under review

சரவணமுத்துப் புலவர்

From Tamil Wiki

சரவணமுத்துப் புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். மொழிபெயர்ப்புகள் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சரவணமுத்துப் புலவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் மனப்புலி முதலியாருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருடைய அன்னை நல்லூர் கோயில் சட்டம்பு தெல்லிப்பிழை தொம்பிலிப்பு வைசியர்கோன் முதலியாரின் மகள். இவர் தாய்மாமன் நல்லூர் சம்மந்த புலவரின் தந்தை வேலாயுத முதலியார். இருபாலை சேனாதிராய முதலியாரிடம் கல்வி கற்றார். இலக்கண இலக்கியங்கள் பயின்றார். ஆறுமுக நாவலர் இவரின் மாணவர். பெர்சிவெல் தேசிகருக்கு சில காலம் ஆசிரியராக இருந்தார். யாழ்ப்பாண வடமாகாண மன்னனான டயிக் துரையிடம் உடையார் உத்தியோகத்தில் பணி செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

சரவணமுத்துப் புலவர் 'வேதாந்த சுயஞ்சோதி' எனும் நூலை எழுதினார். 'ஆத்மபோத பிரகாசிகை' எனும் சமஸ்கிருத நூலை தமிழில் மொழிபெயர்த்தார். உதயதாரகை பத்திரிக்கையில் வேதகிரி முதலியார்க்கும் இவருக்கும் இடையே நிகழ்ந்த தருக்கங்கள் வெளியிடப்பட்டன. இவர் பாடிய 'திருக்கோணேசர்மலைக் குறவஞ்சி' முற்றுபெறவில்லை. 'நல்லை வேலவருலா' எனும் பிரபந்தத்தைப் பாடினார் என்பர். இவர் பாடிய தனிப்பாடல் ஒன்று சுன்னகம் குமாரசாமிப்புலவரின் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் உள்ளது. இவர் மாவைக் கந்தசுவாமி பேரில் பாடிய ஊஞ்சல் இரா. சுந்தர்ராஜ சர்மாவின் 'கோவிற்கடவை' என்னும் நூலில் இணைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்
  • ஆறுமுக நாவலர்
  • வே. சம்பந்தப்புலவர்
  • அ. சிவசம்புப்புலவர்
  • வே. கார்த்திகேயையார்

மறைவு

சரவணமுத்துப் புலவர் 1845-ல் காலமானார்

நூல் பட்டியல்

  • வேதாந்த சுயஞ்சோதி
  • ஆத்மபோத பிரகாசிகை
  • திருக்கோணேசர்மலைக் குறவஞ்சி

உசாத்துணை


✅Finalised Page