under review

சிறுமணவூர் முனிசாமி முதலியார்

From Tamil Wiki
சிறுமணவூர் முனிசாமி முதலியார்

சிறுமணவூர் முனிசாமி முதலியார், (19-ம் நூற்றாண்டு) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், ஜோதிடர், மருத்துவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 500-க்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். ஆயுர்வேத மருத்துவராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

சிறுமணவூர் முனிசாமி முதலியார், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செழுமணவை என்றும் சின்னமண்டலி என்றும் அழைக்கப்படும் சிறுமணவூரில் 1800-களின் பிற்பகுதியில் பிறந்தார். செழுமணவை நல்லண்ணப் பரதேசியிடம் இலக்கண, இலக்கியங்களையும் மருத்துவத்தையும் கற்றார். ஜோதிடத்தில் புலமை பெற்றார். தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்றார்

தனி வாழ்க்கை

சிறுமணவூர் முனிசாமி முதலியார் ஆயுர்வேத மருத்துவராகப் பணியாற்றினார். மணமானவர். சி.மு. கோவிந்தராஜ முதலியார். சி.மு. நடேச முதலியார் என இரு மகன்கள்.

தொழில்கள்

சிறுமணவூர் முனிசாமி முதலியார் தொழில் நிமித்தம் சென்னை புரசவாக்கத்திற்குக் குடி பெயர்ந்தார். பின்னர் பெரம்பூரில் வாழ்ந்தார். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 'சிறுமணவூர் முனிசாமி முதலியார் கம்பெனி' என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். அதன் மூலம் ஜெர்மன் வெள்ளி நகைகள் விநியோகம், வாசனைத் திரவிய விற்பனை, பொருட்களை வாங்கி விற்பது, புத்தக வெளியீடு, விற்பனை எனப் பல்வேறு தொழில்களை மேற்கொண்டார்.

சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

சிறுமணவூர் முனிசாமி முதலியார் மருத்துவம் தொடர்பான பல நூல்களை எழுதினார். ஆன்மிக நூல்களும் எழுதினார். சிந்து, அலங்காரம், கும்மி, புலம்பல், ஒப்பாரி, கீர்த்தனை, தூது, பதிகம் என பல நூல்களை எழுதினார். சாஸ்திர நூல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவர் எழுதிய நடராஜப் பத்து இன்றளவும் சிவ பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறது.

பதிப்பு

சிறுமணவூர் முனிசாமி முதலியார் தனது நூல்களை வெளியிடுவதற்காகவும், பிறரது நூல்களை அச்சிடுவதற்காகவும் சென்னை சூளையில் சிவகாமி விலாச அச்சுக்கூடத்தை நிறுவினார். அதன் மூலம் சிற்றிலக்கிய நூல்கள், மருத்துவ நூல்கள், மாந்த்ரீக நூல்கள், சாஸ்திர நூல்கள், குஜிலி இலக்கிய நூல்கள் என 500-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தார். அவற்றில் பெரும்பாலானவை 'கையேடுகள்' 'கைப்பிரதிகள்' என்று அழைக்கப்படும் வகையில் சிறு சிறு நூல்களாக அமைந்தன.

முருகப் பெருமானின் பக்தரான சிறுமணவூர் முனிசாமி முதலியார், சென்னை சூளையில், 'முருகக் கடவுள் தருமசபை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பக்தி இலக்கிய நூல்களை வெளியிட்டார்.

மறைவு

சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நூல்கள் 1888 முதல் 1941 வரை காணக்கிடைக்கின்றன. ஆகவே 1941-க்குப் பின்வரும் ஆண்டுகளில் அவர் காலமானதாக அறியப்படுகிறது.

ஆவணம்

ரோஜா முத்தையா நூலகத்தில் 400-க்கும் மேற்பட்ட சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதிய மற்றும் பதிப்பித்த நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் இணைய மின்னூலகத்திலும் சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நூல்கள் பல பாதுகாக்கப்பட்டுள்ளன.

சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் மறைவுக்குப் பின் பி. இரத்தின நாயகர் ஸன்ஸ் நிறுவனத்தினர், சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நூல்கள் பலவற்றை அச்சிட்டு வெளியிட்டனர்.

மதிப்பீடு

சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நூல்கள் மூலம் அர்பத்நாட் வங்கி போன்ற வங்கிகளின் திவால்நிலை, மங்களூர் ரயில் விபத்து, சிட்ஃபண்ட் மோசடிகள், கொலை வழக்குகள், குடிப்பழக்கத்தினால் உண்டாகும் தொல்லைகள், தாசிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளின் தன்மைகளை அறிய முடிகிறது

அக்காலத்து மக்களின் மனநிலை, எதிர்வினைகள் போன்ற செய்திகளைத் தாங்கியதாக சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நூல்கள் அமைந்தன. பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில், பல்வேறு சிக்கல்களுக்கிடையே தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்ட முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளராகவும், எழுத்தாளராகவும் முனிசாமி முதலியார் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • மானிடரகசியமென்னும் சரீரசாஸ்திரம்
  • கொழுத்த சிரிப்பு எனும் நிர் மூலவைத்தியர் கதை
  • உலகரகசியம் என்னும் பிரபஞ்ச உற்பத்தி
  • பூர்வ மஹா சக்கிரவர்த்திகளின் இராஜவம்ச பரம்பரை
  • மானிடரகசியமென்னும் சரீரசாஸ்திரம்
  • சிதம்பரம் நடராஜர் பஞ்சாக்ஷர பதிகம் மற்றும் வள்ளியம்மன் அலங்கார சிந்து
  • சுகந்த பரிமள சாஸ்திரம்
  • சிறுத்தொண்ட நாயனார் சரித்திரம்
  • திருத்தணிகை சுப்ரமணியர் மாத பதிகம்
  • 16 வருஷத்திய பாலகிரகதோஷம்
  • ஹிந்து பாலவைத்தியபோதினி
  • மதிராஸ் தூக்குப் பாட்டு
  • அங்ககுறி சாஸ்திரம்
  • ருது நூல் சாஸ்திரம்
  • சகாதேவ சாஸ்திரம்
  • விஷ நிவர்த்தி
  • உயிரெழுத்து மொழி மர்மம்
  • ஈட்டிக்காரனிடம் கடன் பட்டு ஓட்டம் பிடிக்கும் சிந்து
  • ஷோலாப்பூர் குரங்குகள் வழக்கு
  • தடிக்கழுதைப் பாட்டு
  • பீப்பிள்ஸ்பார்க் வழிநடை சிந்து
  • உலக ரகசியம் என்னும் பிரபஞ்ச உற்பத்தி
  • சகுன சாஸ்திரம்
  • இராமதத்வதீபிகையினது ஆபாசவிளக்கம்
  • மானிடக்குறியென்றும் திரேகக்குறி புருஷலட்சணமென்றும் வழங்கிய அங்கக்குறிசாஸ்திரம்
  • ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் தோத்திரமென்னும் திருப்பதி ஏழுமலை வெண்பா
  • கனக சாஸ்திரம்
  • அனுபோகவயித்திய பிரம்மரகசியம் முதல் பாகம்
  • அனுபோகவயித்திய பிரம்மரகசியம் இரண்டாம் பாகம்
  • அனுபோகவயித்திய பிரம்மரகசியம் மூன்றாம் பாகம்
  • அனுபோகவயித்திய பிரம்மரகசியம் நான்காம் பாகம்
  • அனுபோகவயித்திய பிரம்மரகசியம் ஐந்தாம் பாகம்
  • நாற்பத்தியெண்மர்களீண்டிய ஊர்வசி வயித்திய சிட்கா
  • வினோத விடிகதை
  • இன்பரசக் கோர்வை
  • கோஷாயி சுவாமிகள் அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம்
  • சிறுமணவூர் முனிசாமி முதலியாராலியற்றிய கலியுகச்சிந்து, கடன் பத்திரம், கலிகாலக் கண்ணாடி
  • வினோத ஜாலக் கண்ணாடி முதல் பாகம்
  • வினோத ஜாலக் கண்ணாடி இரண்டாம் பாகம்
  • வினோத ஜாலக் கண்ணாடி மூன்றாம் பாகம்
  • வினோத ஜாலக் கண்ணாடி நான்காம் பாகம்
  • வினோத ஸ்காந்தஜாலம்
  • நாற்பத்தியெண்மர்களீண்டிய ஊர்வசி வைத்திய சிட்கா
  • திருமூர்த்திதேவர்களுடைய செய்கையென்னும் கலியுகச் சமாதானம்
  • வரதராஜப் பெருமாள் உற்சவச் சிந்து
  • திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி
  • பெரியசண்முகஜாவளி என்னும் சிவசுப்பிரமணியர் பஜனைக் கீர்த்தனை
  • கும்பகோணம் மாமாங்க சரித்திரக் கும்மி
  • திருவொற்றியூர் தியாகேசர் பதிகம்
  • வடிவுடையம்மன் உயிர் வருக்க மாலை
  • நடராஜப் பத்து
  • திருவண்ணாமலை வல்லாள மகாராஜன் சரித்திரக் கும்மி
  • நாகூர் சபாபதிபத்தன் கொலை
  • அஞ்ஞானவைரி என்னும் மெஞ்ஞானத்தங்கம்
  • மாட்டு வயித்தியம்
  • மாட்டு வாகடம்
  • அகஸ்தியரருளிச்செய்த பாலகிரகதோஷ பரிகாரக்கண்ணாடி
  • நாகூர் ஆண்டவர் தெரிசனக்கும்மி
  • சிறுத்தொண்ட நாயனார் சரித்திரம்
  • செல்வப் பிள்ளை அகட விகட கலியாணச் சிந்து
  • ஆப்ரிக்கா அமெரிக்கா முதலானயிடங்களில் பெயர்பெற்ற ஸீக்வா ஜெயக்கொடி
  • மதுரை சொக்கர் அலங்காரம்
  • பதினெண்சித்தர்கள் திருவாய்மலர்ந்தருளிய வயித்தியக் கண்ணாடி
  • மதிறாஸ் தூக்குப்பாட்டு
  • நந்தனவருட சிந்து
  • ஸ்ரீ வைகுண்ட ஏகாதசிவிரதக்கும்மியென்னும் உருக்குமாங்கத மகராஜன் சரித்திரக்கும்மி
  • .உடன்கட்டையேறிய உத்தமிச் சிந்து
  • அப்பர்பர்மா வென்னும் ஆவா சண்டை
  • சிறுமணவூரென்று மருவும் செழுமணவை ஆரூரம்மன் தோத்திரம்
  • மூடமதி திறவுகோல்
  • தாரண வருஷத்திய வெள்ளம்
  • முன்னோராலியற்றிய ஜீவானந்தக்களிப்பு
  • மாயூரம் துலா காவேரி கும்மி
  • துர்முகி வருடத்தின் தொந்திரவு
  • வள்ளியம்மன் அலங்காரச் சிந்து
  • கலியுகச்சிந்து
  • தூக்குபாட்டு
  • நடராஜர் பஞ்சாட்சரப்பதிகம்
  • நாரதர் கலகம் - 4 பாகங்கள்
  • மூலிகை மர்மம் (நான்கு பாகங்கள்)
  • விஷவைத்திய சிந்தாமணி
  • குடும்பசனியன் என்னும் அகடவிகடசம்சாரி

மற்றும் பல

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jan-2025, 17:45:32 IST