under review

சுமந்திரன் கதை (நாட்டார் கதை)

From Tamil Wiki

சுமந்திரன் கதை : தமிழகத்தின் நாட்டார் கதைகளில் ஒன்று. வில்லுப்பாட்டு, தெருக்கூத்து ஆகியவற்றில் நடிக்கப்படுகிறது. இராமன் ஆண்ட அயோத்தி நாட்டின் மதியமைச்சராக இருந்தவர் சுமந்திரன். சுமந்திரனின் இறப்பை ஒட்டி நடக்கும் நாட்டார் கதை இது. சுமந்திரன் தசரதர் காலம் முதலே அயோத்தியின் மதியமைச்சராகப் பணியாற்றியவர். இராமனின் மகன் லவன் ஆட்சி பொறுப்பில் இருந்த போது சுமந்திரனால் லவனுக்கும் எமலோக கிங்கரர்களுக்கும் இடையே நடந்த போரைப் பற்றிச் சொல்லும் கதை.

கதை

இராமன் இலங்கையில் இராவணனுடனான போர் முடிந்து அயோத்தி திரும்பி வருடங்கள் பல கடந்திருந்தன. இராமன், இலக்குவன் வயதானவர்களாக ஆயினர். இராமனின் மகன் லவன் ஆட்சி பொறுப்பில் இருந்தான்.

ஒரு நாள் இராமனின் காவலன் அவனிடம் வந்தான், "பேரரசே நம் மதியமைச்சர் சுமந்திரர் இறந்துவிட்டார். அவருடைய மனைவிகள் உடன்கட்டை ஏறப் போகிறார்கள். உங்கள் உத்தரவிற்காகக் காத்திருக்கிறார்கள்" என்றான். இராமன் தன் அருகில் அமர்ந்திருந்த அரண்மனை ஜோதிடனிடம், "இதற்கு நேரம் பார்த்துக் கொடு" என்றான்.

ஜோதிடன் தன்னிடமிருந்து ஓலைச்சுவடியை எடுத்து சுமந்திரனின் ஜாதகத்தைக் கணித்தான். அதில் சுமந்திரன் இறப்பதற்கு பத்து நாள் மீதமிருப்பதை அறிந்தான். திரும்பி வந்து இராமனிடம், "சுமந்திரர் இறப்பதற்கு இன்னும் பத்து நாட்கள் பாக்கி இருக்கிறதே. அதற்கு முன் எமன் எப்படி இவர் உயிரைக் கொண்டு செல்லலாம். ஏதோ தவறு நடந்துவிட்டது." என்றான்.

இதைக் கேட்ட இராமன் கோபமுற்றான். "என் இராம ராஜ்யத்தில் இப்படி ஒரு தவறு நடக்கலாமா?" என்று சொல்லி வருத்தப்பட்டான்.

இதனைக் கேட்டு அருகில் அமர்ந்திருந்த மகன் லவன், "இந்த தவறை நான் மாற்றி விடுகிறேன்." எனச் சொல்லி தன் வில்லை எடுத்துக் கொண்டு கிளம்பினான். தன் படையை திரட்டி எமலோகம் சென்றான். எமனைப் பிடித்து வந்து இராமன் முன் நிறுத்தினான். இராமன், "இவனைக் கட்டிப் போடுங்கள். சுமந்திரனின் ஈமச்சடங்கு முடியட்டும் இவனை விசாரணை செய்யலாம்" என்றான்.

எமன் இராமனை வணங்கி, "பேரரசே சுமந்திரன் பிறந்த விதம் காரணமாகத்தான் அவன் உயிரைக் கொண்டு சென்றேன். காரணம் அறிந்த பின் என்னைக் கட்டிப் போடுங்கள்" என்றான். இராமன் அதற்கு இசைந்தான். "சரி, உன் தரப்பு நியாயத்தைச் சொல்" என்றான்.

எமன் இராமனிடம் சுமந்திரன் பிறந்த நிகழ்ச்சியை விவரித்தான். "சுமந்திரனின் தாய் பத்து மாதம் சுமந்து அவனைப் பெற்றாள். ஆனால் பத்தாவது மாதம் முடிந்ததும் இவன் பிறக்கவில்லை. பிரசவ நேரத்தில் இவன் கால் மட்டும் தான் வெளியே வந்தது. ஐந்து நாட்கள் கழித்து கைகள் வந்தன. பத்தாவது நாள் தான் தலை வந்தது. அப்போது பூமியில் உள்ள ஜோதிடர்கள் 'இவன் தலை வந்த நேரத்தையே பிறந்த நேரமாகக் கொள்ள வேண்டும்’ என்றனர். ஆனால் எமலோகக் கணக்கு வேறு. அங்கே இவன் கால் வந்த நேரமே பிறந்த நேரம் ஆயிற்று. இதனால் வந்த பிரச்சனை தான் இவன் இப்போது இறந்தது" என்றான்.

எமன் சொன்னது முழுவதையும் கேட்ட இராமன், "ஒரு குழந்தை முழு உருவமாய்த் தரையில் விழுவது தான் ஜனிப்பதன் அடையாளம். அதனால் எமனே! உன் லோகத்தின் கணக்கு தவறு. எனவே இந்த பத்து நாட்கள் சிறையில் இரு" என்றான். எமன் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த எமலோக கிங்கரர்கள் படையை திரட்டிக் கொண்டு அயோத்தி வர ஆயத்தமாயினர். அதனை அறிந்த லவன் அவர்களை எதிர்த்து போர் செய்ய தன் படைகளுடன் எமலோகம் சென்றான். இரு படைகளுக்கும் இடையே தீவிர போர் நிகழ்ந்தது. லவன் கிங்கரர்களைப் பிடித்து அடித்து உதைத்துக் கட்டி வைத்தான்.

இந்த செய்திகளைக் கேள்விப்பட்ட சூரியன் இராமனிடம் வந்தார். "மகனே இராமா. நீ என் வம்சமல்லவா (ரகுவம்சம்). வம்சங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண்டிருப்பதா. இது நல்லதல்ல. இனி உன் நாட்டில் யாரும் அற்ப ஆயுளில் இறக்க மாட்டார்கள் என வரம் அளிக்கிறேன். சுமந்திரன் பத்து நாட்கள் உயிர் வாழும் வரமும் தருகிறேன். எமனை விடுதலை செய்" என்றார்.

இராமனும், லவனும் சூரியனை வணங்கி எமனையும், கிங்கரர்களையும் விடுதலை செய்யக் கட்டளையிட்டனர்.

உசாத்துணை

  • இராமன் எத்தனை இராமனடி! - அ.கா. பெருமாள் (நன்றி - காலச்சுவடு)

வெளி இணைப்புகள்


✅Finalised Page