under review

கைகேயி வரமும் அனுமன் பிறப்பும் (இராமாயண நாட்டார் கதை)

From Tamil Wiki
தசரதர், கைகேயி, இராமன், பின்னால் கூனி
அஞ்சனையுடன் அனுமன்

இக்கதை தமிழகத்தில் வழக்கில் உள்ள இராமாயணம் குறித்த நாட்டார் கதைகளுள் ஒன்று. கோசலை, சுமத்திரை, கைகேயி கருவுற்றிருந்த போது மூவருக்கும் தசரதன் தரும் வரமாகச் சொல்லப்படுவது. அங்கிருந்து அனுமனின் பிறப்பையும் சொல்லும் வாய்மொழி கதை.

கைகேயி வரமும் அனுமன் பிறப்பும் கதை

பிரம்மனின் சபையில் அப்சரப் பெண் ஆடிக்கொண்டிருந்தாள். அவளது ஸ்தனம் மிகப் பருத்ததாக இருந்தது. அவள் ஆடிய போது அவை இரண்டும் குலுங்கின. அப்போது அவள் வேண்டுமென்றே ஸ்தனங்களின் மேலிருந்த ஆடைகளை நழுவவிட்டாள். அவளது அழகில் தேலோகத்தில் எல்லோரும் மயங்கி அவள் பின்னால் சென்றனர். இதனைக் கண்ட பிரம்மா கோபமுற்றார். "தன்னை மறந்து ஆடிய நீ என்னை அவமதித்தாய். சபையின் நடைமுறையையும் மீறினாய். அதனால் நீ பருந்தாகிப் போவாய்" என்று சாபம் கொடுத்தார்.

பிரம்மன் சாபமிட்டவுடன் அந்த அப்சரப் பெண் பருந்தாக மாறினாள். அவள் பிரம்மனின் பாதம் பணிந்தாள். "படைப்பின் முதலோனே, உலக கர்த்தாவே என் மார்பு அளவுக்கு மீறிப் பருத்து இருந்ததால் வந்த அகங்காரத்தால் அப்படி ஆடிவிட்டேன். மன்னிக்க வேண்டும். எனக்குச் சாப விமோசனம் தர வேண்டும்." என்றாள்.

அவள் பேச்சை கேட்ட பிரம்மன் அவளை மன்னித்தார். "அயோத்தி அரசன் தசரதன் மண்ணில் குழந்தை வேண்டி தவமிருக்கிறான். அவனது தவத்தின் பயனாக அவனுக்கு ஒரு பாத்திரத்தில் பாயசம் கிடைக்கும். இந்தப் பாயாசத்தை அருந்தினால் தெய்வாம்சம் பொருந்திய குழந்தை பிறக்கும் என்பது விதி. ஆகவே தசரதன் அதனை மூன்று பங்காகப் பிரித்து கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூன்று மனைவிகளுக்கும் கொடுக்கப் போகிறான். நீ பருந்தாகப் போய் தசரதன் கைகேயிக்கு கொடுத்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அஞ்சனா மலையில் தவம் செய்துக் கொண்டிருக்கும் பெண்ணின் மடியில் போட்டு விடு. அதனை நீ செய்ததும் உன் சாபம் தீரும். மீண்டு அப்சரப் பெண்ணாக என் லோகத்திற்கு வருவாய். உன் ஸ்தனத்தின் அளவும் குறையும்" என்றார்.

பருந்தாக இருந்த அப்சரப் பெண் பிரம்மா சொன்னப் படி கைகேயியின் கையிலிருந்த பாயசப் பாத்திரத்தைப் பறித்துக் கொண்டு போய் அஞ்சனா மலையில் தவம் செய்துக் கொண்டிருந்த அஞ்சனையின் மடியில் இட்டாள். அவள் மடியில் விழுந்த கணமே அந்த பாயசம் இருந்த பாத்திரம் குழந்தையாக மாறியது. அந்த குழந்தையே அனுமன் எனப்பட்டது.

கைகேயின் பாத்திரத்தை பருந்து பறித்து சென்ற விஷயம் தசரதனுக்குச் சென்றது. அவரிடமிருந்து கோசலையும், சுமத்திரையும் அறிந்தனர். அவர்கள் இருவரும் தங்களது பாத்திரத்தில் இருந்த பாயசத்தில் பாதி பங்கை கைகேயிடம் கொடுத்தனர். இருவரும் கொடுத்ததால் இரண்டு பங்கு பாயாசம அவளுக்கு கிடைத்தது. பாயசத்தைக் குடித்த மூன்று மனைவிகளும் கர்ப்பம் அடைந்தனர்.

மூவருக்கும் மாதம் ஏழானது. அப்போது ஒரு நாள் அரண்மனையில் மூவரும் இருக்கும் போது நாரதர் வந்தார். நாரதர் தசரதரின் பத்தினிகளிடம், "உங்களுக்கு கர்ப்பகால ஆசை இருந்தால் தசரதரிடம் சொல்லலாமே. ஆசையை அடக்கி வைக்க வேண்டாம்" என்றார். பின்னர் நாரதர் தசரதரிடம் சென்று, "கர்ப்பிணியாய் இருக்கும் மனைவிகளின் ஆசை என்ன என்பதைக் கேட்டு நீ பூர்த்தி செய். அவர்கள் தங்கள் ஆசையை நேரடியாகச் சொல்லத் தயங்குவர். நீ தான் கேட்க வேண்டும். நீயாகப் போய்க் கேள்" என்றார்.

நாரதரின் சொல்லுக்கு இணங்க தசரதன் தனக்கு பிடித்த மனைவியான கைகேயியிடம் முதலில் சென்றான். அவளை அணைத்து முகத்தில் முத்தம் தழுவினான். பின், "உன் ஆசை என்ன வெட்கப்படாமல் சொல்லுவாய்" எனக் கேட்டான். கைகேயி, "அரசே எனக்குப் பிறக்கும் மகன் இந்த நாட்டை ஆள வேண்டும். கோசலைக்குப் பிறக்கின்ற மகன் காட்டுக்குச் செல்ல வேண்டும்" என்றாள். அவள் கேட்டதும் தசரதனின் முகம் மாறியது. "பெண்ணே இது சரியல்லவே" என்றான். கைகேயி, "கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றுவதாய் சத்தியம் செய்துவிட்டு ஏமாற்றுவது சரியல்ல. உம்மால் முடிந்தால் பாரும், இல்லையென்றால் விட்டுவிடும்" என்றாள். தசரதன் செய்வதறியாது, "சரி அப்படியே செய்கிறேன்" என அவளுக்கு வாக்குக் கொடுத்தான்.

அங்கிருந்து சுமத்திரையின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே சுமத்திரையிடம் அதே கேள்வியைக் கேட்டான். அவள், "எனக்குப் பிறக்கப்போகின்ற மகனும் கோசலைக்குப் பிறப்பவனும் எந்நாளும் இணைபிரியாமல் இருக்க வேண்டும். இதுவே என் ஆசை" என்றாள். தசரதன் சுமத்திரையின் சொற்களால் மகிழ்ச்சியுற்று, "அப்படியே நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.

இறுதியாகக் கோசலையிடம் சென்றான். "உன் ஆசை என்ன?" என்று கேட்டான். கோசலை, "அரசே நம்முடைய கல்யாணத்தின் போது இராவணன் என்னை அவமானம் செய்தான். எனக்குப் பிறக்கும் மகன் இராவணனைப் பழிவாங்க வேண்டும்" என்றாள். தசரதன், "நிச்சயமாக அதை நம் மகன் செய்வான்" என வாக்குக் கொடுத்தான். அப்போது கோசலையின் வயிற்றில் இருந்து ஒரு குரல், "இலட்சுமணா கோதண்டத்தை எடு; துஷ்ட இராவணனைத் துவம்சம் செய்வோம்" என்றது.

அக்குரல் கேட்டதும் கோசலைக்கு ஏதோ ஒரு துஷ்ட தேவதை தன்னைப் பிடித்துக் கொண்டதாகப் பயம் வந்தது. அவள் அங்கேயே மயங்கி விழுந்தாள். இந்த நேரத்தில் நாரதர் அங்கே வந்தார், "பெண்ணே இனி நடக்கப் போவதையே உன் கருப்பையிலிருக்கும் குழந்தை சொன்னது. கவலையை விடுக" என்றார்.

உசாத்துணை

  • இராமன் எத்தனை இராமனடி! அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு


✅Finalised Page