடாமல் நேரடியாகவே புத்தகமாக்கி வெளியிட்டார். முதல் நாடக நூல் 'அக்னி' 1998-ல் வெளியானது. சிறுகதை, நாவல், நாடகம் மட்டுமல்லாது ஆய்வு சார்ந்து, சமூகம் சார்ந்து பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டார்.

சு. சண்முகசுந்தரத்தின் ஆய்வு நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சாகித்ய அகாதெமி போன்றவை வெளியிட்டுள்ளன. சு. சண்முகசுந்தரத்தின் படைப்புகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், வங்காளம் எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இதழியல்

சு.சண்முகசுந்தரம் 'படிகள்', 'இங்கே இன்று', 'வித்யாசம்', 'தன்னனானே' போன்ற சிற்றிதழ்களைத் தொடங்கி நடத்தினார். 'காவ்யா என்ற பெயரில் கலை இலக்கிய பண்பாட்டுக்கான காலாண்டிதழை ஜனவரி 2012-ல் தொடங்கி நடத்தி வருகிறார்

ஆய்வுப் பணி

சு. சண்முகசுந்தரம், செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராக 'நாட்டுப்புற அரங்கியல்' (2006 - 2008), 'காலந்தோறும் கண்ணகி கதைகள்'(2008-2009) என்ற தலைப்புகளில் சிற்றாய்வும், 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' (2008 -2011) என்ற தலைப்பில் பேராய்வும் செய்தார்.

பதிப்புத்துறை

காவ்யா

சு. சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் 1981-ம் ஆண்டு நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். சு.சண்முகசுந்தரம் காவ்யா பதிப்பகம் சார்பில் இதுவரை 900 நூல்களுக்கும்மேல் பதிப்பித்துள்ளார். .

இலக்கிய இடம்

சு.சண்முகசுந்தரம் நாட்டாரியல் ஆய்வாளர், இலக்கியப்பதிப்பாளர், சிற்றிதழாளர் என்னும் நிலைகளில் பங்களிப்பாற்றியவர். நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்:
  • கதம்பம்
  • பகல் கனவுகள்
  • மேலும் பகல் கனவுகள்
சிறுகதைத் தொகுப்புகள்:
  • அம்மா
  • களவு
  • சாபம்
  • சுந்தரபாண்டியன் சிறுகதைகள் (சிறுகதைகளின் முழுத் தொகுப்பு)
  • வரம்
நாவல்கள்;
  • அந்தி
  • ஆராரோ
  • கன்னடியர் மகள்
  • சாணக்கியன்
  • திப்புசுல்தான்
நாடகம்:
  • அக்னி
தொகுத்த மற்றும் பதிப்பித்த நூல்கள்
  • அகத்தாறும் புறத்தாறும்
  • அண்ணாதிரை
  • இலக்கிய விசாரங்கள்
  • இலக்கியமும் கோட்பாடுகளும்
  • இலக்குவம்
  • இராஜ இராஜ சோழன்
  • ஐந்து கதைப் பாடல்கள்
  • கதைப்பாடல்கள்
  • கண்ணகிக் கதைகள்
  • கட்டபொம்மு கதைப்பாடல்
  • கம்பன்கலை அ.ச.ஞா
  • கநாசூயம்
  • கனவு
  • காலந்தோறும் கண்ணகிக் கதைகள்
  • சங்கத் தமிழ்க் களஞ்சியம்
  • சங்கத்தமிழ்
  • சங்க இலக்கிய வரலாறு
  • சமய இலக்கிய வரலாறு
  • சி.கனக சபாபதி கட்டுரைகள்
  • சுடலைமாடன் வழிபாடு
  • செவ்வியல் காலத் தமிழ்
  • சென்னைச் சிறுகதைகள்
  • தமிழ் பழமொழிகள்
  • தமிழ் நாடகச் சரித்திரம்
  • தமிழவனோடு ஓர் உரையாடல்
  • திராவிட தெய்வம் கண்ணகி
  • திருத்தொண்டர் காப்பியத்திறன்
  • நாட்டுப்புறவியல்
  • நாமக்கல் தெய்வங்கள்
  • நான்கு கதை பாடல்கள்
  • நீலபத்மநாபம்
  • நெல்லைச் சிறுகதைகள்
  • நெல்லைப் பெண் தெய்வங்கள்
  • நெல்லை மறவர்
  • பகதூர் வெள்ளை
  • பசும்பொன் கருவூலம்
  • பசும்பொன் சரித்திரம்
  • பழமலய் கவிதைகள்
  • பழமொழிக்கதைகள்
  • பழையனூர் நீலி கதைகள்
  • பல்கலைத் தமிழ்
  • பாதர் வெள்ளை
  • பாரதிராஜா
  • பாவேந்தரின் தமிழ் போராட்டங்கள்
  • பிணம் தின்னும் தேசம்
  • பி.யூ.சின்னப்பா
  • பெங்களூர் சிறுகதைகள்
  • பேராசிரியர் ந. சஞ்சீவி
  • மதுரைவீரன் கதை
  • முக்குலத்தோர் சரித்திரம்
  • முருகன் வழிபாடு
  • வள்ளிக்கண்ணன் நாவல்கள்
  • வள்ளியூர் வரலாறு
  • வள்ளுவர்கள்
  • வல்லிக்கண்ணன் கட்டுரைகள்
  • வைரமுத்து வரை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Aug-2023, 09:46:31 IST