under review

சந்திரலேகா கிங்ஸ்லி

From Tamil Wiki

சந்திரலேகா கிங்ஸ்லி (பிறப்பு: ஜூன் 18, 1965) ஈழத்துப் பெண் ஆளுமை. கல்வியாளர். சமூகச் செயற்பாட்டாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரலேகா கிங்ஸ்லி இலங்கை நுவரெலியா லக்சபான தோட்டத்தில் மாயழகு, வேளம்மாள் இணையருக்கு ஜூன் 18, 1965-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை நுவரெலியா லக்சபான தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்கல்வியை மஸ்கெலியா சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி தமிழ் சிறப்புப்பட்டம் பெற்றார். மஸ்கெலியா சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழக நுழைவு பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர். கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரிய கல்வியியல் முதுமாணிப்பட்டம் பெற்றார். தேசியக் கல்வி நிறுவனத்தில் கல்வி டிப்ளோமா, கல்வி முகாமைத்துவ கற்கை நெறிகளை முடித்தார்.

பொறுப்புகள்

  • இலங்கை நிர்வாக சேவையில் இரண்டாம் தரத்தில் பணிபுரிகிறார்.
  • இலங்கையில் உள்ள நான்கு ஆசிரியர் கலாசாலைகளுள் கொட்டகலை ஆசிரியர் கலாசலையின் அதிபராக உள்ளார்.
  • புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் கட்சி உறுப்பினர்.
  • தேசிய கலை இலக்கிய பேரவையின் மலையகக் கிளையின் செயலாளர், உறுப்பினர்.

அமைப்புச் செயல்பாடுகள்

சந்திரலேகா கிங்ஸ்லி பெண்சிந்தனை அமைப்பின் வழியாக பெண் சமவுரிமை தொடர்பில் பல போராட்டங்களை முன்னெடுத்தார். சமூக விடுதலை சார்ந்து இன, மத, வர்க்கம் கடந்து செயற்பட்டார். மருத்துவ முகாம்கள் நடத்தினார். அறிவியல் சம்பந்தமான புத்தக விமர்சனங்கள் எழுதினார். ஊடறுவின் ஊடாக மலேசியா, இந்தியா, ஜெர்மன், இலங்கை ஆகியவற்றில் நடைபெற்ற பெண்ணிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இரண்டு ஆவணப்படங்களை பதிவிட்டுள்ளதோடு, ஊடறுவின் செயற்பாடுகளில் ஊடறு றஞ்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் சந்திலேகா.

இலக்கிய வாழ்க்கை

சந்திரலேகாவின் கவிதை, கட்டுரைகள் தினகரன், தினக்குரல், வீரகேசரி ஆகிய நாளிதழ்களிலும் 'தாயகம்', 'ஜீவநதி' ஆகிய இதழ்களிலும் ஊடறு இணையத்தளத்திலும் வெளிவந்தன. பெண்ணியம், சமூக விடுதலை சார்ந்து எழுதி வருகிறார். 'புதிய சங்கம்' என்ற கவிதைத் தொகுப்பை கணவருடன் இணைந்து வெளியிட்டார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • புதிய சங்கம்

உசாத்துணை


✅Finalised Page