சமண சமய யட்சிகள்
சமண சமயத்துப் பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் என்றும் யட்சி என்றும் கூறுவர்.
வேறுபெயர்கள்
- யட்சி
- இயக்கியர்
- ஆர்யாங்கனை
- கந்தியார்
- கவுந்தி
- குரத்தியர்
குரத்தியர்
சமண சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் குரத்தியர் என்று வேறு பெயரும் உண்டு. குரத்தி என்பது குரவர் (குரு) என்பதன் பெண்பாற் பெயராகும். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சமணசமயப் பெண்பால் துறவிகளைக் குரத்திகள் என்று கூறுகின்றன. தமிழ் நாட்டுச் சாசனங்களிலும் குரத்தியர் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில வருமாறு ஸ்ரீமிழலூர்க் குரத்திகள், சிறிவிசயக் குரத்தியார், திருச்சாணத்துக் குரத்திகள், நால்கூர்க் குரத்திகள். இளநேச்சுரத்துக் குரத்திகள், ஸ்ரீமம்மை குரத்திகள், மாணாக்கியார் அரிட்டநேமிக் குரத்திகள் ஸ்ரீபட்டினிப்படார் மாணாக்கிகள், திருப்பருத்திக் குரத்திகள், பேரூர்க் குரத்திகள், மாணாக்கியார் மிழலூர்க் குரத்திகள், கூடற் குரத்தியார், வேம்புநாட்டுக் குரத்தி, கனக வீரக் குரத்தியார், பிருதி விடங்கக் குரத்தி.
அணங்கு வழிபாடு
சமண இலக்கியங்களில் இயக்கிகள் போற்றப்படுகின்றனர். அணங்கு வழிபாடு நடைபெறும் கோவில்களில் சமண முனிவர்கள் தங்கித் தவம் செய்தனர். இதற்குச் சான்றாக அணங்குகள் உறையும் கோவில்களில் சமணப் படுக்கைகள் கிடைத்துள்ளன. மலையாண்டிப்பட்டணத்தில் பள்ளியம்மன் சமணப்பள்ளி ஓவியங்கள் இயக்கிகளை முன்னிறுத்துகின்றன. சுடுமண் பொம்மைகளை, கற்சிற்பங்களை இயக்கி வழிபாடாக வணங்குகின்றனர். பெண்கள் அனுசரிக்கும் அவ்வை நோன்பும் சமணப் பெண் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே. அவ்வையார் அம்மன்கள் உயிர்ப்பலி தெய்வங்கள் அல்ல. சமணர்கள், கண்ணகியைத் தமது சிறு தெய்வங்களில் ஒன்றாக்கி வழிபட்டனர்.
இயக்கிகள்/யட்சிகள்
- ரோஹிணி
- பிரஞ்ஞப்தி
- வஜ்ரஸ்ருங்கலா
- வஜ்ராங்குசா
- அப்ராதிகாரா (அ) ஐம்புநாதா
- புருஷதத்தா
- காளி
- மகாகாளி
- காந்தாரி
- கெளரி
- மகாஜுவாலா என்ற ஜுவாலாமாலினி
- வித்யாதேவியான மானவி
- வைரோடி
- அச்யுப்தா
- மானசி
- மகாமானசி
- பத்மாவதி
- சக்ரேஸ்வரி
- கூஷ்மாண்டி
- வராகி
- ஜினவாணி
தீர்த்தங்கரர்கள்
சமண சமயத்தினைச் சார்ந்த தீர்த்தங்கரர்கள் தங்களுக்குக் காவலாக இயக்கிகளை வைத்திருந்தனர்.
பத்மாவதி அம்மன்
பார்சுவநாதரின் இயக்கியான பத்மாவதி அவரின் சிரசின் மீது நாக வடிவத்தில் இருப்பார். தாமரை மலர் மேல் அமர்ந்திருப்பார். பாம்புத் தலையும் கோழி உடலுமான குக்குட சர்ப்பம் இவரது வாகனம். மன உறுதியைத் தருபவர்.
சக்ரேஸ்வரி
இத்தேவதை முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் இயக்கி. பொன்னிறமானவர். எட்டுக் கரங்களுடன் ஒவ்வொரு கரத்திலும் ஒரு ஆயுதத்தை ஏந்திக் காட்சியளிப்பார். இத்தேவதையின் வாகனம் கழுகு.
கூஷ்மாண்டி
நேமிநாத தீர்த்தங்கரரின் இயக்கி. அம்பிகா, தருமதேவி என்ற பெயர்களுண்டு. இரண்டு குழந்தைகளுடன் காணப்படுவார். காலடியில் சிங்க வாகனம் மேல் ஒரு பாதத்தை வைத்திருப்பார்.
வராகி
பதிமூன்றாம் தீர்த்தங்கரர் விமலநாதரின் இயக்கி. பல யாகங்களில் போற்றப்படுகிறார். தீவினை வேர்களை அறுப்பவர். இவரது வாகனம் சிம்மம்.
ஜினவாணி
சுருதா தேவி, வித்யாதேவி என்றும் அழைக்கப்படுபவர். ஆகமங்களின் கலைஞானத்தின் தலைவி. அமர்ந்த நிலையில் வீணையை ஒரு கையிலும் மற்றொரு கையில் ஓலைச் சுவடியும் ஏந்தி அருளுவார்.
உசாத்துணை
- camaNamum tamizum by mylai vengkaTacAmi -part I (in tamil script, unicode format)
- சமணம்: காவல் தெய்வங்கள் | சமணம்: காவல் தெய்வங்கள் - hindutamil.in
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Mar-2023, 16:33:27 IST