under review

சாந்தகுமாரி கமலகாந்தன்

From Tamil Wiki

சாந்தகுமாரி கமலகாந்தன் (பிறப்பு: மார்ச் 2, 1965) ஈழத்துப் பெண் கலைஞர், நாடக, இசை ஆசிரியர். நாடகங்கள், இசை, கலை நிகழ்ச்சிகள் அரங்காற்றுகை செய்தார்.

பிறப்பு, கல்வி

சாந்தகுமாரி கமலகாந்தன் இலங்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செல்வரத்தினம், செல்லம்மா இணையருக்கு மார்ச் 2, 1965-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யாழிலும், முள்ளியவளையிலும் கற்றார். 1990-ல் யாழ் பல்கலைக்கழகத்தின் இசைக்கலைமாணிப் பட்டம் பெற்றார். ஆரம்ப காலத்தில் சதாசிவம், கே.கருணாகரன், ஜெகதாம்பிகை, இராமநாதன் ஐயர், பத்மலிங்கம், பாலசிங்கம் போன்றவர்களிடமும் இசை கற்றார். 2017-ல் முதுகலைமாணிப்பட்டத்தைப் பெற்றார். இவர் பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் முல்லை ஜெயா ஜெர்மனியில் தமிழரின் கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில் பங்களிப்பாற்றினார்.

தனிவாழ்க்கை

சாந்தகுமாரி கமலகாந்தனை மணந்தார். கணவர் பாடகர். இவருடைய மகனும் இசைக்கலைஞர். 1991முதல் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். 1998-ல் வீட்டில் ஏற்பட்ட ஓர் விபத்தில் மகளை இழந்தார். தொடர்ந்து தனது ஊரில் இருக்க விரும்பாமல் 2000-2004 வரை திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் சொந்த ஊர் திரும்பினார். இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இசை ஆசிரியர்களாவும் விரிவரையாளர்களாகவும் உள்ளனர்.

அமைப்புப் பணிகள்

சாந்தகுமாரி மாணவிகளை உறுப்பினர்களாகக் கொண்ட 'இன்னியம்' எனும் கீழைத்தேச வாத்தியக் குழுவினை பல வருடங்களாக நடத்தினார். 2011-ல் ஆசிரிய ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார்.

நாடக வாழ்க்கை

சாந்தகுமாரி 1979, 1980, 1981-ம் ஆண்டுகளில் மு.வித்தியானந்தா கல்லூரியில் பல இலக்கிய நாடகங்களில் நடித்து தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றார். பல நாடகங்களை நெறியாள்கை செய்து மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றார்.

கலை வாழ்க்கை

சாந்தகுமாரி 1974-ல் முள்ளியவளை நா.நடராஜ அய்யர் அறிமுகப்படுத்திய வில்லிசை நிகழ்வு நலிவடைந்தபோது தன் முயற்சியால் அதை மீட்டார். 2019-ல் வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவர்களுக்கு அதனைப் பழக்கி தேசிய மட்டத்திலும் முதலிடத்தைப் பெறச் செய்தார். இந்நிகழ்வினை நெறியாள்கை செய்தமைக்காக 'முல்லை இசைப் பேரொளி' எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர்.

நுண்கலைக்கல்லூரி

ஈழப் போராட்ட காலத்தில் கண்ணதாசன் என்பவரால் உருவாக்கப்பட்ட நுண்கலைக்கல்லூரியில் சாந்தகுமாரி ஒரு ஆசிரியராக இருந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கலைத்துறையில் பயிற்றுவித்தார். 2009-ல் இடப்பெயர்வின் போது இந்நுண்கலைக் கல்லூரி செயலிழந்து இருந்தது. 2014-ல் இவருடைய முயற்சியால் அக்கல்லூரியை உருவாக்கி அதன் தலைவராக இருந்து செயற்பட்டார். முல்லை மண்ணில் பாரம்பரியக் கலைகளான கோலாட்டம், கும்மி, மகுடி, கூத்து, வில்லிசை, குடமூதல், கரகம் என கலைவடிவங்கள் ஆகிய கிராமிய கலை வடிவங்களை மீட்டார். 2018, 2019-ம் அண்டுகளில் கலாசார திணைக்களத்தால் மன்றங்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் நுண்கலைக்கல்லூரியை வடமாகாணத்தில் முதலிடம் பெறச் செய்தார். இதில் இடம்பெற்ற வில்லிசை நிகழ்வை இவரே நெறியாள்கை செய்தார்.

எழுத்து

சாந்தகுமாரி கமலகாந்தன் கல்வி பொதுத்தராதர உயர்தரத்துக்கான கர்நாடக இசை வினாவிடைப் புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

விருதுகள்

  • 2013-ல் இலங்கை அரசால் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் பிரதீபா பிரபா விருது

நூல் பட்டியல்

  • கர்நாடக இசை வினாவிடை

உசாத்துணை


✅Finalised Page