under review

சமணமலை திருவுருவகம் - மாதேவிப் பெரும்பள்ளி

From Tamil Wiki
கீழக்குயில்குடி

சமணமலைத் தொடர் மதுரைக்கு மேற்கே கம்பம் செல்லும் பகுதியில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சமணர்கள் வாழ்ந்த மலைத் தொடர் என்பதால் இதனை சமணமலை, அமணமலை போன்ற பெயர்களில் அழைக்கின்றனர். இது எண்பெருங்குன்றங்களில் ஒன்றாக "திருவுருவகம்" என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சமணப்பள்ளி "மாதேவிப்பெரும்பள்ளி" என்ற பெயரில் விளங்கியது. இம்மலைச் சார்ந்த பழமையான ஊராக குயில்குடி விளங்கியது. இதுவும் எண்பெருங்குன்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமைவிடம்

மதுரை கம்பம் நெடுஞ்சாலையில் நாகமலைபுதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது சமணமலைத் தொடர். இவ்வூருக்கு தெற்கே கீழக்குயில்குடி செல்லும் வழியில் சமணமலைத் தொடரின் முதல் குன்று உள்ளது. இரண்டாவது குன்று முதல் குன்றின் மேற்கே பெருமாள்மலையில் அமைந்துள்ளது. இதனைக் கரடிப்பட்டிபெருமாள்மலை என்று அழைக்கின்றனர். இந்த இரண்டு குன்றுகளுக்கு இடையே சமணமலைத்தொடர் கிழக்கு மேற்காக நான்கு கிலோ மீட்டர் தூரமும் 262 மீட்டர் உயரமும் கொண்டு அமைந்துள்ளது.

குயில்குடி

இம்மலைத்தொடர் சார்ந்த கிராமமாக குயில்குடி விளங்கியது. அது தற்போது பிரிந்து கீழக்குயில்குடி, மேலகுயில்குடி என இரண்டு கிராமங்களாக உள்ளன. பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக்கல்வெட்டில் இதன் பெயர் "குயிற்குடியான அமிர்தபராக்கிரமநல்லூர்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமிர்தபராக்கிரமன் என்ற பெயர் முற்காலப் பாண்டிய மன்னர்க்குரிய பெயராகும். குயில்குடியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் 'நாட்டாற்றுபுறம்’ நாட்டுப்பிரிவில் இருந்துள்ளன. மாடக்குளத்தின் பாசனக்கால்போக்கில் இவ்வூர் இருந்தமையால் மாடக்குளக்கீழ் நாட்டாற்றுப்புறத்துக் குயில்குடி என்றழைக்கப்பட்டது.

கல்வெட்டு

சமணமலையின் முதல் குன்றின் மேலுள்ள கட்டடக் கோவிலில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இம்மலைக்குரிய பெயர் திருவுருவகம் என்றும் இம்மலையில் இருந்த பள்ளியின் பெயர் மாதேவிப் பெரும்பள்ளி என்றும் குறிப்பு உள்ளது. சமணதிருவுருவங்களின் இருப்பிடமாய் (திரு+உரு+அகம்) இம்மலை திகழ்ந்ததால் இப்பெயர் அமைந்திருக்கலாம் என மதுரையைச் சுற்றி உள்ள சமணமலைகளைப் பற்றி ஆராய்ந்த முனைவர் வெ.வேதாசலம் குறிப்பிடுகிறார். இம்மலையிலுள்ள பள்ளி பராந்தக வீரநாராயணன் (பொ.யு. 860 - 905) காலத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி அம்மன்னனின் மனைவியான வானவன்மாதேவியின் பெயரைக் கொண்டு அமைந்துள்ளது.

தோற்றம்

திருவுருவகம் மலையில் உள்ள இரண்டு குன்றுகளும் (குயில்குடி, பெருமாள்மலை) பொ.யு. ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து பொ.யு. பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சமணப்பள்ளி சிறப்புடன் விளங்கியிருக்கின்றது. முதல் குன்றின் வடமேற்கு எல்லையில் சங்ககாலத்து கற்படுகைகள் நிறைந்த இயற்கையான குகைத்தளம் மேலக்குயில்குடி பகுதியில் உள்ளது. கரடிப்பட்டிப் பெருமாள்மலை குன்றிலும் இதே போன்று கற்படுகைகளுடன் கூடிய இருகுகைத்தளங்களில் மூன்று தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் பழமையான கல்வெட்டு கி.மு. ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இதனைக் கொண்டு சமணப்பள்ளி கி.மு. ஒன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கியிருக்கலாம் என முனைவர் வெ. வேதாசலம் குறிப்பிடுகிறார்.

கீழக்குயில்குடி புடைப்புச் சிற்பம்

சங்ககாலத்தில் இம்மலைக்குன்றுகள் சமண துறவிகள் வாழுமிடமாக இருந்துள்ளது. சங்ககாலத்திற்குப் பிறகு திகம்பரப் பிரிவைச் சேர்ந்த சமணர்கள் இக்குகைத்தளங்களில் வாழ்ந்தனர். பொ.யு. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பள்ளி பெருவளர்ச்சி அடைந்து, எட்டாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை வெறும் துறவிகளின் உறைவிடமாக மட்டும் இல்லாமல் திருவுருவங்களைச் செய்து வழிபடும் வழிபாட்டுத் தளமாக இருந்துள்ளது. இங்கு வசித்தவர்களும், வந்து சென்ற இல்லறத்தார்களும் தீர்த்தங்கரர் திருமேனிகளையும், இயக்கியர் உருவங்களையும் புடைப்புச் சிற்பங்களாக மலைப்பாறைகளில் செய்து வழிபட்டனர்.

பராந்தக வீரநாராயணன் போன்ற பாண்டிய மன்னர்களில் உதவியால் பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் கீழக்குயில்குடி மலை உச்சியில் கல்லாலான பெரிய தீர்த்தங்கரர் கோயில் ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் இக்கோவிலும், அதனைச் சார்ந்த சமணபள்ளியும் "மாதேவிப் பெரும்பள்ளி" என்று அழைக்கப்பட்டது.

மாதேவிப்பெரும்பள்ளி பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மூன்று நூற்றாண்டுகள் சமணத்துறவிகளும், அவர்களது மாணவர்களும் நிறைந்த சமணக் கல்லூரியாகவும் இருந்துள்ளது. முற்காலப்பாண்டியர் காலத்தில் இப்பள்ளி தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்ற முக்கிய பள்ளியாக இருந்துள்ளது. திகம்பர சமணத்தின் மூலசங்கமாக திகழ்ந்த சிரவனபெளகோளாவிலிருந்து துறவிகள் இப்பள்ளிக்கு வந்து மடம் ஒன்றையும் நிறுவியுள்ளனர்.

இப்பள்ளி அரசர்கள் கொடையால் மட்டுமன்றி நாட்டாற்றுப்புறத்து நாட்டவையினரும் குயில்குடி ஊரவையினரும் ஆதரவளித்துப் போற்றியுள்ளனர். முற்காலப்பாண்டியர் காலத்தில் பெருஞ்செல்வாக்குடன் திகழ்ந்த வேளாண் சமூக நிலவுடமையாளர்களான நாட்டாரும் (நாட்டவை உறுப்பினர்கள்), ஊராரும் (ஊரவை உறுப்பினர்கள்) இப்பள்ளிக்கு ஆதரவளித்துக் காத்துள்ளனர். பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு பின்னர் அரசு செல்வாக்கும் வேளாண் சமூகத்தினரின் ஆதரவும் இழந்து இப்பள்ளி படிப்படியே வீழ்ச்சியுற்றது. இது தற்போது மத்திய தொல்லியல் துறை பாதுகாப்பில் வரலாற்றுச் சின்னமாக (Archeological Survey of India) உள்ளது.

முதல் பள்ளி

இம்மலைத் தொடரின் முதல் பள்ளி கரடிப்பட்டி பெருமாள் மலையிலேயே தொடங்கியிருக்க வேண்டும் அதன் பின் கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி என விரிவடைந்திருக்க வேண்டும் என இதனை ஆராய்ந்த முனைவர் வெ.வேதாசலம் பெருமாள் மலையில் கிடைத்த முதல் தமிழ் பிராமிக் கல்வெட்டு மூலம் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

  • எண்பெருங்குன்றங்கள் - வெ. வேதாசலம்

காணொளி


✅Finalised Page