under review

சாமிக்கண்ணு வின்சென்ட்

From Tamil Wiki
சாமிக்கண்ணு வின்சென்ட்
டிலைட் தியேட்டர்

சாமிக்கண்ணு வின்சென்ட் (ஏப்ரல் 18, 1883 - ஏப்ரல் 22, 1942) தென்னிந்திய சினிமா வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமை. தென்னிந்தியாவின் முதல் நிரந்தரத் திரையரங்கை கோவையில் நிறுவியவர். முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், மின்சார உற்பத்தி ஆலையும் கோவையில் நிறுவியவர்.

வின்சென்ட்‌ சாமிக்கண்ணு திரையிட்ட ’ஏசுவின்‌ வாழ்க்கை’ திரைப்படம் இந்தியாவின்‌ முதல்‌ மௌனப்படத்தை தயாரித்த தாதாசாகெப் பால்கேவுக்கு இந்துக் கடவுள்களைப் பற்றிய திரைப்படங்களை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

சாமிக்கண்ணு வின்சென்ட் ஏப்ரல் 18, 1883 அன்று கோவை மாவட்டம் கோட்டைமேட்டில் தம்பூசாமியின் மகனாகப் பிறந்தார். அவரது 22-ம் வயதில் திருச்சிராப்பள்ளி பொன்மலையில் தென்னிந்திய ரயில்வேயில் வரைவாளர் எழுத்தராக (Draftsman clerk) மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றத் துவங்கினார்.

அவருக்கு நான்கு மனைவிகள். நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என மொத்தம் ஆறு குழந்தைகள். தமிழ் திரைப்பட நடிகர் சந்திரபாபு இவரது பேத்திகளில் ஒருவரை மணந்தார்.

சினிமா

மௌனப்படங்கள்‌ சென்னையில்‌ மட்டுமே காண்பிக்கப்பட்டு வந்த காலட்டத்தில் தமிழகத்தின்‌ பிற பகுதியில்‌ இருந்தவர்களால் திரைப்படங்கள் பார்க்க முடியாமல் போனது. சாமிக்கண்ணுவும் அதைப்பற்றி கேள்விப்‌பட்டிருந்தார்‌.

டூபாண்ட் என்ற பிரெஞ்சுக்காரர் 1905-ம் ஆண்டு ‌இலங்கை முழுவதும்‌ சுற்றி 'இயேசுவின்‌ வாழ்க்கை’ என்ற படத்தைத் திரையிட்டு விட்டு பிரான்சுக்கு செல்லும்‌ வழியில்‌ அவரை சாமிக்கண்ணு சந்தித்தார்‌. தனக்கு உடல்‌நலமில்‌லாததால்‌ தன்னிடமுள்ள புரொஜக்டரையும்‌, படச்சுருளையும்‌ விற்கப்‌போவதாக டூபாண்ட் சொன்னதும்‌, உடனே 2,250 ரூபாய் பணத்தைக்‌ கொடுத்து அவற்றை வாங்கிக்‌ கொண்ட சாமிக்கண்ணு அதற்கு 'எடிசன்‌ சினிமாட்டோகிராஃப்‌' என்று பெயர்‌ வைத்தார்‌.

தனது வேலையை ராஜினாமா செய்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் திரைப்படங்களைத் திரையிடத்தொடங்கினார்[1]. அவர் திரையிட்ட ’ஏசுவின்‌ வாழ்க்கை’ படத்தை பார்த்தவர்களில்‌ ஒருவர் இந்தியாவின்‌ முதல்‌ மௌனப்படத்தை தயாரித்த தாதாசாகெப் பால்கே. திரையில் இயேசுவைப் பார்த்த பிறகே, இந்து கடவுள்களான ராமர் மற்றும் கிருஷ்ணரை கற்பனை செய்து திரைப்படங்களை உருவாக்க முடிவு செய்தார்.

சாமிக்கண்ணு தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளுக்கும் சென்று திரைப்படங்களைத் திரையிட்டார். மக்கள் அதற்கான கட்டணமோ அல்லது அதற்கு ஈடாக நெல்‌, தானியங்கள்‌, புளி போன்ற பண்டங்களோ தந்தனர். சாமிக்கண்ணு வாரச்‌சந்தையில்‌ அப்பொருள்களை விற்று பணமாக்கிக்‌ கொண்டார்.

டென்ட் கொட்டகை

சாமிக்கண்ணு புது முயற்சியாக கூடாரங்களால் கொட்டகையை( டென்ட் கொட்டகை) உருவாக்கினார். ஒவ்வொரு ஊராகச் சென்று கூடாரம் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார். நகரங்கள் அல்லது கிராமங்களுக்கு அருகிலுள்ள திறந்த நிலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்கள், தென்னிந்தியாவில் சினிமா காட்சி வணிகத்திற்கு அடித்தளம் அமைத்தன. 'எடிசனின் கிராண்ட் சினிமா மெகாபோன்' என்ற பெயரில் மெட்ராஸில் (தற்போதைய 'சென்னை’) முதல் கூடார சினிமாவை சாமிக்கண்ணு நிறுவியது குறிப்பிடத்தக்கது.

முதல் திரையரங்கம்

ஆரம்பத்தில் மாட்டு வண்டியில்‌ ஊர்‌ ஊராகச் சென்று படம்‌ காட்டிய சாமிக்கண்ணு, மக்கள்‌ உட்கார்ந்து படம்‌ பார்க்கும்‌ வகையில் தனது சொந்த ஊரான கோவையில்‌ 'வெரைட்டி ஹால்' என்ற நிரந்தரக் கொட்டகையை 1914-ம் ஆண்டு உருவாக்கினார்‌. ஆரம்பத்தில் நேரடி வர்ணனையுடன் மௌனப் படங்களைத் திரையிட்ட வெரைட்டி ஹால் இந்திய சினிமா பரிணாம வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பேசும் படங்களை திரையிடத் துவங்கியடது. பின்னாளில் அது 'டிலைட்’ என்று பெயர்‌ மாற்றம் பெற்றதுது[2].

இதர தொழில்கள்

  • சாமிக்கண்ணு அயல் நாடுகளிலிருந்து படச்சுருள்களையும், இயந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார். தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916-ம் ஆண்டு மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தை கோவையில் நிறுவினார்.
  • மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலை ஒன்றை நிறுவினார்.
  • தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு விற்க அரசிடம் அனுமதி பெற்றார்.
  • சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமி ஐயரின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

திரைப்படத் தயாரிப்பு

அரிச்சந்திரா 1933

ஆரம்பத்தில் படங்களை திரையிடுவதை மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்கேற்ப புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 1927-ம் ஆண்டு எடிசன் திரையரங்கை விலைக்கு வாங்கி அதில் தமிழ்ப் படங்களைத் திரையிட்டார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, அப்புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்தத் தொடங்கினார்.

Subhadra Parinayam 1935
சுபத்திரா பரிணயம் 1935
வள்ளி திருமணம் (1933)

1933-ம் ஆண்டில், சாமிக்கண்ணு கொல்கத்தாவில் பயனீர் திரைப்பட நிறுவனத்துடன் இணைந்து 'வள்ளி திருமணம்' திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார். பி.வி.ராவ் இயக்கத்தில் புகழ்பெற்ற திரைப்பட நடிகை டி. பி. ராஜலட்சுமி வள்ளியாக நடித்த அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது.

அரிச்சந்திரா (1935)

வள்ளி திருமணம் வெற்றியைத் தொடர்ந்து 1935-ல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அத்திரைப்படம் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது.

சுபத்திரா பரிணயம் (1935)

அடுத்து 1935-ம் ஆண்டு சாமிக்கண்ணுவின் வெரைட்டி ஹால் டாக்கீஸ் தயாரித்து வங்க இயக்குனர் ப்ரஃபுல்லா சந்திர கோஷ் இயக்கிய திரைப்படம் ’சுபத்திரா பரிணயம்’. 17000 அடி நீளமுடைய இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா பாகவதர், பபூன் சண்முகம் மற்றும் பலர் நடித்திருந்தனர்

1936-ம் ஆண்டு பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார். 1937-ல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் தொடங்கப் பட்டபோது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939-ல் ஓய்வு பெற்றார்.

மறைவு

சாமிக்கண்ணு ஏப்ரல் 22 1942-ல் மரணமடைந்தார். அவருக்கு பின் அவரது மகன் பால் வின்சென்ட் அவரது நிறுவனங்களுக்குப் பொறுப்பேற்றார்.

நினைவேந்தல்

சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாள், திரையரங்க தினமாக கொண்டாடப்படுகிறது. சாமிக்கண்ணுவின் வாழ்க்கை பற்றிய ‘பேசாமொழி’ எனும் ஆவணப்படம் 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 12:46:51 IST