under review

சதாசிவ பிரம்மேந்திரர்

From Tamil Wiki
சதாசிவ பிரம்மேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர் (சிவராமகிருஷ்ணன்) (18-ம் நூற்றாண்டு), தமிழ்நாட்டின் அத்வைதம் சார்ந்த ஆன்மிக ஞானிகளுள் ஒருவர். அவதூத பரம்பரையைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சதாசிவ பிரம்மேந்திரர், 18-ம் நூற்றாண்டில், மதுரையில் வாழ்ந்த சோமநாத அவதானி - பார்வதி அம்மாளுக்குப் பிறந்தார். இயற்பெயர் சிவராமகிருஷ்ணன். வேதப் பயிற்சியை உள்ளூர் சாஸ்திரிகளிடம் கற்றுக் கொண்டார். திருவிசை நல்லூர் குருகுலத்திற்குச் சென்று ராமபத்ர தீக்ஷிதர் என்ற ஞானியிடம் மேற்கல்வி பயின்றார். சகல சாஸ்திரங்களையும் கற்றார். பால்ய விவாகம் அக்காலத்தில் சகஜம் என்பதால் உறவினர் பெண்ணுடன் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது.

ஆன்மிக வாழ்க்கை

சிவராமகிருஷ்ணன் வளர வளர ஆன்மிக ஆர்வம் வளர்ந்தது. துறவின் மீது நாட்டம் உண்டானது. அன்னை அதனை மறுத்து இல்லற வாழ்வை ஏற்க அவரை வலியுறுத்தினார். சிவராமகிருஷ்ணன் அதனை ஏற்க மறுத்தார். தனது குருவிடம் இதனைத் தெரிவித்தார். சிவராமகிருஷ்ணனனின் உள்ளத் தவிப்பை உணர்ந்துகொண்ட குரு ராமபத்ர தீக்ஷிதர், அவரை யோகீந்திரர் ஸ்ரீ பரம சிவேந்திரரிடம் அழைத்துச் சென்றார்.

துறவு

யோகீந்திரர் ஸ்ரீ பரம சிவேந்திரர், சிவராமகிருஷ்ணனின் மனோ ஆற்றலைப் பலவிதங்களில் பரிசோதித்தார். நல்லதொரு நாளில் அவருக்கு மந்திர தீக்ஷை அளித்து, 'சதாசிவ பிரம்மேந்திரர்' என்ற தீக்ஷா நாமத்தைச் சூட்டினார். அதுமுதல் சிவராம கிருஷ்ணன், சதாசிவ பிரம்மேந்திரர் ஆனார். குருவிடமிருந்து பாவ யோகம், அபாவ யோகம், மந்திர யோகம், ஸ்பரிச யோகம், மஹா யோகம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார்.

சதாசிவ பிரம்மேந்திரர் ஆலயம்
வாதம் - விவாதம்

சதாசிவ பிரம்மேந்திரர், குருவின் சார்பாக நாட்டின் பல இடங்களுக்கும் சென்று வாதங்களில் கலந்துகொண்டார். வாதங்களில் வென்றார். குருவின் கட்டளைப்படி மைசூர் சென்ற சதாசிவ பிரம்மேந்திரர், சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகப் பொறுப்பேற்றார். சமஸ்தானத்திற்கு வரும் பண்டிதர்களை பல்வேறு கேள்விகள் கேட்டும், தர்க்கித்தும் வாதங்களில் வென்றார். நேருக்கு நேர் வாதிப்பது மட்டுமல்லாமல், தான் கூறுவது மட்டுமே சரி என்று வாதித்தும் (ஜல்பா வாதம்), பிறர் கூறுவது எதுவாக இருந்தாலும் அது அனைத்துமே தவறு என்றும் (விதண்டா வாதம்) வாதித்துப் பல பண்டிதர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

இத்தகவல்கள் பிற சீடர்கள் மூலம் குரு பரம சிவேந்திரரின் கவனத்துக்கு வந்தது. தான் போதித்த ஆன்ம ஞான யோகப் பயிற்சிகளில் கவனம் செலுத்தாது வெற்று வாதுச் செயல்களில் சதாசிவ பிரமேந்திரர் கவனம் செலுத்துவது கண்டு குரு வருந்தினார். அவரது ஆன்ம வளர்ச்சிக்கு அது உதவாது என்று நினைத்த அவர், சீடரைத் தடுத்தாட் கொள்ள எண்ணினார். சக சீடர் ஒருவரிடம், 'குருநாதர் தங்களை தரிசிக்க விரும்புகிறார்' என்று சதாசிவரிடம் கூறும்படித் தகவல் சொல்லி அனுப்பினார்.

தகவல் அறிந்த சதாசிவர் சீடனான தன்னைப் போய் குரு, 'தரிசனம் செய்ய வேண்டும்' என்று சொன்னதன் உட்பொருளை உணர்ந்து வருந்தி, உடன் சமஸ்தானப் பதவியைத் துறந்து குருவை நாடி வந்தார்.

மௌன யோகி

குருவைக் கண்டு தொழுது வணங்கி மெய், வாய், கை புதைத்து நின்றார் சதாசிவர். அதைப் பார்த்த குரு "வெறுமனே வாயில் கை பொத்தி நின்றால் போதுமா? ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்கக் கற்கவில்லையே. முதலில் உன் வாயை அடக்கு" என்று கண்டித்த அந்தக் கணம் முதல் இனி பேசுவதில்லை என்று மனதுக்குள் முடிவு செய்த பிரம்மேந்திரர், குருவின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, மௌன யோகியாய் அவ்விடம் விட்டு நீங்கினார்.

தவ வாழ்க்கை

சதாசிவ பிரம்மேந்திரர், மானுடர் அதிகம் வாழும் பகுதியில் வசித்தால் தனது தவயோகத்திற்கு அது இடையூறாக இருக்கும் என்று கருதி, மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசித்தார். யோகத்தின் உச்ச நிலையை அடைந்து தான், தனது என்ற எண்ணம் நீங்கிய 'ஸ்திதப் பிரக்ஞன்' ஆனார் எனக் கூறப்படுகிறது. அதுமுதல் பிரம்ம நிலையில் இருப்பது வழக்கமானது. நாளடைவில் ஊன், உறக்கம், உடை நீங்கியது. தான், தனது என்ற உணர்வற்று அவதூதராக நடமாட ஆரம்பித்தார்.

சதாசிவ பிரம்மேந்திரர் அற்புதச் செயல்

தொன்மம்

சதாசிவ பிரம்மேந்திரர் பல்வேறு அற்புதங்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி தருவது, ஓரிடத்தில் தோன்றி, பிறிதோரிடத்தில் மறைவது போன்ற அஷ்டமா சித்திகளும் அவர் கைவரப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்களில் சில...

அற்புதம் - 1

ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அவரை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவ பிரம்மேந்திரர், ரத்தம் வழிந்த தலையைத் துடைத்து விட்டுக் கொண்டார். உடனே ரத்தம் வருவது நின்று விட்டது. காயமும் ஆறியது. எதுவுமே நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார் சதாசிவ பிரம்மேந்திரர்.

அற்புதம் - 2

ஒரு சமயம் தன் உணர்வற்று, பிரம்மத்தில் லயித்தபடி காட்டு வழியில் நடந்து சென்று கொண்டிருந்தார் சதாசிவ பிரம்மேந்திரர். அந்தக் காட்டில் மன்னன் ஒருவன் பாடி வீடமைத்துத் தங்கியிருந்தான். அவனுக்கு உதவியாகப் பல படை வீரர்கள் அங்கே உடனிருந்தனர். அவன் ஏதோ யோசித்தவாறே அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்த போது அவதூதராய், மகான் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அளவில்லாக் கோபம் உண்டாயிற்று. 'கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இப்படி நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறாயே!' என்று சினந்தவன், உடனே தனது வாளை உருவி அவரது ஒரு கையை வெட்டி விட்டான். அது அப்படியே கீழே விழுந்தது. அதிலிருந்து இரத்தம் பெருகியது. ஆனால் சதாசிவரோ அதுபற்றிய நினைவு ஏதுமில்லாமல் தன் பாட்டுக்கு நடந்து போய்க் கொண்டே இருந்தார்.

திகைத்துப் போனான் மன்னன். 'ஓ, இவர் மிகப் பெரிய மகான் போலும். அதுதான் எந்த உணர்வும் எழாமல் சென்று கொண்டே இருக்கிறார். ஐயோ இவருக்கு மிகப் பெரிய அபராததத்தைச் செய்து விட்டேனே! என்னை இறைவன் மன்னிக்கவே மாட்டார்!' என்று அழுது அரற்றியவாரே மகானின் வெட்டுப்பட்ட கையை எடுத்துக் கொண்டு வேகமாக அவரைப் பின் தொடர்ந்து ஓடினான்.

மகானின் முன்னால் போய் நின்று, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன், தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். வெட்டிய கையை அவரிடம் கொடுத்தான். தன் நினைவு வரப் பெற்ற சதாசிவ ப்ரம்மம், உடன் அந்த வெட்டிய கையை வாங்கி, வெட்டுப்பட்ட இடத்தில் பொருத்திக் கையைத் தடவ, அது நன்கு ஒட்டிக் கொண்டு உடனேயே முன்பு போல் ஆனது. அந்த இடத்தில் காயமோ, தழும்புகளோ ஏதும் இல்லை. திகைத்த மன்னன் அவரைப் போற்றித் துதித்தான். தன் செயலை மன்னிக்குமாறு வேண்டினான். அவனை ஆசிர்வதித்த பிரம்மம் அவ்விடம் விட்டு நீங்கினார்.

- என்பதாக சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.

சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி, நெரூர்

குரு உபதேசம்

ஒரு சமயம் புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சதாசிவ பிரம்மேந்திரர் சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் தொடர்ந்தும் சதாசிவத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.

பின் ஒருநாள், 'என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்' என சதாசிவ பிரம்மேந்திரரைத் தொழுதார் மன்னர். இரங்கிய சதாசிவ பிரம்மேந்திரரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலைத் தனது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வந்தார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

கீர்த்தனைகள்

சதாசிவ பிரம்மேந்திரர் பல்வேறு கீர்த்தனைகளை இயற்றினார். 'பரம ஹம்ஸ' என்னும் முத்திரை வருமாறு அவற்றை அமைத்தார். 'மானஸ ஸஞ்சரரே', 'சர்வம் ப்ரம்ம மயம்', 'பிபரே ராமரஸம்', 'பஜே ரகுவீரம்', 'பஜே கோபாலம்', 'ப்ரூஹி முகுந்தேதி' போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளை இயற்றினார்.

நூல்கள்

'பிரம்ம சூத்ர வ்ருத்தி', 'ப்ரம்ம தத்வ பிரகாசிகா', 'யோக சுத்தாகரா', 'ஆத்ம வித்ய விலாஸம்', 'அத்வைத ரஸ மஞ்சரி', போன்றவை சதாசிவ பிரம்மேந்திரர் இயற்றிய நூல்கள்.

மகா சமாதி

சதாசிவ பிரம்மேந்திரர், பொயு. 1753-ம் ஆண்டு, சித்திரை மாதத்து தசமி திதியில், கரூரை அடுத்த நெரூரில், ஜீவசமாதி ஆனார்.

சமாதி ஆலயம்

சதாசிவ பிரம்மேந்திரரின் மறைவுக்குப் பின் அவரது ஆக்ஞைப்படி, அவரது மறைவிடத்தில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட லிங்கம் ஸ்தாபிக்கப்பெற்றது. ஜீவசமாதி ஆலயமாகத் திகழ்கிறது.

வரலாற்று இடம்

இந்திய ஆன்மிகத் தத்துவ ஞானிகள் வரிசையில், அத்வைதம் சார்ந்த அவதூத பரம்பரையில் வந்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். அத்வைத நோக்கில் பல்வேறு கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றினார். தமிழ்நாட்டின் அத்வைத ஞான முன்னோடிகளுள் ஒருவராக அறியப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jan-2026, 15:18:17 IST