under review

கென்யா மக்கள்

From Tamil Wiki
கென்யா மக்கள்

கென்யா : மலேசியாவிலும் இந்தோனேசியவில் வாழும் பழங்குடி இனக்குழுக்களில் ஒன்று. சரவாக் பழங்குடிகளில் ஒரு பிரிவு

இனப்பரப்பு

சரவாக்கில் உள்ள கென்யா மக்கள் பலர் பலுய் (Balui) மற்றும் பாரம் (Baram) ஆற்றின் மேல்தளத்தில் இருக்கும் வெப்பமண்டல காட்டுப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மற்றும் சிலர் சமீபத்தில் நகரமயமாக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

2000-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி கென்யா மக்களின் மொத்த மக்கள் தொகை 69,256. அவற்றுள், 25,000 மக்கள் சரவாக்கிலும், 44,000 மக்கள் இந்தோனேசியாவிலும் (கிழக்கு கலிமந்தன்) வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு

கென்யா மக்கள் நீண்ட காலமாகவே கலிமந்தான் தீவுப்பகுதியிலும் சரவாக் மாநிலத்திலும் வாழ்ந்து வருகின்றனர். கயான், கென்யா மக்களுக்கிடையிலான பண்பாட்டுத் தொடர்பை (Usun Apau) என்றழைக்கின்றனர். உசுன் அபாவ் என்பது இரு இனக்குழுவின் பூர்வீக நிலமான ரெஜாங் ஆற்றங்கரையையும் அதையொட்டிய பகுதிகளையும் குறிக்கும் சொல்லாகும்.

கென்யா மக்கள்

கென்யா மக்கள் பல குறுங்குழுக்களாக வாழ்ந்தனர். ஒவ்வொரு குறுங்குழுவுக்கும் தனிப்பெயரும் தலைவரும் அமைந்திருப்பர். குறுங்குழு உறுப்பினர்கள் பெருகும் போது பல சிறிய கிராமங்களாகத் தங்களைப் பிரித்துத் தனித்தனித் தலைவர்களை நியமித்துக் கொள்வர். கென்யா இனத்தில சமூகப்படிநிலைகள் இருந்தன. ஆனால், கலப்பு மணங்களால் சமூகப் படிநிலையின் வரையறைகள் மெல்ல மறைந்து வருகின்றன.

சமயம்

பாரம்பரியமாக கென்யா பழங்குடி மக்கள் ‘அபாவ் லகன்’ (Apau Lagan) மற்றும் ‘புன்கன்’ (Bungan) ஆகிய ஆன்மவாதம் சார்ந்த மரபுகளின் மீது நம்பிக்கைக் கொண்ட சமூகமாகும். பெனான் பழங்குடி மக்களைப் போல் இவர்களும் தங்களைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் ஆத்மா இருப்பதாக நம்புகிறார்கள். இயற்கையின் ஒவ்வொரு அறிகுறிகளும் தனித்தனி அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொண்டுள்ளது என தீர்க்கமாக நம்புகிறார்கள். பொதுவாகவே, இந்த அறிகுறிகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களின் அன்றாட வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது எனக் குறிப்பிடுகின்றனர். கென்யா மக்களின் வீடுகளைச் சுற்றிலும் தங்கள் வாழ்க்கைக்கு உதவும் ஆத்மாக்களின் உருவங்கள் வரையப்பட்டிருக்கும். கென்யா மக்கள் கிருஸ்துவச் சமயத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் பூர்வ நம்பிக்கைகளை மெல்ல கைவிடத் தொடங்கினர்.

மொழி

சரவாக் மாநிலத்தின் பராம் ஆற்றங்கரையை ஒட்டியப் பகுதியில் பேசப்படும் மொழியான கென்யா மொழி, கென்யா பழங்குடி மக்களின் தாய்மொழியாக அமைந்திருக்கிறது. கென்யா மொழியும் கயான் மொழியும் பலவகையில் நெருங்கிய தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன, கென்யா மொழி ஆஸ்திரோனேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

வாழ்க்கை முறை

வகுப்புவாத வீட்டு (communal house) அமைப்பு முறையில் நிலத்தூண்களுக்கு மேல் 400க்கும் மேற்ப்பட்ட முற்றங்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் சில கென்யா மக்கள் வசிக்கின்றனர். முற்றங்களின் பின்புறத்தில், குடும்பங்களுக்கான அறைகளின் வரிசை மற்றும் ஒரு பரந்த மூடப்பட்ட தாழ்வாரம் (veranda) அமைக்கப்பட்டிருக்கும். இந்த தாழ்வாரம் பொதுவான பணியிடமாகவும் பண்டிகை நாட்களில் மக்கள் கூடும் இடமாகவும் உள்ளது. அதே போல், சிலர் ஆற்றோரங்களில் நீண்ட வீடுகளில் வசிக்கின்றனர். இதனால் அவர்கள் மீன் பிடிப்பதற்கும் படகுகளைப் பயன்படுத்தி மற்ற இடங்களுக்குச் செல்வதற்கும் சுலபமாக உள்ளது. 1,200 அடி நீளமுள்ள பெலியான் போன்ற கடின மரக் கம்பங்களைக் கொண்டு இந்நீண்ட வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த வீடுகளிலும் அதே போல் அறை வரிசையும் முன்பக்கத்தில் தாழ்வாரங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.

கென்யா மக்கள் நடனம்

இவர்கள் கயான் பழங்குடியினருடன் பல வழிகளில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என சொல்லப்படுகின்றது. கென்யா மற்றும் கயான் பழங்குடியினரிடையே பல கலாச்சாரங்களும் பழக்கவழக்கங்களும் பெருமளவில் பொதுவானதாக இருந்தாலும் கூட அவர்கள் பேசும் மொழிகள் வேறுபட்டுள்ளது. கென்யா மக்களின் முதன்மையான தொழிலாக இருப்பது விவசாயம். மற்ற பழங்குடியினரைப் போல் அல்லாமல் கென்யா மக்கள் விவசாயம் செய்யும் செயல்முறை சற்று வேறுபட்டே உள்ளது. காடுகளில் சிறிய பகுதிகள் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு பின், அதன் சாம்பலில் நெல் விதைக்கப்பட்டு உலர் அரிசியை சாகுபடி செய்வார்கள்.

நம்பிக்கைகள்

ஆதிகாலங்களில் கென்யா மக்கள் மனித தலைகளை சடங்கு வழிப்பாடுகளுக்குப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கென்யா பழங்குடி மக்கள் தங்கள் எதிரிகளின் தலைகளை வெட்டி கிராமத்திற்குத் தங்களின் வீரத்தின் நினைவுப் பொருளாக கொண்டு வருவது வழக்கம். யார் நிறைய எதிரிகளின் தலைகளைக் கொண்டு வருகிறார்களோ அவர்களே கிராமத்தின் வீரம் மற்றும் மரியாதைக்குரிய நபராக போற்றப்படுவர். அதுமட்டுமல்லாமல், பாரம்பரிய வழக்கப்படி வழிபாட்டு விழாவின்போது கொண்டு வரப்படும் தலையானது ‘உலே’ அயாவ்’ (‘Ule’ Ayau’) சடங்கிற்கும் பயன்படுத்தப்படும்.

அணிகள்/ அலங்காரம்

கூடை

கென்யா மக்கள் தனித்த கலையுணர்வு மிக்க கைவினைப்பொருட்களைத் தயாரிக்கின்றனர், பிரம்புகளைக் கொண்டு பாய் பின்னுதல், பனைமர இலைகளைக் கொண்டு தலையணி பின்னுதல், மீன் பிடி வலைகளைப் பின்னுதல், மணிகளைக் கொண்டு கழுத்தணிகளைச் செய்தல் ஆகியவற்றைச் செய்கின்றனர், கென்யா மக்கள் விதவிதமான காதணிகளை அணிந்து கொள்கின்றனர். பிறந்த ஒரு வாரத்திலே பெண் குழந்தைகளுக்குக் காது குத்தப்பட்டுக் காதணிகள் அணிவிக்கப்படுகின்றன. வளர வளர இன்னும் அதிகமான துளைகள் குத்தப்பட்டு காதணிகள் அணிவிக்கப்படுகின்றன. முதியப் பெண்கள் நெஞ்சுப்பகுதிவரையிலும் தொங்கும் காதுகளுடன் காதணிகளை அணிந்திருப்பர்.அதைப் போல, பச்சை குத்தும் வழக்கமும் கென்யா மக்களிடம் உள்ளது. புறங்கைகள், முழங்கால் பகுதிகளில் மட்டுமே பெண்கள் பச்சை குத்திக் கொள்கின்றனர். பல விலையுயர்ந்த மணிகளைக் கழுத்தணிகளாக அணிந்து கொள்கின்றனர். வெளிர் நீலம், பச்சை ஆகிய நிறங்களில் இவை அழகாக அமைந்திருக்கின்றன. இந்த மணிகளைக் குடும்பச் சொத்தாக எண்ணித் தலைமுறையாகப் பாதுகாக்கின்றனர். (Lukut Sekala) எனப்படும் அருமணி மனித வாழ்வுக்கு நிகரான மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

திருமணச்சடங்குகள்

கென்யா பழங்குடியினரின் சமுகத்தில் திருமணத்தை ‘பெபெட்டோ’ (Pepeto) என்று அழைப்பார்கள். பழங்கால வழக்கப்படி, மணமகன் பெண் குடும்பத்தின் கோரிக்கைப்படி மணமகளுக்குச் சீர் கொண்டு வர வேண்டும். திருமண நாள் அன்று மணமகனும் அவரது உறவினர்களும் வரும்போது மணமகளின் பிரதிநி வீட்டின் வாசல் கதவிற்கு முன் பாதுகாவலராக நிற்பார். கோரிக்கையின்படி அனைத்து பொருள்களும் கொண்டு வரப்பட்டுள்ளதா என்று அவர் சரி jபார்த்து உறுதி செய்த பிறகே மணமகனையும் அவர்தம் உறவினர்களையும் உள்ளே செல்ல அனுமதிப்பார். மணமகன் உண்மையில் மணமகளை திருமணம் செய்ய விரும்புகிறாரா என்பதை சோதிக்க இச்சடங்கு நிகழ்கிறது. கென்யா மக்கள் திருமண நிகழ்வு ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்று சேர்ந்து நீண்ட வரிசையில் ‘லெகோபா’ (Lekopa) என்ற நடனத்தை ஆடி தொடங்குவார்கள். பின், மணமகனும், மணமகளும் முன் வந்து அமர அழைக்கப்படுகிறார்கள். அதன் பிறகு, மரக்கட்டைகளை எடுத்து வைக்கும் சடங்கு நடத்துவதற்கு மணமக்கள் வீட்டின் கீழ் பகுதிக்கு அழைத்துச் செல்வார்கள். வம்சாவளி தரவரிசைப்படி மணமக்கள் மரக்கட்டைகளை எடுத்து அடுக்க வேண்டும். இச்சடங்கு 8 சுற்றுகளாக நடத்தப்படும் எனச் சொல்லப்படுகிறது. புதுமணத் தம்பதிகள் திருமணமாகிய பின் வாழ்க்கையின் திருப்பங்களையும் துன்பங்களையும் ஒன்றாக எதிர்கொண்டு வாழத் தயாராக இருக்க வேண்டும் என்பதை இச்சடங்கு எடுத்துரைப்பதாக கருதப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு, மணமகளின் பெற்றோரின் தியாகங்களுக்கும் அன்புக்கும் மரியாதைச் செலுத்தும் விதமாக மணமகன் 1 அல்லது 2 ஆண்டுகள் தன் மனைவியின் குடும்பத்துடன் வாழ வேண்டும். பின், மணமகனின் பெற்றோருக்கு மணமகளின் பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை அல்லது மணமகளின் பெற்றோருக்கு மணமகனின் நடத்தை பிடிக்கவில்லை போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் மணமக்கள் விவாகரத்து செய்துக்கொள்ளலாம். இதற்கு தண்டனையாக ‘செரி காசிஹ்’ (seri kasih) எனப்படும் வழக்கத்தின்படி இரு தரப்பு பெற்றோர்களும் ஒரு பன்றி அல்லது மதிப்புமிக்க பொருட்களை அபராதமாக வழங்க வேண்டும். பணத்தின் பயன்பாடு அதிகரித்த பின், அபராதத்தின் தொகை 5000 ரிங்கிட்டாக மாறியது. இந்த விவாகரத்தை ஊர் தலைவர் அல்லது உயர் பதவியில் இருப்பவர் நியாயமான விசாரணையுடன் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் எனக் குறிப்பிடுகின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page