சவலை வெண்பா
From Tamil Wiki
சவலை என்றால் குறைவு என்பது பொருள். சவலை வெண்பா, வெண்பாவிற்குரிய பொது இலக்கணங்களைப் பெற்று வரும். ஆனால், இரண்டாம் அடியில் ஒரு சீர் குறைந்து வரும். வெண்பாவில் வழமையாக வரும் 15 சீர்களுக்குப் பதிலாக 14 சீர்களில் வருவது சவலை வெண்பா.
சவலை வெண்பாவின் இலக்கணம்
"குறள்வெண் பாவிரண்டு அணைவது சவலை
வெண்பா வாம்என விளம்பினர் சிலரே."
- என்று, ‘அறுவகை இலக்கணம்’ நூல் குறிப்பிடுகிறது.
- குறள்வெண்பாக்கள் இரண்டு இணைந்து தனிச்சொல் இல்லாமல், தளை தட்டாமல் வருவது சவலை வெண்பா.
- தனிச்சொல் நீங்கிய நேரிசை வெண்பா சவலை வெண்பா எனப்படும்.
- சவலை வெண்பா, வெண்பாவிற்குரிய பொது இலக்கணங்களுடன் வரும்.
- நான்கடியில் வரும். ஆனால், இரண்டாம் அடியில் ஒரு சீர் குறைந்து வரும்.
- முதல் அடியில் நான்கு சீர்; இரண்டாம் அடியில் மூன்று சீர்; மூன்றாம் அடியில் நான்கு சீர்; நான்காம் அடியில் மூன்று சீர் எனப் பதினான்கு சீர்களில் வருவது சவலை வெண்பா.
உதாரணப் பாடல்
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்!
வெண்பாவிற்குரிய பொது இலக்கணங்களைப் பெற்று வந்துள்ள மேற்கண்ட பாடலில் இரண்டாம் அடியில் ஒரு சீர் குறைந்து வந்துள்ளதால் இது சவலை வெண்பா.
உசாத்துணை
✅Finalised Page